செங்குருதியணு
From Wikipedia, the free encyclopedia
செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ் விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும்.
இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் கரு இல்லை. ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றன[1]. எலும்பு மச்சையில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் பெருவிழுங்கி (Macrophage) இனால், கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.