புறவணியிழையம்
From Wikipedia, the free encyclopedia
புறவணியிழையம் (Epithelium) அல்லது மேலணியிழையம் என்பது விலங்கினங்களில் காணப்படும் நான்கு வகை அடிப்படை இழைய வகைகளில் இணைப்பிழையம், தசை இழையம், நரம்பிழையம் ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும், புறச் சூழலுடன் தொடர்புடையதாகவும், அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடியும் இருக்கும். மேலும் பல சுரப்பிகள் இவற்றால் ஆனவையே. புறவணியிழையங்களின் செயற்பாடுகள் சுரத்தல், தேர்ந்தெடுத்த உறிஞ்சல், பாதுகாப்பு, உயிரணுக்களிடையேயான போக்குவரத்து மற்றும் தொடு உணர்ச்சி என்பன ஆகும். கிரேக்கத்தில் "எபி" என்பது , "புற, மேல்," எனவும் "தீலி" என்பது "இழையம்" எனவும் பொருள்படுமாதலால் இதனை மருத்துத் துறையில் எப்பித்தீலியம் எனக் குறிப்பிடுகின்றனர்.
புறவணியிழையம் | |
---|---|
தோலிழையம் (Epidermis) என்பது உடலின் வெளிப்புறம் உள்ள தோலாக அமைகின்ற சிறப்பு புறவணியிழையங்களாகும்.
புறவணியிழையங்கள், இணைப்பிழையங்களின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக அமையும்போது இரண்டுக்குமிடையே அடிமென்சவ்வு என அழைக்கப்படும் ஒரு படை இருந்து இரு வகை இழையங்களையும் பிரிக்கின்றது. இந்த சவ்வுகளில் மிக நெருக்கமாக கூட்டமான உயிரணுக்கள் இறுக்கச் சந்திப்புகளுடன் டெஸ்மோசோம்களால் பிணையப்பட்டுள்ளன. புறவணியிழையங்கள் குருதிக் கலன்கள் அற்றவை. எனவே அவற்றிற்கான சத்துக்களை கீழேயுள்ள இணைப்பிழையங்கள் மூலமாக பரவல் முறையில் பெறுகின்றன.[1] இந்த இழையங்கள் சில இடங்களில் கூட்டமாக அமைக்கப்பட்டு புறச்சுரப்பிகளாகவும் (Exocrine glands), நாளமில்லாச் சுரப்பிகளாகவும் (Endocrine glands) செயல்படும். இவ்வகைச் சுரப்பிகள் குருதிக் கலன்களைக் கொண்டிருக்கும்.