ஐகன்சு–பிரனெல் கோட்பாடு
From Wikipedia, the free encyclopedia
ஐகன்சு–பிரனெல் கோட்பாடு (Huygens–Fresnel principle)[1] என்பது அலைப்பரவல் பற்றிய பகுப்பாய்வுக் கொள்கை ஆகும். அலைமுனை ஒன்றில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் கோள அலைகளின் மூலமாகும் என இது கூறுகிறது. அத்துடன் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வெளிப்படும் இரண்டாம் நிலை அலைவரிசைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன.[2] இந்தக் கோள அலைவரிசைகளின் கூட்டு புதிய அலைமுனை ஒன்றை உருவாக்குகிறது. எனவே, ஐகன்சு–பிரனெல் கோட்பாடு என்பது தொலைவுப்புல வரம்பு, அருகாமைப்புல விளிம்பு விளைவு மற்றும் எதிரொளிப்பு ஆகியவற்றில் ஒளிரும் அலைப் பரவலின் சிக்கல்களுக்குப் பயன்படுத்தப்படும் பகுப்பாய்வு முறையாகும். டச்சு இயற்பியலாளர் கிறித்தியான் ஐகன்சு, பிரான்சிய இயற்பியலாளர் அகத்தீன்-சான் பிரெனெல் ஆகியோரின் நினைவாக இக்கோட்பாட்டிற்குப் பெயரிடப்பட்டது.
இக் கருத்தியம் அல்லது தத்துவம், முன்னேகும் அலை முகப்பு ஒன்றின் ஒவ்வொரு புள்ளியும் உண்மையில் புதிய குறுக்கீட்டுப் புள்ளியும் புதிய அலைகளுக்கான மூலமுமாக உள்ளது எனக் கொள்கிறது. இந்தக் கருத்தியத்தின்படி, மேலும் ஊடகத்தில் முன்னரே அலை கடந்து வந்த புள்ளிகளிலிருந்து புதிதாக உருவாகி முன்னேறி வரும் எல்லா இரண்டாம் நிலை அலைகளின் தொகுப்பே முன்னேறும் ஒரு முழு அலையாகும். அலை பரப்பல் பற்றிய இக்கருத்துக் கண்ணோட்டம் விளிம்பு விளைவு பல வகை அலை நிகழ்வுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது.
எடுத்துக்காட்டுக்கு, இரண்டு அறைகள் ஒரு பொதுவான திறந்த கதவினால் இணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவோம். அதில் ஓர் அறையின் தொலைவிலுள்ள ஒரு மூலையில் ஒலி உண்டாக்கினால் அடுத்த அறையில் உள்ள ஒரு நபருக்கு அந்த ஒலி அந்தக் கதவு இருக்கும் இடத்தில் உருவாக்கிய ஒலி போலவே தோன்றும். இரண்டாம் அறையில் உள்ளவரைப் பொறுத்தமட்டில், கதவினருகில் அதிர்வுக்குள்ளாகும் காற்றே ஒலி மூலமாகும். ஒளி ஒரு தடையின் விளிம்பைக் கடந்து செல்லும் நிகழ்விலும் இதுவே உண்மையாகும். ஆனால் கட்புலனாகும் ஒளியின் அலைநீளம் மிகக் குறைவாக இருப்பதால் இதை உணர முடிவதில்லை.