கிண்டி பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
கிண்டி பொறியியல் கல்லூரி (College of Engineering, Guindy) சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாகப் பரப்பில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1794-ஆம் ஆண்டு மே மாதம் "அளவைப் பள்ளி" (School of Survey) என்று ஒரு சிறு பள்ளிக்கூடமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1859 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புக் கல்லூரியாக்கப்பட்டது.[1] இக்கல்லூரி, 1894 இல் இயந்திரவியல் பொறியியலையும், 1930 இல் மின்னணுப் பொறியியலையும், 1945 ஆம் ஆண்டு தகவல் தொடர்பியல், நெடுஞ்சாலைப் பொறியியலையும், 1983 இல் அச்சுத் தொழில்நுட்பத்தையும், 1992 இல் புவித் தகவலியல் துறையையும் தொடங்கியது.
கிண்டி பொறியியல் கல்லூரி | ||
குறிக்கோள் வாசகம் | உழைப்பே எப்போதும் வெல்லும் | |
தொடக்கம் | 1794 | |
பள்ளி வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் | |
அமைவிடம் | சென்னை, தமிழ் நாடு, இந்தியா | |
வளாகம் | 100 ஏக்கர்கள் (400,000 m²) | |
இணைய முகவரி | http://www.annauniv.edu/ |
இதுவே இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி. நாட்டிலே முதல் முறையாக, பல பொறியியல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. தென்னிந்தியாவில் முதன் முறையாக கணினி மையத்தை 1963 இல் நிறுவிய கல்வி நிறுவனமும் இதுவே.
இக்கல்லூரி, 2008 ஆம் ஆண்டு இந்திய டுடே பத்திரிக்கையின் இந்திய பொறியியல் கல்லூரிகள் தர வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்தது. மேலும் அவுட்லுக் இந்தியா பத்திரிக்கையின் 2007 ஆம் ஆண்டிற்கான 50 கல்லூரிகள் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது. இக்கல்லூரி பல பன்னாட்டு நிறுவனங்களுடனும் அரசுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. தனியாக அஞ்சல் தலை கொண்ட கல்லூரியும் இதுவேயாகும். நடுவண் அரசு, இக்கல்லூரியின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.