தேசியப் பூங்கா
விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்க அரசால் ஒதுக்கப்படும் நிலப்பகுதி / From Wikipedia, the free encyclopedia
தேசியப் பூங்கா (National park) என்பது, ஓர் அரசால் அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஓர் ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், விலங்குகள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும் (இ.பா.ப.ஒ.) அதன் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும் தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு II என்னும் வகையுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ. வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப் பெரிய தேசியப்பூங்கா வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா ஆகும். இ.பா.ப.ஒ. வின் தகவல்களின்படி, உலகில் சுமார் 7000 தேசியப் பூங்காக்கள் உள்ளன[1].