![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Mhowcantonment_coolspark.jpg/640px-Mhowcantonment_coolspark.jpg&w=640&q=50)
மால்வா, மத்தியப் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
மால்வா (Malwa) என்பது வட இந்தியாவின் மேல்-மத்தியில் அமைந்துள்ள ஓர் இயற்கையான பிரதேசம் ஆகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் எரிமலைச் செயற்பாடுகளினால் உருவான மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. நிலவியல் ரீதியில், மால்வா பீடபூமி என்பது விந்திய மலைத்தொடரின் வடக்கே உள்ள எரிமலைப் பிரதேசத்தைக் குறிக்கும். அரசியல் மற்றும் நிருவாக ரீதியாக, வரலாற்றுக் கால மால்வா பிரதேசம் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள், மற்றும் இராஜஸ்தானின் தென்-கிழக்குப் பகுதிகளையும் குறிக்கும். சில வேளைகளில் விந்தியப் பகுதியின் தெற்கே நிமார் பிரதேசத்தையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படுகிறது.
மால்வா | |
---|---|
![]() மால்வா பகுதி | |
![]() மால்வா பகுதி 1823-ல் உள்ள வரைபடம். | |
நாடு | இந்தியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 81,767 km2 (31,570 sq mi) |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,88,89,000 |
• அடர்த்தி | 230/km2 (600/sq mi) |
மொழிகள் | |
• முக்கிய மொழிகள் | மல்வி, இந்தி |
• பிறப்பு வீதம் | 31.6 (2001) |
• இறப்பு வீதம் | 31.6 (2001) |
• குழந்தை இறப்பு வீதம் | 93.8 (2001) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய நேரம்) |
பெரிய நகரம் | இந்தூர் |
மால்வா பிரதேசம் தனியான அலகாகவே இருந்து வந்துள்ளது. இது அவந்தி நாடு, மவுரியர், குப்தர், பர்மாராக்கள், மல்வா சுல்தான்கள் முகலாயர், மராட்டியர் போன்ற பல்வேறு இராச்சியங்களாலும், வம்சங்களாலும் காலத்துக்குக் காலம் ஆளப்பட்டு வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் மால்வா ஏஜென்சி மத்திய இந்தியாவுடன் (மால்வா ஒன்றியம்) இணைக்கப்படும்வரை இது ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தது.[2]
இதன் அரசியல் எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டபோதும், இப்பகுதி இராசத்தான், மராத்தி, மற்றும் குஜராத்திய பண்பாடுகளின் கலப்புடன் தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும் வளர்த்துக் கொண்டது. இப்பிரதேசத்தில் காளிதாசர், வராகமிகிரர், பிரம்மகுப்தர், போஜர் போன்றவர்கள் தோன்றினர். பழங்காலத்தில் உஜ்ஜயினி நகரம் இதன் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக இந்தோர் இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. அபினி அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.