திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது.[2] தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக அறிஞர் அண்ணாதுரை, பெரியார் ஆகியோரின் சமூக-சனநாயக, சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது.[3] பெரியாரினால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து (1944 வரை நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 செப்டம்பர் 17 இல் சென்னை, ஜார்ஜ் டவுன், இல. 7, பவளக்காரத் தெருவில் கூடித் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.[4] 1947 செப்டம்பர் 18 இல் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டு, கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.[5][6][7]
திராவிட முன்னேற்றக் கழகம் Dravida Munnetra Kazhagam | |
---|---|
சுருக்கக்குறி | திமுக |
தலைவர் | மு. க. ஸ்டாலின் |
நிறுவனர் | கா. ந. அண்ணாதுரை |
பொதுச் செயலாளர் | துரைமுருகன் |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | த. ரா. பாலு |
மக்களவைத் தலைவர் | த. ரா. பாலு |
மாநிலங்களவைத் தலைவர் | திருச்சி சிவா |
தொடக்கம் | 17 செப்டம்பர் 1949 (74 ஆண்டுகள் முன்னர்) (1949-09-17) |
பிரிவு | திராவிடர் கழகம் |
முன்னர் |
|
பின்னர் |
|
தலைமையகம் | அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை, சென்னை – 600018, |
மாணவர் அமைப்பு | திமுக மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | திமுக இளைஞர் அணி |
தொழிலாளர் அமைப்பு | தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச) |
கொள்கை | |
நிறங்கள் | கருப்பு சிவப்பு |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[1] |
கூட்டணி | மூன்றாவது அணி (1989-90, 1996-98) தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999–2004) ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (2014–2016) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2006–2013) (2016–தற்போது வரை) |
தேசியக் கூட்டுநர் | மு. க. ஸ்டாலின் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 24 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை) | இந்திய மாநிலங்கள் |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www.dmk.in | |
இந்தியா அரசியல் |
அண்ணாதுரை 1949 முதல் 1969 பெப்ரவரி 3 இல் அவர் இறக்கும் வரை கட்சியின் பொதுச் செயலராக பணியாற்றினார்.[8] 1967 முதல் 1969 வரை அவர் தமிழக முதலமைச்சராகவும் இருந்தார். அண்ணாதுரையின் காலத்தில், 1967 இல், திமுக இந்திய தேசிய காங்கிரசுக்கு அடுத்தபடியாக, முதல் தடவையாக இந்திய மாநிலம் ஒன்றில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதலாவது அரசியக் கட்சி என்ற சாதனையையும் ஏற்படுத்தியது. அண்ணாதுரையின் மறைவை அடுத்து மு. கருணாநிதி 1969 முதல் 2018 ஆகத்து 7 இல் அவர் இறக்கும் வரை கட்சித் தலைவராகப் பதவியில் இருந்தார்.[9] மு. கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகப் பதவியில் இருந்தார். இவற்றில் இரண்டு இந்திய ஒன்றிய அரசினால் கலைக்கப்பட்டது.[10] தற்போது, கருணாநிதியின் மகன் மு. க. இசுட்டாலின் கட்சித் தலைவராக உள்ளார். இசுட்டாலின் 2017 இல் கட்சியின் செயல் தலைவராகவும், பின்னர் 2018 இல் கருணாநிதி இறந்த பின்னர் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், திமுக 24 இடங்களைக் கைப்பற்றி, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது.[12] திமுக தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஐந்து தடவைகள் ஆட்சியில் இருந்து, ஆறாவது தடவையாகத் தற்போது ஆட்சியில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் கட்சியின் தலைமையகம் சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்துள்ளது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு.[சான்று தேவை] திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.