புதிய ஏற்பாடு
கிறித்தவ புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதி / From Wikipedia, the free encyclopedia
புதிய ஏற்பாடு (New Testament) அல்லது கிரேக்க வேதாகமம்/விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும்.[1] முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தைக் கிறித்தவர்கள் பழைய உடன்படிக்கை என்று அழைக்கின்றனர். ஏனென்றால் கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், மரணத்தை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை.
எனவே, யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், கிறிஸ்துவின் காலத்திற்கு முற்பட்டதுமான (தனாக்/Tanakh என்றழைக்கப்படுகிற) புனித நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்கின்றனர். கிறிஸ்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.
பழைய ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாடும் பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [2].
புதிய ஏற்பாட்டின் மூல பாடம் (செப்துவசிந்தா)[3] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது.
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கிறித்தவத்தின் அடிப்படையாகும். புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பித்து, அவருடைய போதனைகளையும் அவர் புரிந்த அதிசய செயல்களையும் எடுத்துணர்த்துவதோடு, அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் விளக்குகிறது. தமது போதனையை எல்லா மக்களுக்கும் அறிவிக்க இயேசு தம் சீஷர்களை அப்போஸ்தலர்களை/திருத்தூதர்களை அனுப்பினார்.
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய பரிசுத்த வேதாகமம் (அ) திருவிவிலியம் என்னும் நூல் தொகுதி கிறித்தவ இறையியல் படிப்பின் ஆதாரமாகத் திகழ்கிறது. வெவ்வேறு கிறித்தவ சபைகளின் வழிபாட்டில் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் இணைந்து தொகுக்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் தாக்கம் சமயம், தத்துவம், மற்றும் அரசியல், இசை, ஓவியக் கலை, இலக்கியம், நாடகம் போன்ற பல துறைகளில் வெளிப்படுகின்றது.