சூழலியல்
உயிரிகளின் உறவு குறித்த அறிவியல் படிப்பு / From Wikipedia, the free encyclopedia
சூழலியல் (Ecology) என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும்; குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழல் மண்டலத்தையும் (ecosystem) உள்ளடக்கியதாகும்.
சூழலியல் நுண்ணுயிரிகளிலிருந்து, பேரண்டம் வரைப் பரந்து உயிர்வாழ்க்கையை உய்த்துணரப் பயன்படுகிறது. சூழலியல் வல்லுநர்கள் உயிர்களின் பல்வகைமையை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளை விளக்குகின்றனர். மேலும் இவ்வேறுபாடானது அவற்றின் உணவு, உறையுள், சமூகம் மற்றும் இனவிருத்தி ஆகிய கூறுகளினால் விளக்கப்பெறும். |
சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களுடன், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே சூழலியல் ஆகும்.
சூழலியல் தனது ஆய்வுகளுக்காக, நிலவியல், புவியியல், காலநிலையியல், மண்ணியல், மரபியல், வேதியியல், இயற்பியல் ஆகிய துறைகளையும் துணையாகக் கொள்கின்றது. இதனால் சிலர் இதனை ஒரு முழுதளாவிய (holistic) அறிவியல் என்கின்றனர்.