பேர்கன் நகர வரலாறு
From Wikipedia, the free encyclopedia
நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நகரத்தின் வரலாறு கிபி 11ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகிறது. இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழம்பெரும் நகரம் ஆகும். இந்நகரம் 11ஆம் நூற்றாண்டிலிருந்து பலநூறு ஆண்டுகள் சர்வதேச வணிகம், கப்பல் வணிகம் போன்ற துறைகளில் முன்னணியில் இருந்தது.
பேர்கன் நகரம், Harald Hardråde என்பவரின் மகனான Olav Kyrre (1067-1093) அரசனால் கி.பி. 1070 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை நிலவியதனால்[1], 1970 இல் 900 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆயினும், புதிய ஆராய்ச்சிகள் ஏற்கனவே 1020ஆம், அல்லது 1030 ஆம் ஆண்டுகளிலேயே பேர்கனில் வணிக குடியேற்றங்கள் ஏற்பட்டு விட்டதாகச் சொல்கின்றது[2]. பேர்கன் என்ற பெயரையும் Olav Kyrre அரசனே "மலைகளிடையேயான பசும்புல் நிலம்" என்ற அர்த்தத்தில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது[3].
பேர்கன் முக்கிய வணிக மையமாக மாறத்தொடங்கியதும், மிக விரைவாக வளர்ச்சியடைந்து, 1100-1600 ஆண்டுகளில் நோர்டிக் நாடுகளில் மிகப் பெரிய நகரமாகவும், 1830 ஆம் ஆண்டு வரையில் நோர்வேயின் மிகப் பெரிய நகரமாகவும் விளங்கி வந்தது. 12ஆம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்து (1217), 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் (1314) பல ஆண்டுகள் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாகவும் இருந்தது.
1100 ஆம் ஆண்டளவில், நோர்வேயின் வடக்குக் கடற் கரையோரமிருந்து பெறப்படும் Cod மீன் கருவாட்டு வணிகத்தினால் பேர்கன் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றது[4]. 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேர்கன், நோர்வேயின் மிக முக்கிய வணிக மையமாக நிறுவப்பட்டது[5]. அந்தக் கால கட்டத்தில், வட ஐரோப்பாவின் முக்கியமான வணிக நகரங்களை இணைத்து செயற்பட்ட Hanseatic League அமைப்பில், மிக முக்கிய நகரமாக பேர்கனே இருந்து வந்தது[6].