From Wikipedia, the free encyclopedia
எசுபார்த்தா அரசு கிரேக்க பழங்காலத்தின் மிகப்பெரிய இராணுவ நில சக்தியாக இருந்தது. பாரம்பரியக் காலத்தில், எசுபார்த்தா முழு பெலொப்பொனேசியா மீதும் ஆதிக்கம் செலுத்தியது அல்லது செல்வாக்கு செலுத்தியது. கூடுதலாக, கிமு 431-404 இல் நடந்த பெலோபொன்னேசியப் போரில் ஏதெனியர் மற்றும் டெலியன் கூட்டணியின் தோல்வியின் விளைவாக கிமு 404 முதல் கிமு 371 வரை தெற்கு கிரேக்க உலகில் குறுகிய காலம் எசுபார்த்தன் ஒற்றை ஆதிக்கம் இருந்தது.[1] மற்றவர்கள் மீதான அவநம்பிக்கையின் காரணமாக, எசுபார்த்தன்கள் தங்கள் உள் விவகாரங்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை எழுதுவதை ஊக்கப்படுத்தவில்லை. எசுபார்த்தாவின் வரலாறானது செனபோன், துசிடிடீசு, எரோடோட்டசு, புளூட்டாக் ஆகியோரின் எழுத்துக்களில் இருந்தே அறியப்படுகின்றது. அவர்களில் யாரும் எசுபார்த்தன்கள் அல்லர். எசுபார்த்தன் மேலாதிக்கத்தின் காலம் முடிவுற்ற பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புளூடாக் எழுதினார்.[1] இது எசுபார்த்தன் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்வதில் சிரமத்தை அளிக்கிறது. இது மற்ற கிரேக்க அரசியலில் இருந்து வேறுபட்டதாகவும் உள்ளது.
எசுபார்த்தன்கள் துவக்கத்தில் தெற்கு பெலோபொன்னீசைக் கைப்பற்றி, விரிவாக்கப்பட்ட எசுபார்த்தா அரசில் அப்பகுதிகளை இணைத்தனர். எசுபார்த்தன் சமூகம் மூன்று வகுப்புகளைக் கொண்டதாக இருந்தது. அவை ஓமியோய் அல்லது ஓமியோய் அல்லது எசுபார்டியேட்கள், பெரியீசி, எலட்கள் போன்றோர் ஆவர். எலட்கள் என்பவர்கள் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் எசுபார்த்தா அரசுக்கு சொந்தமான அடிமைகள் ஆவர்.[2] அவர்கள் நகர அரசின் வேளாண் பொருளாதாரத்தை இயக்கும், வேலை ஆட்களாக இருந்தனர். கூடுதலாக, எசுபார்த்தன் சமுதாயத்தில் மற்ற வகையில் உழைக்கும் மக்களாக உள்ளவர்கள் பெரியீசி பிரிவினர் ஆவார். அவர்கள் எசுபார்த்தாவால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுதந்திர மக்களாக எசுபார்த்தா நகரைச் "சுற்றி வசிப்பவர்கள்" என்று பொருள்படும். பெரியீசிகள் தங்கள் சொந்த உள்கட்டமைப்புகளுடன், நிர்வாகப் பணிகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை பராமரிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எசுபார்த்தாவுக்கு திரை செலுத்தவும் இராணுவத்திற்கு வீரர்களை வழங்கவும் வேண்டியவர்களாக இருந்தனர். ஓமியோய் என்பவர்கள் எசுபார்த்தாவின் குடிமக்களாவர்.[3] அவர்கள் உயரடுக்குப் பிரிவினர் மற்றும் எசுபார்த்தன் பட்டத்திற்கு தகுதியானவர்கள். இதன் விளைவாக, உழைக்கும் வர்க்கங்களுடன் ஒப்பிடுகையில் எசுபார்த்தன் குடிமக்கள் (ஓமியோய்) தொகை மிகவும் குறைவாக இருந்தது. ஒவ்வொரு எசுபார்த்தன் குடிமகன்களுக்கும் 7 அல்லது 8 எலட்கள் என்ற விகிதத்தில் இருந்தனர்.[2] இந்த மூன்று மக்கள் சமுதாயத்தினரும் எசுபார்த்தாவை ஒரு தனித்துவமான பொருளாதார மற்றும் சமூக அமைப்புடன் வேறுபடுத்திக் காட்டுபவர்களாக செயல்பட்டு வந்தனர். எலட்கள் மற்றும் பெரியீசிகள் வேளாண்மை மற்றும் தொழில்துறையில் பணிபுரிபவர்களாகவும், எசுபார்த்தன்கள் இராணுவத்தைப் பயிற்றுவிப்பதற்கும், பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தனர். தொடர்ச்சியாக வலுவான இராணுவத்தை எசுபார்த்தா வைத்திருந்ததற்கு காரணம் எசுபார்த்தாவில் ஒழுங்கைப் பாதுகாக்கவும், அடிமைப்படுத்தப்பட்ட பெருமளவிலான மக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் ஆகும்.
கிமு 404 இல் பெலோபொன்னேசியன் போரில் எசுபார்த்தா வெற்றிபெற்ற பின்னர், ஏஜியன் கடல் பகுதி முழுவதும் உள்ள பல நகர அரசுகளில் தனக்கு சார்பான அரசுகளை நிறுவியது. இதை எசுபார்த்தாவின் லைசாந்தர் செய்தார். அவர் பல நகரங்களில் எசுபார்த்தன் காவல் படைகளை நிறுத்தினார். அவர் நகர அரசுகளில் அமைத்த பெரும்பாலான ஆளும் அமைப்புகள் டெகார்ச்சிகள் எனப்படும் பத்து பேர்கொண்ட சிலவர் ஆட்சியாக இருந்தது. ஹார்மோஸ்ட்ஸ் எனப்படும் எசுபார்த்தன் இராணுவ ஆளுநர்கள், அரசியல் தலைவராக நியமிக்கப்பட்டனர்.[4] இ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் எசுபார்த்தாவை விட லைசாந்தருக்கு விசுவாசமாக இருந்ததால், இந்த அமைப்பு லைசாந்தரின் தனிப்பட்ட பேரரசு என்று விவரிக்கப்பட்டது.[5] ஏஜியன் கடற் பகுதி நகரங்களில் புதிய ஆட்சிகளை நிறுவியதில், பலர் தங்கள் உயிர்களை இழந்தனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். ஆனால் மறுபுறம் அஜினா மற்றும் மெலோஸ் போன்றவை அவைற்றின் முன்னாள் குடிமக்களுக்காக மீட்டெடுக்கப்பட்டன.[6]
போரில் தோல்வியுற்ற ஏதென்சை என்ன செய்வது என்பதில் எசுபார்த்தாவின் கூட்டணி அரசுகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எசுபார்த்தாவின் முன்னணி கூட்டாளி அரசுகளான கொரிந்து மற்றும் தீப்ஸ் போன்றவை எசுபார்த்தாவை முழுமையாக அழித்து அவர்களை அடிமைகளாக்கவேண்டும் என்றன. இருப்பினும், பௌசானியாஸ் தலைமையிலான மிதவாதப் பிரிவினரின் கருத்து மேலோங்கியது. அதனால் ஏதென்சு காப்பாற்றப்பட்டது. என்றாலும் ஏதென்சின் நீண்ட மதில் சுவர்கள் மற்றும் பிரேயசின் கோட்டைகள் இடிக்கப்பட்டன. மேலும் ஏதென்சு அரசால் முன்பு நாடுகடத்தப்பட்ட அதன் குடிமக்களை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற குறிப்பிடத்தக்க நிபந்தனை லைசாந்தர் ஏதென்சுக்கு விதித்தார்.[6]
ஏதென்சிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதன் காரணமாக ஏதென்சில் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டடது. இதனால் ஏதென்சில் லைசாந்தரின் ஆதரவு பெற்ற சிலவர் ஆட்சி விரைவில் ஏற்படது. இது முப்பது கொடுங்கோலர்கள் ஆட்சி என்று அறியப்படுகிறது.[7] ஒரு நபரின் கைகளில் இவ்வளவு அதிகாரம் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த, மன்னர் அகிஸ் மற்றும் மன்னர் பௌசானியாஸ் இருவரும் லைசாந்தரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டனர். எசுபார்த்தா ஏதென்சில் சனநாயகத்தை மீட்டெடுக்க அனுமதித்தபோது, டிகார்ச்சிகள் பதவி ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏதென்சு விரைவில் மீண்டது.[8]
எசுபார்த்தாவின் மேலாதிக்கத்தின் போது எசுபார்த்தாவின் இரண்டு அரசர்களில் ஒருவராக இரண்டாம் அஜிசிலேயஸ் இருந்தார். புளூடார்க் பின்னர் எழுதுகையில், அஜிசிலேயஸ் பாரம்பரிய எசுபார்த்தன் கொள்கைகள் கொண்ட மன்னராக இருந்தார். பெரும்பாலும் அவர் பாரம்பரிய ஆடையை அணிந்திருப்பதையே காணலாம்.[9] பெலோபொன்னேசியப் போரின் முடிவிற்குப் பிறகு, அவரது சகோதரர் இரண்டாம் அகிஸ் வாரிசு இல்லாமல் இறந்து போனதால் இவர் வசம் அரசாட்சி வந்தது. (அகிசின் மகன் லியோடிசிடாஸ் ஏதெனியன் தளபதியான அல்சிபியாட்சினுடனான முறைகேடான உறவில் பிறந்த மகன் என்று வதந்தி இருந்தது.[3] ) அஜிசிலேயசின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவரான பிரபல எசுபார்த்தன் கடற்படைத் தளபதி லைசாந்தர் ஆவார்.
அஜிசிலேயஸ் முதல் போர்த்தொடர்களை ஹெலஸ்பான்ட் வழியாக கிழக்கு ஏஜியன் மற்றும் பாரசீக பிரதேசங்களுக்குள் மேற்கொண்டார். அவர் முதலில் ஃபிரிஜியர்கள் மற்றும் அவர்களின் தலைவரான திசாபெர்னெஸ் மீது தாக்குதல் தொடுத்தார். இந்தக் கட்டத்தில் திசாபெர்னஸ் போர் நிறுத்தத்தம் ஒன்றை முன்மொழிந்து போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் பாரசீக துணைப்படைகள் வந்தபின்னர் அவர் உடனடியாக போர்நிறுத்தத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். பொய் சத்தியம் செய்து கடவுளை தங்களுக்கு ஆதரவாக திருப்பியதற்காக திசாபெர்னசுக்கு நன்றி கூறிய அஜிசிலேயஸ் பாரசீக எல்லைக்குள்ளே தாக்குதல் நடத்த நுழைந்தார். அஜிசிலேயஸ் தனது நாட்டை மேலும் சூறையாடுவார் என்று அஞ்சிய பாரசீக மன்னர் திசாபெர்னசின் தலையை துண்டிக்க உத்தரவிட்டார். பின்னர் ஆசியா மைனரை விட்டு வெளியேற அஜிசிலேயசுக்கு இலஞ்சப் பணம் கொடுக்க முயன்றார்.[9]
கடுமையான கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறை கொண்ட எசுபார்த்தன் கொள்கைகளுக்கு உண்மையாக இருந்த, அஜிசிலேயஸ் பாரசிக மன்னர் இலஞ்சமாக தரமுயன்ற தங்கத்தை நிராகரித்தார்.[9] ” எவ்வாறாயினும், திசாபெர்னசை கொன்றதற்காக நன்றியுணர்வோடு தனது இராணுவத்தை பிரிஜியாவிற்கு திருப்பி அனுப்பினார்.
பாரசீகப் பேரரசின் மேற்குப் பகுதிகளை நோக்கி அஜிசிலேயஸ் விரைவில் மற்றொரு போர்த்தொடரைத் தொடங்கினார். பாரசீகத் தலைநகரான சூசா வரை தனது படைகளை நடத்தி செல்ல விரும்பியதாக புளூடார்க் கூறுகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கிரேக்கத்தில் எசுபார்த்தா மீது போர் மேகங்கள் சூழ்ந்தன.[9] இது பின்னர் கொரிந்தியப் போர் (கிமு 395-387) என அறியப்பட்டது. அதில் எசுபார்த்தாவிற்கு எதிராக தீப்ஸ், கொரிந்து, ஏதென்சு, ஆர்கோஸ் ஆகியவை கொண்ட கூட்டணி களம் கண்டது. கொரிந்தியப் போர் கிமு 395 முதல் 386 வரை நடந்தது.[12]
கிரேக்கத்தில், அஜிசிலேயசின் கீழ் எசுபார்த்தன்கள் ஏராளமான கிளர்ச்சி அரசுகளை எதிர்கொண்டன. இந்தப் போரில் எசுபார்த்தன்கள் நடத்திய மிக முக்கியமான போர்களில் கொரிந்தியப் போர் அடங்கும். அதில் கிரேக்கர்களின் குறிப்பாக தீப்ஸ் கூட்டணிக்கு எதிராகப் போரிட்டது. எசுபார்த்தன்கள் பாரசிகர்களின் உதவியை நாடினர். மேலும் தீபஸ், கொரிந்தியா, ஏதென்ஸ் ஆகியவற்றிற்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப்பெறுமாறு கேட்டுக் கொண்டது. இதன் விளைவாக கிமு 386 இல் அன்டால்சிடாஸ் அமைதி உடன்பாடு உருவானது. இந்த உடப்பாட்டின் முடிவில் எசுபார்த்தா தன் வசமிருந்த ஆசிய பகுதிகளை இழந்தது.[13]
கிமு 379/378 குளிர்காலத்தில், தீப்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒரு குழுவினர் நகரத்திற்குள் யாரும் அறியாமல் சென்று பதுங்கிக் கொண்டனர். மேலும் 1500 பேர்கொண்ட வலிமை நிறைந்த எசுபார்த்தன் காவல் படையினர் இருந்தபோதிலும், தீப்சை எசுபார்த்தன் ஆதரவுப் பிரிவினரிடமிருருந்து விடுவிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.[14] அடுத்த சில ஆண்டுகளில், எசுபார்த்தா தீப்சுக்கு எதிராக நான்கு போர்த் தொடர்களை மேற்கொண்டது, என்றாலும் தீப்சை வழிக்கு கொண்டு வருவதில் முற்றிலும் தோல்வியடைந்தது.[15] கிமு 375 இல், எசுபார்த்தா மேற்கொண்ட டெகிரா போரில் தீப்சிடம் குறியீட்டு ரீதியாக குறிப்பிடத்தக்க தோல்வியை சந்தித்தது. இறுதியாக, கிரேக்க நகர அரசுகள் எசுபார்த்தாவில் உள்ள அஜிசிலேயசை சந்திக்க தூதர்களை அனுப்பி அதன் மூலம் கிரேக்க நிலப்பரப்பில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. தீப்சின் இராசதந்திரியான எபமினோண்டாஸ், லாகோனியாவின் எசுபார்த்தன் அல்லாதவர்களின் சுதந்திரத்திற்காக வாதிட்டதனால் அஜிசிலேயசை கோபப்படுத்தினார். அதனால் அஜிசிலேயஸ் தீபஸ் நகரத்தினரை ஒப்பந்தத்தில் இருந்து விலக்கினார்.[16] கிமு 371 இல் நடந்த லியூக்ட்ரா சமர் எசுபார்த்தன் மேலாதிக்கத்திற்கு முடிவுகட்டியது.[3] அஜிசிலேயஸ் லியூக்ராவில் சண்டையிடவில்லை, அதனால் அவரது போர்க்குணம் வெளிப்படவில்லை.[16]
ஏதென்சில் எசுபார்த்தன் மேலாதிக்கத்தின் போது அதன் சனநாயகத்தை விமர்சித்ததற்கான சான்றுகள் உள்ளன. கிமு 420 களில் " பழைய சிலவர் ஆட்சியினர் " என்று அழைக்கப்படும் ஒரு அரசியல் எழுத்தாளரின் ஆவணம் ஏதென்சில் இருந்த உருவாக்கப்பட்ட சனநாயக விரோத உணர்வுகளை நிரூபிக்கிறது.[17] ஆயினும் இந்த சனநாயக எதிர்ப்பு உணர்வானது, முப்பது கொடுங்கோலர்கள் வெளியேற்றப்பட்ட பிறகான காலகட்டத்தில் அழிந்து இறுதியில் ஏதென்சுக்கு சனநாயகம் மீண்டும் திரும்பியது.
லியூக்ட்ராவில் எசுபார்த்தாவின் தோல்விக்குப் பிறகு அரசியலில் எசுபார்த்தாவின் முக்கியத்துவம் பெருமளவில் குறைந்தது. கிமு 360 இல் அகேசிலாசின் மரணத்தைத் தொடர்ந்து, மூன்றாம் அர்க்கிடாமஸ் அரசரானார். அவர் ஏதென்சுக்கும் இரண்டாம் கடற்படைக் கூட்டமைப்புக்கும் (கிமு 357-355) இடையே மோதல் இல்லாத கொள்கையை நடைமுறைப்படுத்தினார். கிமு 355 மற்றும் 346 க்கு இடையில், அவர்கள் தீப்சுக்கு எதிராக ஏதென்சுடன் கூட்டு சேர்ந்தனர் மேலும் ஆம்பித்தியோனிக் அவை தீப்சின் கவனத்தை பெலோபொன்னீஸிடமிருந்து திறம்பட திருப்பியது.[18]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.