சுற்றோட்டத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
சுற்றோட்டத் தொகுதி (Circulatory system) என்பது, குருதியில் கலந்துள்ள ஊட்டச்சத்துகள், ஆக்சிசன், கார்பனீராக்சைடு ஆகிய வளிமங்கள், இயக்குநீர்கள், குருதியணுக்கள், கழிவுகள் என்பவற்றை உடலின் பல பாகங்களுக்கும் சுற்றியோடச் செய்வதன் மூலம் உடலிலுள்ள உயிரணுக்களுக்கும், உயிரணுக்களிலிருந்தும் எடுத்துச் செல்லும் உறுப்புத் தொகுதியாகும் [1]. இது, உடலுக்குத் தேவையான உணவூட்டத்தை அளிப்பதற்கும், நோய்களை எதிர்ப்பதற்கும், உடல் வெப்பநிலை (Thermoregulation), நீர்ச் சமநிலை (homeostasis), மற்றும் காரகாடித்தன்மை போன்றவற்றைச் சமநிலையில் வைத்திருந்து பேணுவதற்கும் உதவுகிறது.
நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தேவை. உயிரணுக்களில் ஏற்படும் வளர்சிதைமாற்றங்கள் மூலம் அங்கு தோன்றும் கழிவுப்பொருட்களையும், காபனீரொட்சைட்டு போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான உயிரணுக்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. இதயத்தின் இயக்கத்தால் குருதியைக் கடத்தும் குருதிக்குழல்கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.
இத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், நிணநீரைக் (Lymph) கொண்டு செல்லும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பகுதியான நிணநீர்த் தொகுதியையும் (Lymphatic system) உள்ளடக்கியது என்கின்றனர்[2].
மனிதரும், பிற முதுகெலும்பிகளும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில முதுகெலும்பிலிகளில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.[3]