From Wikipedia, the free encyclopedia
கிள்ளான் பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Klang Valley; மலாய்: Lembah Klang) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும்; அவற்றுக்கு அடுத்துள்ள சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும்.[1]
இதன் தற்காலப் பெயராக கோலாலம்பூர் பெருநகர்ப் பகுதி அல்லது பெரும் கோலாலம்பூர் (Greater Kuala Lumpur) உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு, புவியியல் ரீதியாக தித்திவாங்சா மலைத்தொடரை (Titiwangsa Mountains) வடக்கிலும் கிழக்கிலும், மலாக்கா நீரிணையை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
வடமேற்கில் ரவாங்; தென்கிழக்கில் செமினி; மற்றும் தென்மேற்கில் கிள்ளான் மற்றும் கிள்ளான் துறைமுகம் போன்ற நகரங்கள் வரை நீண்டுள்ளது.
இந்தப் பள்ளத்தாக்கு கிள்ளான் ஆற்றின் பெயரால் அழைக்கப் படுகிறது. கிள்ளான் ஆறு, கிள்ளான் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் முதன்மையான ஆறு ஆகும். கோம்பாக்கில் உள்ள கிள்ளான் கேட்ஸ் (Klang Gates Quartz Ridge) மலைப்பகுதியில் தொடங்கி கிள்ளான் துறைமுகம் வழியாக மலாக்கா நீரிணையில் பாய்கிறது.
கிள்ளான் ஆறு, இந்தப் பகுதியின் ஆரம்பகால வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கிள்ளான பள்ளத்தாக்கு ஈயச் சுரங்க நகரங்கள் நிறைந்த இடமாக விளங்கியது.
1800-களின் தொடக்கத்தில் ராஜா அப்துல்லா (Raja Abdullah) என்பவரால் கோலாலம்பூர் நகரம் விரிவாக்கப்பட்ட போது கிள்ளான் பள்ளத்தாக்கு உருவாக்கப்பட்டது. அப்போது அங்கு நிறைய ஈயக் கனிமங்கள் காணப்பட்டன.
அடுத்து, 1800-களின் மத்தியில் சுவெட்டன்காம் துறைமுகம் (ஆங்கிலம்: Port Swettenham; மலாய்: Pelabuhan Klang); (தற்போது: கிள்ளான் துறைமுகம்) திறக்கப்பட்டது. கோலாலம்பூரைக் கிள்ளான் துறைமுகத்துடன் இணைக்கும் தொடருந்துச் சேவை 1892-இல் தொடக்கப்பட்டது. அப்போது கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவான வளர்ச்சி கண்டது.
1952-இல் சர் ஜெரால்ட் டெம்பிளர் அவர்களால் பெட்டாலிங் ஜெயா திறக்கப் பட்டதும் வரலாறு மாறத் தொடங்கியது. மலாயாவில் 1948 முதல் 1960 வரையில் மலாயாவில் அவசரகாலநிலை. அதன் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கின் புதிய பகுதிகளுக்கு மக்கள் குடியேற்றப் பட்டனர்.[2][3][4]
ஆகஸ்ட் 31, 1957-இல் மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு பிப்ரவரி 1, 1972-இல் கோலாலம்பூர் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட போது பெட்டாலிங் ஜெயா, ஒரு துணை நகரமாக மாறியது. சா ஆலாம் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரானது. 1974-ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
2020-ஆம் ஆன்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 8 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இது மலேசியத் தொழில் மற்றும் வணிகத் திற்கான முதன்மை இடமாக விளங்குகிறது.[5]
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் மலேசியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் இந்தோனேசியா, இந்தியா, நேபாளம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் குடியேற்றத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.