தொலைத்தொடர்பு
From Wikipedia, the free encyclopedia
தொலைத்தொடர்பு (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, பரப்பி, ஓர் ஊடகம் (கம்பி), ஓர் அலைவரிசை, ஒரு வாங்கி என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, சைகை எனப்படும் பௌதிகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதிக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சைகைகளில் மாற்றத்தையோ தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றது. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சைகைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய கண்ணாகவோ காதாகவோ இருக்கக்கூடும். வேறு சில சந்தர்ப்பங்களில் கண், காது தவிர்ந்த ஏனைய புலன்கள் கூட இப்பணியைச் செய்கின்றன. இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் மூளையிலேயே நடைபெறுகின்றது.
தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும் ஒலிபரப்பாகக் கூட இருக்கக்கூடும்.
தொலைத்தொடர்புப் பொறியாளர் ஒருவருடைய திறமை, பரப்பும் ஊடகத்தினுடைய பௌதிக இயல்புகளையும் தகவல்களின் புள்ளி விபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை வடிவமைப்பதிலேயே தங்கியுள்ளது.
மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் பார்வை, கேள்விப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, மனித உணர்தன்மை தொடர்பான உடலியல், உளவியல் அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அனுபவங்களில் கூடிய பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சைகைக் குறைபாடுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள்.