சீரொளி
ஒளியியல் பெருக்கத்தின் வழியாக ஒளி வெளிப்படுத்தும் சாதனம் / From Wikipedia, the free encyclopedia
சீரொளி (Laser, லேசர்) அல்லது ஊடொளி என்பது சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. பொதுவாக மின் விளக்கு, அகல்விளக்கு, கதிரவன் முதலானவற்றில் இருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் ஒரே அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களும்கூட ஒன்றுக்கொன்று அலைமுகங்கள் மாறுபட்டும் முரண்பட்டும் காணப்படும். அதாவது ஓர் ஒளியலையின் அலைமுகம் ஏறுமுகமாக இருக்கும் போது, அதே அலைநீளம் கொண்டிருக்கும் வேறு ஒளியலைகள் இருந்தாலும் அவற்றின் அலைமுகம் இறங்குமுகமாக இருக்கக்கூடும். ஆனால் சீரொளி அல்லது லேசர் என்னும் தனிச்சிறப்பான ஒளியானது அவற்றுள் உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும். சீரொளியின் பயன்பாடுகள் பலவும் இப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை. சீரொளியானது லேசர் என்று பரவலாக அறியப்படுகின்றது. இந்த லேசர் என்னும் சொல் ஆங்கிலத்தில் முதலெழுத்துக்கூட்டலாக அமைந்த சுருக்கெழுத்துச்சொல். இது Light Amplification by Stimulated Emission of Radiation[1][2] என்பதன் சுருக்கமாக LASER என்று அழைக்கப்படுகின்றது. கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி என்பதே இதன் பொருள். எனவே இது ஓர் ஒளிமிகைப்பிக் கருவி. அலைநீளங்களும் அலைமுகங்களும் சீரொற்றுமை பெற்று சீரொளியாக வெளிப்படும் ஒளி.
மே 16, 1960 இல் அமெரிக்கக் கூட்டு நாடுகளில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் மாலிபு என்னும் இடத்தில் ஹியூஸ் ஆய்வகத்தில், தியோடோர் மைமான் (Theodore Maiman)[3] என்பவர் முதன்முதலாக ஒரு செயற்கையாகச் செய்த சிவப்புக்கல் அல்லது கெம்பு என்னும் பொருளில் சீரொளி எழுப்பி புதுமை படைத்தார். இன்று இந்த சீரொளி அல்லது லேசர் நூற்றுக்கணக்கான தொழிநுட்பங்களில் பயன்பட்டு, ஆண்டுக்கு பல பில்லியன் டாலர் வணிகமாக உருவெடுக்க வழிவகுத்தது. சிவப்புக்கல் அல்லது கெம்பு என்பது நகைகள் செய்யப் பயன்படும் வகையான விலை உயர்ந்த, ஒருவகைப் படிகக்கல். இதில் குரோமியம் போன்ற வேற்றுப்பொருட்களை திட்டமிட்ட அளவில் அதனுள் கலந்து இதனைப் பயன்படுத்தினார். சீரொளி என்பது இன்று பல்வேறு திண்ம வளிமப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. கணினி, மற்றும் இசைப்பெட்டிகளில் பயன்படும் டிவிடி (DVD), குறுந்தட்டு (குறுவட்டை, CD) போன்றவற்றில் இருந்து குறிபலைகளைப் பெறவும் இந்த சீரொளி மிகவும் பயன்படுகின்றது. பலவகையான கணி அச்சு எந்திரங்கள், கடைகளில் வாங்கும் பொருளை அடையாளம் காட்டப் பயன்படும் சீரொளி வருடி (scanner), இசைநிகழ்ச்சிகளில் ஒளியலங்காரம் செய்யப்பயன்படும் சீரொளிக்கற்றைகள் என்பதில் இருந்து தொழிலகங்களில் தடிப்பான இரும்பை வெட்டி அறுப்பது, அலுமினியல் குழாய்களை ஒட்டவைப்பது வரை பற்பல பயன்பாடுகளுக்குச் சீரொளி பயன்படுகின்றது.