நடுவண் வங்கி
நாட்டின் நாணயம், பணப்புழங்கல் மற்றும் வட்டிவீதங்களைக் கட்டுப்படுத்தும் அரச நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
நடுவண் வங்கி (central bank), ரிசர்வ் வங்கி (reserve bank), அல்லது நாணய ஆணையம் (monetary authority) அல்லது மத்திய வங்கி எனப்படுவது ஒரு அரசின் நாணயம், பணப்புழங்கல், மற்றும் வட்டி வீதங்களை மேலாண்மை செய்கின்ற பொதுத்துறை அமைப்பாகும். நடுவண் வங்கிகள் வழக்கமாக தங்கள் நாட்டில் செயல்படுகின்ற வணிக வங்கி அமைப்பை மேற்பார்வையிடும் பொறுப்பையும் கொண்டுள்ளன. ஓர் வணிக வங்கிக்கு எதிராக நடுவண் வங்கிக்கு நாட்டில் புழங்கும் பணத்தின் அடித்தளத்தை உயர்த்துவதில் ஏகபோக உரிமை உள்ளது; இந்த வங்கி அச்சடித்து வெளியிடும் நாணயத் தாள்கள் சட்டப்படி செல்லுபடியாகும்.[1][2] தெற்காசியாவில் எடுத்துக்காட்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கிகளைக் கூறலாம்.
வட்டி வீதங்களை ஏற்றியிறக்கியும், பண இருப்புத் தேவைகளை வரையறுத்தும், நிதி நெருக்கடிகளின் போது வங்கித் துறைக்கு கடைசி கடன்வழங்குபவராக செயல்பட்டும் நாட்டின் பணப்புழங்கலை (பணவியல் கொள்கை) மேலாண்மை செய்தலே நடுவண் வங்கியின் முதற்கடமை ஆகும். நடுவண் வங்கிகளுக்கு பொதுவாக மேற்பார்வையிடும் அதிகாரங்களும் கொடுக்கப்படுகின்றன; வங்கிகளின் மூடல்கள், வணிக வங்கிக்களுக்கான தீவாய்ப்புக்களைக் குறைத்தல் மற்றும் பிற நிதிய நிறுவனங்கள் பொறுப்பில்லாத அல்லது ஏமாற்று வழிகளில் செயல்படுவதை தடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த அதிகாரங்கள் அரசினால் வழங்கப்பட்டுள்ளன. . பெரும்பாலான வளர்ச்சியுற்ற நாடுகளின் நடுவண் வங்கிகள் அரசியல் குறுக்கீடுகள் இன்றி தனித்துச் செயல்படும் வகையில் நிறுவன அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுவண் வங்கியின் முதன்மைத் தலைவர் பொதுவாக ஆளுநர், தலைவர் (Governor, President) எனவும் ஆளுநர்களின் வாரியம் உள்ள ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவைத்தலைவர் (Chairman) எனவும் அழைக்கப்படுகின்றனர்.