வளர்சிதை மாற்றம்
From Wikipedia, the free encyclopedia
வளர்சிதை மாற்றம் (ஆங்கிலம்: Metabolism) அல்லது (இலங்கை வழக்கு) அனுசேபம் என்பது உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகள் ஆகும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகின்றன. வளர்சிதைமாற்றம் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, சிதைமாற்றம் (catabolism), வளர்மாற்றம் (anabolism) என்பனவாகும். சிதைமாற்றம் பெரிய மூலக்கூறுகளைச் சிறியனவாக உடைக்கின்றது. வளர்மாற்றம் சக்தியைப் பயன்படுத்தி புரதம், நியூக்கிளிக் அமிலம் போன்ற கலத்தின் கூறுகளை உருவாக்குகின்றது.
வளர்சிதைமாற்றத்தின் வேதிவினைகள் வளர்சிதைமாற்றச் செல்வழிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு வேதிப்பொருள் இன்னொன்றாக மாறுவது ஒரு தொகுதி நொதியங்களின் மூலம் நடைபெறுகின்றது. வளர்சிதைமாற்றத்துக்கு நொதியங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். ஏனெனில், இவையே விரும்பத்தக்க, ஆனால் வெப்ப இயக்கவியல் அடிப்படையில் சாதகமற்ற வேதிவினைகளை இணைத்தல் முறை மூலம் சாதகமானவையாக்கி உயிரினங்களில் அவை நிகழ உதவுகின்றன. நொதியங்கள், கலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு அல்லது பிற கலங்களில் இருந்து வரும் சைகைகளுக்கு அமைய, வளர்சிதைமாற்றச் செல்வழிகளை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
ஒரு உயிரினத்தில் நிகழும் வளர்சிதைமாற்றங்களே எப்பொருள் அவ்வுயிரினத்துக்கு ஊட்டம் தருவது எது நஞ்சாக அமைவது என்பதையும் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, சில நிலைக்கருவிலிகள் ஐதரசன் சல்பைடை ஊட்டச்சத்தாகப் பயன்படுத்துகின்றன, ஆனால் இவ் வளிமம் விலங்குகளுக்கு நஞ்சாகும். வளர்சிதைமாற்றத்தின் வேகம், அதன் வேகவீதம் என்பனவும் ஒரு உயிரினத்துக்கு எவ்வளவு உணவு தேவை என்பதைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.
அடிப்படையான வளர்சிதைமாற்றச் செல்வழிகள் மிகவும் வேறுபட்ட இனங்களிலும் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது, வளர்சிதைமாற்றம் தொடர்பான குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் ஆகும். சித்திரிக் அமில வட்டத்தில் இடைநிலைப் பொருளான காபொக்சிலிக் அமிலம், ஒருகலப் பாக்டீரியாவான எஸ்செரீக்கியா கோலை (Escherichia coli) என்பதிலும், பெரிய பல்கல விலங்கான யானையிலும் இருப்பது இதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். வளர்சிதைமாற்றத்தில் உள்ள இவ்வாறான ஒப்புமைகள் இச் செல்வழிகளின் உயர்ந்த செயல்திறன் காரணமாகவும், இவை உயிரினப் படிமலர்ச்சி (கூர்ப்பு) வரலாற்றின் தொடக்க காலத்திலேயே உருவானதன் காரணமாகவும் இருக்கலாம்.