தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance, TNA) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்து 2001 அக்டோபரில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தீர்க்க ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை அது ஆதரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக பெரும்பான்மையினரின் மத்தியில் கருதப்பட்டாலும், அதன் தலைமை ஒருபோதும் தாம் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், அரசாங்கத்தைப் போலவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்து வந்தது.[1][2][3][4][5]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | |
---|---|
தலைவர் | இரா. சம்பந்தன் (இதக) |
செயலாளர் | மாவை சேனாதிராஜா (இதக) |
பிரதிச் செயலர்(கள்) | செல்வம் அடைக்கலநாதன் (டெலோ) |
பேச்சாளர் | ம. ஆ. சுமந்திரன் (இதக) |
தொடக்கம் | அக்டோபர் 20, 2001 (2001-10-20) |
தலைமையகம் | 6, 1வது ஒழுங்கை, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை |
கொள்கை | தமிழ்த் தேசியம் |
நாடாளுமன்றம் | 10 / 225 |
மாகாண சபைகள் | 41 / 455 |
உள்ளாட்சி சபைகள் | 288 / 4,462 |
இணையதளம் | |
tnainfo.com | |
இலங்கை அரசியல் |
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூடமைப்பு தனியரசுக்கான கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய சுயாட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் ஏராளமான தாக்குதல்களுக்கு உள்ளாகினர், அதன் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் அரசு ஆதரவுக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.[6][7][8]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.[9] இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 33 உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் உள்ளார். இவர் செப்டம்பர் 2015 முதல் 2018 திசம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[10][11]