தேசியவாதம்
From Wikipedia, the free encyclopedia
தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்றியம் என்பது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது, தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள் போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து வந்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உருவானதற்காக முக்கிய காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.[1]
ஒரு கருத்தியல் என்ற வகையில், தேசியவாதம், மக்கள் இறைமைக் கொள்கையின்படி மக்கள் என்பது நாட்டினம் (nation) என்று கொள்கிறது. அத்துடன், இதன் விளைவாக நாட்டினத் தன்னாட்சி உரிமைக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாட்டின அரசுகளே ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்கிறது தேசியவாதம். பல நாடுகள் பல இனங்களைக் கொண்டிருக்கின்றன அல்லது நாட்டினத் தகுதி கோரும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இதனால், தேசியவாதம் பெரும்பாலும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுடன், பேரரசுவாத ஆக்கிரமிப்பு, நாட்டின விடுதலை ஆகிய சூழல்களில் போர்கள், பிரிவினை, இனப்படுகொலை போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது.
தேசியவாதமானது தேசத்திற்கான பக்தி என்பதாகும். இது மக்கள் ஒன்றாக இணைக்கும் ஒரு உணர்வு ஆகும். தேசிய சின்னங்கள், தேசிய கொடிகள், தேசிய கீதங்கள், தேசிய மொழிகள், தேசிய தொன்மங்கள் மற்றும் தேசிய அடையாளத்தின் பிற சின்னங்கள் ஆகியவை தேசியவாதத்தில் மிக முக்கியமானவை. தேசியவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதன் மூலம், குறிப்பாக சுய-ஆட்சி, அல்லது முழு இறையாண்மையை பெற்றுக்கொள்வதன் நோக்கம் கொண்ட குழுவினரின் தாய்நாட்டின் மீதுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளின் ஒரு எல்லையாகும். தேசியவாதம் என்பது கலாச்சாரம், மொழி, இனம், மதம், அரசியல் இலக்குகள் அல்லது ஒரு பொதுவான மூதாதையர் உள்ள நம்பிக்கை போன்ற பகிரப்பட்ட குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் நோக்குநிலை ஆகும்.[2]