அறிவியல்
அறிவை உருவாக்கி ஒழுங்கமைக்கும் முறைப்படுத்தப்பட்ட துறை / From Wikipedia, the free encyclopedia
அறிவியல் (ஒலிப்புⓘ) (Science) என்பது "அறிந்து கொள்ளுதல் " எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[2][3][4] அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.
நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன .[5] அறிவியல் அறிவைப் பயன்படுத்தும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.[6] எனவே, அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதனை, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.
தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.[8][lower-alpha 1] என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை இபின் அல் ஹய்தம் அவர்களால் அவரது ஒளியியல் நூலில் வறையறுக்கப்பட்டது.[9][10][11][12][13] பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.[14]
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்டத்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்காலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம் எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.[15][16]