உயிரணு
From Wikipedia, the free encyclopedia
உயிரணு (இலங்கை வழக்கு: கலம், ஆங்கிலம்:Cell) அல்லது உயிர்க்கலம் என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில் காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத் தொகுதிகள் எனலாம்[1]. தமிழில் உயிரணுவை செல், கலம், கண்ணறை, திசுள் என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்க நுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது[2]. உயிரணுக்கள் குறைந்த பட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகியிருக்கும் என அறியப்படுகின்றது[3][4][5]
தனியொரு உயிரணுவினால் ஆன உயிரினங்களாக பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிர்களை உள்ளடக்கிய நிலைக்கருவிலிகளையும், அநேகமான அதிநுண்ணுயிரிகளையும், ஒரு சில பூஞ்சை இனங்களையும் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள், தாவரங்கள், அநேகமான பூஞ்சைகள் பல்லுயிரணுவுள்ள உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள். விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து, தாவரங்களின் உயிரணுக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண், பெண் வேறுபாடுடைய உயிரினங்களில் பாலணுக்கள் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, கருவணு (Zygote) என அழைக்கப்படுகிறது.
மனிதரில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, அதாவது கருவணு மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகி குழந்தையாக உருப்பெறுகிறது.