கூர்ம அவதாரம்
From Wikipedia, the free encyclopedia
கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைகையில், விஷ்ணு, ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார். இந்தக் காட்சி, பல வைணவக் கோயில்களின் மேற்கூரைகளில் சுவர் சிற்பங்களாகவோ, ஓவியங்களாவோ உள்ளது.[1][2] கூர்ம அவதாரத்தைப் பற்றிய மிகவும் பழமையான குறிப்பு (யசுர் வேதத்தில்) சதபத பிராமணம் எனும் நூலில் காணப்படுகிறது. இந்து புராணங்களில் கூறப்படுவது போல, பாற்கடலை, மேரு மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி கடைந்த போது, வெளிப்பட்ட அமுதத்துடன், வெளிவந்த நச்சு, அமுதத்தில் கலந்து விடாமல் இருப்பதற்காக, சிவன் அதை எடுத்துப் பருகியதாகவும், பார்வதி தேவி அதைத் தடுக்கும் பொருட்டு சிவனின் கழுத்தில் அழுத்த, விடமானது, அத்தோடு நின்று விட்டதாகவும், அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்து புராணங்களின் படி, கூர்ம அவதாரமானது, தொடர்ச்சியாக 'மோகினி அவதாரம்' எடுத்து அரக்கர்களை மயக்கியதாகவும் கதை உண்டு. அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்தற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தானதாகி விடும் என்பதாலும், அதை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதற்காக, விஷ்ணு, 'மோகினி அவதாரம்' எடுத்து அசுரர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.[3][4]