நுரையீரல் அழற்சி
From Wikipedia, the free encyclopedia
நுரையீரல் அழற்சி (pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது, நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இது நுரையீரல் புடைக்கலவிழைய / நுண்குழி அழற்சியும், நுரையீரல் நுண்குழிகள் நீர்மத்தால் நிரம்புதல் என்றும் விளக்கப்படுகின்றது.[1][2] நுரையீரல் நுண்குழிகள் என்பன, நுண்ணிய வளி நிரம்பிய பைகள் ஆகும். இவை நுரையீரலில் ஒட்சிசனை உறிஞ்சுவதற்குப் பொறுப்பானவை. நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் பாக்டீரியா, வைரசு, பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று; அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் என்பன அடங்கும்.[3] இவ்வாறான நோய்க்காரணிகளால் ஏற்படும் தொற்றுநோய் இல்லாதவிடத்து, இதன் காரணம் அறியப்படவில்லை என்றும் அதிகாரபூர்வமாக விபரிக்கப்படக்கூடும்.
இதற்கான அறிகுறிகள், இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும் .[4][5] நோய் அறிவதற்கான முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை என்பவை உள்ளடங்கும்.[6] இதற்கான சிகிச்சை நோயின் காரணத்தைப் பொறுத்தது. பக்டீரியாவினால் உண்டாகக்கூடிய நுரையீரல் அழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் மருந்தாகப் பயன்படுகின்றன.[7] குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சி நோய்களைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.[8] கைகழுவுதல் மற்றும் புகைப்பிடிக்காமை போன்றவை மற்ற தடுப்பு முறைகளாகும்.[8] இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் அந்நோய் தொற்றலுக்கான அடிப்படைக் காரணத்தைச் சார்ந்துள்ளது.[9] பாக்ட்டீரியங்களால் ஏற்படக்கூடிய நுரையீரல் அழற்சியை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம்.[10] நோய்த்தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பின் செயற்கைசுவாச சிகிச்சை அளிக்கப்படலாம்.[9] .[10]
நுரையீரல் அழற்சி நோயால் உலகளவில் சுமார் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் (அது உலக மக்கள்தொகையில் 7%) மற்றும் வருடத்திற்கு இந்நோய் தாக்கத்தால் சுமார் 4 மில்லியன் இறப்புக்கள் ஏற்படுகின்றன.[11][12] நுரையீரல் அழற்சியானது “மனித இறப்புகளின் தலைவன்” என வில்லியம் ஓஸ்லர் என்பவரால் குறிப்பிடப்படுகிறது.[13] 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால் இறப்புகள் குறைந்துள்ளன.[11] ஆயினும்கூட வளரும் நாடுகளில் மிக இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கும், தீராத நோய்த்தொற்றுள்ளவர்களுக்கும் நுரையீரல் அழற்சியானது மரணத்திற்கான முன்னணி காரணியாக இருக்கிறது.[11][14]. நுரையீரல் அழற்சியானது நோய்தொற்றுக்குள்ளானவரை மரணத்திற்கு அருகே கொண்டுசெல்கிறது. இதற்கு “முதியவர்களின் நண்பன்” என்ற அடைமொழியும் உண்டு.[15]