தாய்லாந்தின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
தாய்லாந்தின் வரலாறு என்பது, தலைநிலத் தென்கிழக்காசியாவில் உள்ளதும் முன்னர் "சியாம்" என அழைக்கப்பட்டதுமான இன்றைய தாய்லாந்து நாட்டின் வரலாறு ஆகும். இந்நாட்டுக்குத் "தாய்லாந்து" எனப் பெயர் வரக் காரணமான "தாய்" இனத்தவர் முன்னர் தென்மேற்குச் சீனாவைத் தாயகமாகக் கொண்டிருந்தனர். இவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கிருந்து தலைநிலத் தென்கிழக்காசியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். இவர்கள் இப்பகுதியில் வாழ்ந்தது குறித்த மிக முந்திய குறிப்பு கம்போடியாவின் அங்கூர் வாட்டில் உள்ள கெமர் கோயில் தொகுதியில் உள்ள 12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு, இவர்களை வெளியார் அழைத்த "சியாமியர்" என்னும் பெயரால் குறிப்பிடுகின்றது. "சியாம்" என்பது "கரு மண்ணிற" மக்கள் என்னும் பொருள்படும்.[1] இச்சொல், குறித்த மக்களின் ஒப்பீட்டளவில் கருமையான தோல் நிறத்தைக் குறிக்கும் வகையில் சமசுக்கிருத மொழியில் கருமையான நிறம் என்ற பொருள் கொண்ட சியாமா என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது.[2] சீனம்: 暹羅; பின்யின்: Xiānluó தாய் மக்கள் தம்மை எப்போதும் முவெயாங் தாய் என்னும் பெயராலேயே அழைத்துக்கொள்கின்றனர்.[3]
நாட்டை மேற்கத்தியர் "சியாம்" என்று அழைக்கும் வழக்கம் போர்த்துக்கேயரிடம் இருந்து வந்திருக்கக்கூடும். போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள், ஆயுத்தய இராச்சிய அரசனான "போரோம்மட்ரைலோக்கானத்" 1455 இல் மலாய்த் தீவக்குறையின் முனையில் உள்ள மலாக்கா சுல்தானகத்துக்குப் படைகளை அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றன.1511 இல் மலாக்காவைப் போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னர் அவர்கள் தூதுக்குழு ஒன்றை ஆயுத்தயாவுக்கு அனுப்பினர். ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், 1612 ஆகத்து 15 இல் த குளோப் என்னும் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிகக் கப்பல் அரசர் முதலாம் ஜேம்சின் கடிதத்துடன் "சியாம் வீதி"க்கு வந்தது.[4]வார்ப்புரு:RP 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சியாம் என்னும் பெயர் புவியியல் பெயர் முறையில் முழுமையாக உள்வாங்கப்பட்டதால் அப்பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் அந்நாட்டுக்கு வழங்கவில்லை.[4]
"மொன்" போன்ற இந்தியமய நாடுகள், கெமர் பேரரசு, மலாய் தீவக்குறையைச் சேர்ந்த மலாய் நாடுகள், சுமாத்திரா என்பவை இப்பகுதியை ஆண்டுள்ளன. தாய் மக்கள் தமது சொந்த இராச்சியங்களாக ங்கோயென்யாங் (Ngoenyang), சுக்கோதாய் இராச்சியம், சியாங் மாய் இராச்சியம், லான் நா, ஆயுத்தய இராச்சியம் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இவை தமக்குள் போரிட்டுக் கொண்டதுடன், கெமர், பர்மா, வியட்நாம் போன்ற வெளி இராச்சியங்களிலிருந்தும் ஆபத்தை எதிர் நோக்கியிருந்தன. மிகவும் பிற்பட்ட காலத்தில், 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பியக் குடியேற்றவாத வல்லரசுகளின் ஆபத்து இருந்தது. ஆனால், பிரான்சும் பிரித்தானியாவும் அப்பகுதியில் இருந்த தங்கள் குடிஎய்ய்ற்றவாத நாடுகளுக்கு இடையில் பிணக்குகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தாய்லாந்தை நடு நிலைப் பகுதியாக விட்டுவைக்கத் தீர்மானித்தவர். இதனால் தாய்லாந்து குடியேற்றவாத ஆட்சிக்குள் சிக்காத ஒரே தென்கிழக்காசிய நாடாக இருக்கின்றது. 1932 இல் முழுமையான முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் 60 ஆண்டுகள் தாய்லாந்து இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் மக்களாட்சியின் அடிப்படையிலான அரசாங்க முறை கொண்டுவரப்பட்டது. 2014 இல் தாய்லாந்து இன்னுமொரு சதிப் புரட்சிக்கு முகம் கொடுத்தது.