From Wikipedia, the free encyclopedia
பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Oil refinery or petroleum refinery) என்பது பாறை எண்ணெயானது பெட்ரொலியம் நாப்தா, பெட்ரோல், டீசல், நிலக்கீல் மூலம், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, எரிநெய் போன்ற பல பயனுள்ள பொருட்களாக மாற்றப்படும் தொழிலகச் செயல்முறை நிகழ்த்தப்படும் ஒரு ஆலையாகும்.[1][2][3] பெட்ரோல் வேதிப்பொருட்களை எதிலீன் மற்றும் புரொப்பிலீன் போன்றவை கச்சா எண்ணெயில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நாப்தா போன்ற பொருட்களின் தேவை இல்லாமல், நேரடியாக கச்சா எண்ணெயை சிதைவுக்குட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படலாம்.[4][5]
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுவாக பெரிய, விரிவடைந்த தொழில்துறை வளாகங்களாகும். இங்கு, விரிவான குழாய்களானவை, காய்ச்சி வடிக்கும் நெடுங்கலன்கள் போன்ற பெருமளவிலான வேதியியல் செயலாக்க அலகுகளுக்கு இடையில் திரவங்களின் ஓட்டங்களைச் சுமந்து செல்லும். பல வழிகளில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தொழில்நுட்பத்தின் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்றன, மேலும் இரசாயன ஆலைகளின் வகைகளாக கருதப்படுகின்றன.
தொடக்க நிலை மூலப்பொருளான கச்சா எண்ணெய் பொதுவாக ஒரு எண்ணெய் உற்பத்தி ஆலையில் செயல்முறைக்குள்ளாக்கப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு உள்வரும் கச்சா எண்ணெய் மூலப்பொருள் மற்றும் மொத்த திரவ பொருட்களின் சேமிப்பிற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலோ அல்லது அருகிலோ எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று அமைந்திருக்கும்.
பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் மிகப்பெரிய தொழிற்சாலை வளாகங்களாக இருக்கின்றன, அவை பல்வேறு செயலாக்க அலகுகள் மற்றும் பயன்பாட்டு அலகுகள் மற்றும் சேமிப்புத் தொட்டிகள் போன்ற துணை வசதிகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு சுத்திகரிப்பு நிறுவனம் அதன் தனித்துவமான ஏற்பாடு மற்றும் சுத்திகரிப்பு இடம், தேவைப்படும் தயாரிப்புகள் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படும் சுத்திகரிப்பு செயல்முறைகளை கொண்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு என்பது பெட்ரோலியத் தொழில்துறையின் கீழ்நோக்கிய பயணத்தின் அத்தியாவசியமான ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது.
சில நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் நாளொன்றுக்கு 800,000 முதல் 900,000 பீப்பாய்கள் (127,000 முதல் 143,000 கன மீட்டர்) அளவு கச்சா எண்ணெயைக் கையாள்கின்றன.
உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு சஞ்சிகையின்படி, மொத்தம் 636 சுத்திகரிப்பு நிலையங்கள் டிசம்பர் 31, 2014 அன்றைய நிலையில் இயங்குவதாகவும் அவற்றில் 87.75 மில்லியன் பீப்பாய்கள் (13,951,000 கன மீட்டர்கள்) எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், குஜராத்தில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும்.
சீனர்களே எண்ணெய் சுத்திகரிப்புச் செயல்முறையை அறிந்திருந்த முதல் நாகரிகக் குடிகளாவர்.[6] கி.மு. 512 மற்றும் கி.மு. 518 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் வட வெய் வம்சத்தைச் சார்ந்த, சீன புவியியலாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியான லியோ டாயாயுன் அவரது புகழ்பெற்ற படைப்பான பண்டைய திரவவியல் மீதான தொடர் விளக்க உரை (Commentary on the Water Classic) என்ற நூலில் கச்சா எண்ணெயை பல்வேறு உயவு எண்ணெய்களாக சுத்திகரித்தல் செயல்முறையை அறிமுகப்படுத்தினார்.[7][8] முதலாம் நூற்றாண்டிலேய, சீனர்கள் எரிபொருள் சுத்திகரிப்பு ஆற்றலை உபயோகிப்பதற்கு அறிந்திருந்த மக்களில் முதலாமவராக இருந்தனர்.[8] இராணுவத்தில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைத் தயாரிப்பதற்காக கைஃபெங் நகரில் "ஃபியர்ஸ் ஆயில் பட்டறை" என்று அழைக்கப்படும் ஒரு பட்டறை வடக்கு சாங் வம்சத்தின் ஆட்சியின் போது நிறுவப்பட்டது.துருப்புகள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இரும்பு தகரக்குவளைகளில் நிரப்பி, எதிரி துருப்புக்களை நோக்கி அவற்றை வீசியெறிந்து, தீயை விளைவிப்பர் - இது தான் உலகின் முதல் நெருப்பு குண்டாகக் கருதப்படுகிறது. உலகின் ஆரம்பகால எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான இந்த பட்டறைதான் சீனாவிற்கான எண்ணெயைப் பயன்படுத்தி இயங்கும் ஆயுதங்களை ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கியது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.