மலேசியா
தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியா[a] (ஆங்கிலம்: Malaysia) என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது ஒரு கூட்டாட்சி அரசியல் சட்ட முடியாட்சி ஆகும். 13 மாநிலங்களையும், மூன்று கூட்டாட்சி நிலப்பரப்புகளையும் இது கொண்டுள்ளது. தென் சீனக்கடலால் இந்நாடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை தீபகற்ப மலேசியா மற்றும் போர்னியோவின் கிழக்கு மலேசியா ஆகியவையாகும். தீபகற்ப மலேசியாவானது தாய்லாந்துடன் நில மற்றும் கடல் எல்லைகளையும், சிங்கப்பூர், வியட்நாம், மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணை மற்றும் இந்தோனேசியாவுடன் நில எல்லைகளையும், பிலிப்பீன்சு மற்றும் வியட்நாமுடன் கடல் எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் நாட்டின் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும், கூட்டாட்சி அரசாங்கத்தின் சட்டமியற்றும் பிரிவின் அமைவிடமாகவும் உள்ளது. புத்ராஜெயா கூட்டாட்சி நிர்வாகத் தலைநகரமாகும்.[7] இது கூட்டாட்சி அரசாங்கத்தின் செயலாட்சிப் பிரிவு (அமைச்சரவை, கூட்டாட்சி அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி முகமைகள்) மற்றும் நீதித்துறைப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளின் அமைவிடத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 3.4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் உலகின் 42 ஆவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடு இதுவாகும். மலேசியா வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். 17 பெரும்பல்வகைமை நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். இந்நாடு ஏராளமான அகணிய உயிரிகளுக்குத் தாயகமாக உள்ளது. மலேசியாவின் ஜொகூர் மாநிலத்திலுள்ள தஞ்சோங் பியாய் எனும் இடமானது கண்டப்பகுதி ஐரோவாசியாவின் தெற்கு கோடிப் புள்ளி ஆகும்.
இந்நாடு இதன் தொடக்கத்தை மலாய் இராச்சியங்களில் கொண்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த இராச்சியங்கள் பிரித்தானிய நீரிணை குடியேற்ற பாதுகாப்பு பகுதிகளுடன் சேர்த்து பிரித்தானியப் பேரரசின் பகுதிகளாயின. இரண்டாம் உலகப் போரின் போது பிற அண்டை பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் குடியேற்ற பகுதிகளுடன் சேர்த்து பிரித்தானிய மலாயாவானது சப்பானியப் பேரரசினால் ஆக்கிரமிக்கப்பட்டது.[8] மூன்றாண்டுகள் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு 1946 இல் தீபகற்ப மலேசியாமானது குறுகிய காலத்திற்கு மலாயா ஒன்றியமாக ஒருங்கிணைக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தது. அந்த ஆண்டு இது மலாயா கூட்டமைப்பாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. இந்நாடு அதன் சுதந்திரத்தை 31 ஆகத்து 1957 அன்று அடைந்தது. 16 செப்டம்பர் 1963 இல் பிரித்தானிய அரசின் குடியேற்றப் பகுதிகளாக அந்நேரத்தில் இருந்த வடக்கு போர்னியோ, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் சுதந்திர மலாயாவானது ஒன்றிணைந்து மலேசியாவானது. ஆகத்து 1965 இல் கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது. அது ஒரு தனி, சுதந்திர நாடாக உருவானது.[9]
இந்நாடு பல இனங்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்டதாகும். இந்நாட்டின் அரசியல் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த பன்முகத்தன்மையானது ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் மலாய் இனத்தவராவர். சீனர், இந்தியர் மற்றும் பூர்வகுடிகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இங்கு வாழ்கின்றனர். மலாய் மொழியின் ஒரு தரப்படுத்தப்பட்ட வடிவமான மலேசிய மொழியானது இந்நாட்டின் அலுவல்பூர்வ மொழியாகும். ஆங்கிலமானது ஒரு செயல்பாட்டில் உள்ள இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. 111 வாழும் பூர்வகுடி மொழிகளுக்குத் தாயகமாகவும் கூட இந்நாடு உள்ளது.[10] இசுலாமை அரசின் சமயமாக அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அரசியலமைப்பானது முசுலிம் அல்லாதவர்களுக்கு சமய சுதந்திரத்தையும் வழங்குகிறது. இந்நாட்டின் அரசாங்கமானது வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற அமைப்பை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்நாட்டின் சட்ட அமைப்பானது பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நாட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசர் ஆவார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒன்பது முடியாட்சிகளின் சுல்தான்களிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அரசின் தலைவர் பிரதமர் ஆவார்.
இந்நாட்டின் பொருளாதாரமானது பாரம்பரியமாக இதன் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், வணிகம், சுற்றுலாத் துறை மற்றும் மருத்துவ சுற்றுலா ஆகிய துறைகளுக்குள்ளும் விரிவடைந்து வருகிறது. இந்நாடானது ஒரு புதிதாக தொழில் மயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் கட்டற்றதாகவும், அரசு சார்ந்ததாகவும் இப்பொருளாதாரம் உள்ளது. இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, கிழக்கு ஆசிய கூட்டமைப்பு, மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தொடக்க கால உறுப்பினர் இந்நாடாகும். மேலும், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாயம், மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் ஓர் உறுப்பினர் இந்நாடாகும்.
Remove ads
பெயர்க் காரணம்
மலாய்ஸ் (மலாயர்) என்ற சொல் மற்றும் இலத்தீன்-கிரேக்கப் பின்னொட்டான -இயா[11] ஆகியவற்றின் ஓர் இணைப்புச் சொல் மலேசியா என்ற பெயர் ஆகும். இதை 'மலாயர்களின் நிலம்' என்று மொழிபெயர்க்கலாம்.[12] 11 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட குறிப்புகளிலும் கூட இதை ஒத்த ஒலிப்புடைய வேறுபட்ட சொற்கள் தோன்றுகின்றன. சுமத்ராவில் உள்ள பகுதிகளுக்கான இடப்பெயர் ஆய்வுகளுக்கான சொல்லாக அல்லது மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள ஒரு பெரிய பகுதியைக் குறிப்பிடுவதாக இவை அமைந்திருந்தன.[13] சமசுகிருத வாயு புராணமானது பொ. ஊ. முதலாம் ஆயிரமாண்டில் இருந்து உள்ளதாக எண்ணப்படுகிறது. 'மலாயாத்வீபா' என்ற பெயருடைய ஒரு நிலத்தை அது குறிப்பிட்டுள்ளது. சில அறிஞர்களால் நவீன கால மலாய் தீபகற்பத்துடன் இது அடையாளப்படுத்தப்படுகிறது.[14][15][16][17][18] தங்க செர்சோனிசின் மேற்குக் கடற்கரைக்கு மலாயு குலோன் என்ற பெயரைப் பயன்படுத்திய ஜியாகிராஃபிகா எனும் தாலமியின் இரண்டாம் நூற்றாண்டு நூல் மற்றும் மலாயு எனும் யிஜிங்கின் ஏழாம் நூற்றாண்டு நூல் ஆகியவை இப்பகுதியின் பெயரைக் குறிப்பிட்ட பிற குறிப்பிடத்தக்க நூல்களாகும்.[13]
ஒரு நேரத்தில் மெலாயு இராச்சியமானது அதன் பெயரை சுங்கை மெலாயுவில் இருந்து பெற்றது.[19][20] மெலாயு பிறகு சிறீவிஜயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதாக உருவானது.[13] சுமத்ராவின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்ந்து தொடர்புபடுத்தப்பட்டது. குறிப்பாக, பலேம்பங்குடன் இவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டது. மலாக்கா சுல்தானகத்தின் நிறுவனர் பலேம்பங்கில் இருந்து தான் வந்தார் என்று எண்ணப்படுகிறது.[21] 15 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராந்திய சக்தியாக மலாக்கா உருவான போது தான் இப்பெயரானது ஓர் இனப்பெயராக வளர்ச்சியடைந்ததாக எண்ணப்படுகிறது. இசுலாமியமயமாக்கமானது மலாக்காவில் ஓர் இன சமய அடையாளத்தை நிறுவியது. மெலாக்கர்களுடன் மெலாயு என்ற சொல்லானது மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடியதாக தோன்றத் தொடங்கியது. மலாக்கா சுல்தானுக்கு விசுவாசமுடையவர்களாக இருந்த உள்நாட்டு மலாய் மொழி பேசியவர்களை இது குறிப்பாகக் குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலாயோஸ் என்ற சொல்லை தொடக்க கால போத்துக்கேயர் பயன்படுத்தியது இதை பிரதிபலிக்கிறது. மலாயோஸ் என்ற சொல்லானது மலாக்காவின் ஆளும் வர்க்கத்தினரை மட்டுமே குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. மலாக்காவில் இருந்து வந்த வணிகர்களின் முக்கியத்துவமானது மெலாயு என்ற சொல் முசுலிம் வணிகர்களுடன் தொடர்புபடுத்தப்படுவதற்கு வழிவகுத்தது. அங்கிருந்து பரந்த பண்பாட்டு மற்றும் மொழிக் குழுவுடன் தொடர்புபடுத்தப்படுவதாக உருவானது.[13] மலாக்கா மற்றும் பிறகு ஜொகூர் ஆகிய இரு பகுதிகளுமே மலாய் பண்பாட்டின் மையமாக தம்மை உரிமை கோரின. இந்த நிலைக்கு பிரித்தானியர் ஆதரவளித்தனர். சுமத்ராவைக் குறிப்பிடாமல் மலாய் தீபகற்பத்துடன் பொதுவாக அதிகத் தொடர்புடையதாக மலாய் என்று சொல் உருவாவதற்கு இது வழிவகுத்தது.[21]
ஐரோப்பியக் குடியேற்றம் தொடங்குவதற்கு முன்னர் மலாய் தீபகற்பமானது உள்ளூர் அளவில் தனா மெலாயு ('மலாய் நிலம்') என்று அறியப்பட்டது.[22] ஒரு செருமானிய அறிஞரான யோகன் பிரடரிச் புளுமென்பாச்சால் உருவாக்கப்பட்ட ஓர் இன வகைப்படுத்தலின் கீழ் கடல்சார் தென்கிழக்காசியாவின் பூர்வகுடிகளானவர்கள் மலாய் இனத்தவர் எனும் ஓர் ஒற்றைப் பிரிவாகக் குழுப்படுத்தப்பட்டனர்.[23][24] 1826 இல் ஓசியானியாவுக்கு பிரெஞ்சு நாடுகாண் பயணி யூல்சு துமோந்து துர்வில்லேவின் பயணத்தைத் தொடர்ந்து சொசைட்டி டி ஜியாகிராஃபி எனும் அமைப்பிற்கு 1831 இல் மலேசியா, மைக்குரோனீசியா மற்றும் மெலனீசியா ஆகிய சொற்களை அவர் பின்னர் முன்மொழிந்தார். ஏற்கனவே இருந்த பொலினீசியா என்ற சொல்லிலிருந்து இந்த அமைதிப் பெருங்கடல் பண்பாடுகள் மற்றும் தீவுக் கூட்டங்களை வேறுபடுத்திக் குறிப்பிட்டார். "கிழக்கிந்தியத் தீவுகள் என்று பொதுவாக அறியப்பட்ட ஒரு பகுதியை" மலேசியா என்று துமோந்து துர்வில்லே வரையறுத்தார்.[25] 1850 இல் ஆங்கிலேய இனவியலாளரான ஜார்ஜ் சாமுவேல் வின்ட்சோர் இயர்ல் இந்திய தீவுக்கூட்டம் மற்றும் கிழக்கு ஆசியாவின் இதழ் என்ற பத்திரிக்கையில் எழுதும் போது தென்கிழக்காசியாவின் தீவுகளுக்கு "மெலாயுனேசியா" அல்லது "இந்துனேசியா" ஆகிய பெயர்களைக் கொடுப்பதை முன்மொழிந்தார். இதில் முதல் பெயருக்கு தன் ஆதரவை அளித்தார்.[26] தற்போதைய மலாய் தீவுக்கூட்டத்தைக் குறிப்பிட மலேசியா என்ற பெயரானது ஓரளவுக்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது.[27] நவீன பெயரிடுதலில் மலாய் தீபகற்பம் மற்றும் தென்கிழக்காசியாவின் அண்டைத் தீவுகளின் பகுதிகள் ஆகியவற்றில் முதன்மையாகக் குடியமர்ந்துள்ள ஆசுத்திரோனீசிய மக்களின் ஓர் இன சமயக் குழுவுக்கான பெயராக மலாய் என்ற பெயர் தொடர்கிறது. மேற்குறிப்பிட்ட அண்டைத் தீவுகளில் சுமத்ராவின் கிழக்குக் கடற்கரை, போர்னியோவின் கடற்கரை மற்றும் இப்பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள சிறிய தீவுகள் ஆகியவை அடங்கும்.[28]
1957 இல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இந்நாடு விடுதலை பெற்றது. மலாயா கூட்டமைப்பு என்ற பெயரைக் கொண்டிருந்தது. மலேசியா[29] மற்றும் பொதுவாக முதலாம் ஆயிரமாண்டில் மலாய் தீபகற்பத்தின் மேல் பகுதியில் அமைந்திருந்த வரலாற்று ரீதியிலான இராச்சியத்தின் பெயரான இலங்காசுகம்[29] போன்ற பிற சாத்தியமான பெயர்களைத் தவிர்த்து மலாயா கூட்டமைப்பு என்ற பெயரானது தேர்ந்தெடுக்கப்பட்டது.[30][31] இருந்த போதிலும், ஏற்கனவே இருந்த அரசுகளான மலாயா கூட்டமைப்பு, அதனுடன் சேர்த்து சிங்கப்பூர், வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவை இணைந்து ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கிய போது 1963 இல் மலேசியா என்ற பெயரானது பின்பற்றப்பட்டது.[32][b] 1963 இல் மலாயாவுடன் சிங்கப்பூர், வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவை இணைத்துக் கொள்ளப்பட்டதை சி என்ற எழுத்து பிரதிநிதித்துவப்படுத்தியதன் காரணமாக மலேசியா என்ற பெயரானது தேர்ந்தெடுக்கப்பட்டது என ஒரு கோட்பாடு முன் வைக்கப்படுகிறது.[32] பிலிப்பீன்சுவில் இருந்த அரசியல்வாதிகள் பிலிப்பீன்சு என்று அந்நாட்டிற்குப் பெயர் வைக்கப்படுவதற்கு முன்னர் தங்களது நாட்டுக்கு மலேசியா என்ற பெயரை வைப்பது குறித்து கூர்ந்து ஆராய்ந்து வந்தனர்.[34]
Remove ads
வரலாறு

மலேசியாவில் நவீன மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களானவை 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன.[35] மலாய் தீபகற்பத்தில் முதல் குடியிருப்பாளர்களாக நெகிரிட்டோ மக்கள் கருதப்படுகின்றனர்.[36][37] பொ. ஊ. மு. 2,000 மற்றும் பொ. ஊ. 1,000 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் "கடல்சார் பச்சைக்கல் பாதையில்" மலேசியாவின் பகுதிகள் பங்கெடுத்திருந்தன.[38][39][40][41] இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வாணிகர்களும், குடியிருப்புவாசிகளும் பொ. ஊ. முதலாம் நூற்றாண்டிலிருந்தே கூட வருகை புரிந்துள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் வணிகத் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பட்டணங்களை அவர்கள் நிறுவினர். அவர்களது இருப்பானது உள்நாட்டுப் பண்பாடுகளின் மீது வலிமையான இந்திய மற்றும் சீன தாக்கங்களுக்கு வழி வகுத்துள்ளது. மலாய் தீபகற்பத்தின் மக்கள் இந்து சமயம் மற்றும் பௌத்தம் ஆகிய சமயங்களைப் பின்பற்றத் தொடங்கினர். சமசுகிருத கல்வெட்டுக்களானவை நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே கூட இங்கு தோன்றுகின்றன.[42] மலாய் தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் சுமார் இரண்டாம் நூற்றாண்டின் போது இலங்காசுகம் இராச்சியமானது தோன்றியது. சுமார் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.[30] 7 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பெரும்பாலான தெற்கு மலாய் தீபகற்பமானது கடல்சார் சிறீவிஜயப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகள் வாக்கில் மயாபாகித்து பேரரசானது தீபகற்பத்தின் பெரும்பகுதி மற்றும் மலாய் தீவுக்கூட்டம் மீதான கட்டுப்பாட்டை சிறீவிஜயத்திடம் இருந்து வெற்றிகரமாகப் பறித்தது.[43] 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழைய சிறீவிஜய அரசவையுடன் தொடர்புடைய, முன்னாள் சிங்கபுர இராச்சியத்திலிருந்து தப்பித்து வந்த ஒரு மன்னனான பரமேசுவரன் மலாக்கா சுல்தானகத்தை நிறுவினார்.[44] இசுலாமுக்குப் பரமேசுவரன் மதம் மாறியதைத் தொடர்ந்து இசுலாமின் பரவலானது அதிகரிக்கத் தொடங்கியது. இக்காலத்தின் போது மலாக்காவானது முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்தது. இப்பகுதி முழுவதிலுமிருந்து வணிகத்தை ஈர்த்தது.[45]

1511 இல் மலாக்காவானது போர்த்துகலால் வெல்லப்பட்டது.[45] அதற்குப் பிறகு இது 1641 இல் டச்சுக்காரர்களால் வெல்லப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு பினாங்கு தீவை கெதாவின் சுல்தான் குத்தகைக்கு விட்ட போது 1786 இல் பிரித்தானியப் பேரரசானது மலாயாவில் அதன் இருப்பை நிறுவியது. 1819 இல் சிங்கப்பூர் பட்டணத்தை பிரித்தானியர் பெற்றனர்.[46] 1824 இல் ஆங்கிலேய-டச்சு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மலாக்காவின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். 1826 வாக்கில் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் மற்றும் லபுவான் தீவு ஆகியவற்றை பிரித்தானியர் தம் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பிரித்தானிய அரசின் நிர்வாகத்துக்குட்பட்ட நீரிணைக் குடியேற்றங்களாக அவற்றை நிறுவினர். 20 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சேர மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் என்று அறியப்பட்ட பகாங், சிலாங்கூர், பேராக், மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மலாயா ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கூற பிரித்தானிய குடியிருப்புவாசிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.[47] ஒப்பந்தத்தின் படி மலாய ஆட்சியாளர்கள் ஆலோசனைகளை நிறைவேற்றுவதைத் தள்ளி வைக்கலாம் என்ற நிலை இருந்தது. மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் என்று அறியப்பட்ட தீபகற்பத்தின் எஞ்சிய ஐந்து மாநிலங்களானவை நேரடியாக பிரித்தானிய ஆட்சியின் கீழ் இல்லாதிருந்த அதே நேரத்தில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்கில் பிரித்தானிய ஆலோசகர்களை ஏற்றும் கொண்டன. சரவாக் மற்றும் போர்னியோவில் இத்தகைய செயல்பாடுகளானவை 19 ஆம் நூற்றாண்டு வரை பொதுவாக தனித் தனியாக நடைபெற்றன. பிரித்தானிய ஆட்சியின் கீழ் பணியாளர்களாகச் சேவையாற்ற சீனர் மற்றும் இந்தியர்களின் புலப்பெயர்வானது ஊக்குவிக்கப்பட்டது.[48] 1877 மற்றும் 1878 க்கு இடையில் புரூணை சுல்தான் மற்றும் சூலு சுல்தான் ஆகியோர் முறையே தங்களது நிலப்பரப்புகளின் உடைமை உரிமைகளைக் கை மாற்றிய போது பிரித்தானியக் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது சபா என்று அழைக்கப்படும் பகுதியானது பிரித்தானிய வடக்கு போர்னியோவாக வந்தது.[49] 1842 இல் புரூணை சுல்தானால் ஜேம்சு புரூக்கிடம் சரவாக்கானது விட்டுக் கொடுக்கப்பட்டது. புரூக்கின் வழித்தோன்றல்கள் 1946 வரை சுதந்திரமான இராச்சியத்தை வெள்ளை இராசாக்களாக ஆட்சி செய்தனர். 1946 இல் இது பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.[50]
இரண்டாம் உலகப் போரின் போது மலாயா, வடக்கு போர்னியோ, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மீது சப்பானிய இராணுவமானது படையெடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஆக்கிரமித்துக் கொண்டது. இக்காலத்தின் போது இனப் பதட்டங்களானவை அதிகரிக்கப்பட்டன. தேசியவாதமானது வளர்ந்தது.[51] நேச நாடுகளால் மலாயா மீண்டும் வெல்லப்பட்டதற்குப் பிறகு சுதந்திரத்திற்கான பொது மக்களின் ஆதரவு அதிகரித்தது.[52] மலாயாவின் நிர்வாகத்தை மலாயா ஒன்றியம் என்று அழைக்கப்பட்ட ஓர் ஒற்றை பிரித்தானிய குடியேற்றமாக ஒன்றிணைக்கலாம் என்ற போருக்குப் பிந்தைய பிரித்தானியத் திட்டங்களுக்கு மலாயர்களிடமிருந்து வலிமையான எதிர்ப்பைப் பெற்றன. மலாய் ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தப்படுவதையும், சீன இனத்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதையும் அவர்கள் எதிர்த்தனர். 1946 இல் நிறுவப்பட்ட மலாயா ஒன்றியமானது சிங்கப்பூர் தவிர்த்து மலாய் தீபகற்பத்தில் இருந்த அனைத்து பிரித்தானிய நிலப்பரப்புகளையும் கொண்டிருந்தது. இது சீக்கிரமே கலைக்கப்பட்டது. 1 பெப்ரவரி 1948 அன்று மலாயா கூட்டமைப்பால் அது இடமாற்றம் செய்யப்பட்டது. பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் மலாய் அரசுகளின் ஆட்சியாளர்களின் சுயாட்சியை இது மீண்டும் நிறுவியது.[53]
இக்காலத்தின் போது மலாயா பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழான பெரும்பாலான சீன இனக் கிளர்ச்சியாளர்கள் மலாயாவிலிருந்து பிரித்தானியரை வெளியே தள்ள வடிவமைக்கப்பட்ட கரந்தடிப் போர் நடவடிக்கைகளைத் தொடங்கினர். மலாயா நெருக்கடி நிலையானது மலாயாவில் பொதுநலவாய நாடுகளின் துருப்புகளால் நடத்தப்பட்ட ஒரு நீண்ட கால கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டிருந்தது.[54] 31 ஆகத்து 1957 அன்று பொதுநலவாய நாடுகளின் ஒரு சுதந்திரமான உறுப்பினராக மலாயா உருவானது.[55] இறுதியில் மலாயாவை வடக்கு போர்னியோ (இணைக்கப்படும் போது சபா என்று அறியப்பட்டது), சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய பிரித்தானிய அரசின் குடியேற்றங்களுடன் இணைக்க ஓர் அகல் விரிவான திட்டமானது உருவாக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட கூட்டமைப்பானது உண்மையில் மலாயா சுதந்திரத்தை நினைவுபடுத்தும் விதமாக 31 ஆகத்து 1963 அன்று நடப்பதாக இருந்தது. எனினும், இந்தோனேசியாவின் சுகார்னோ மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி போன்ற கூட்டமைப்புக்கு எதிரானவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி ஐக்கிய நாடுகள் அவையால் சபா மற்றும் சரவாக்கில் கூட்டமைப்புக்கான ஆதரவு நிலை குறித்த ஒரு சுற்றாய்வை நடத்துவதற்கான தேவை காரணமாக கூட்டமைப்பு நிறுவப்படும் நாளானது 16 செப்டம்பர் 1963 வரை தள்ளி வைக்கப்பட்டது.[56][57]
கூட்டமைப்பானது இந்தோனேசியாவுடனான ஒரு சண்டை, மேலும் போர்னியோ மற்றும் மலாய் தீபகற்பத்தில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான தொடர்ச்சியான சண்டைகள் உள்ளிட்ட அதிகரித்த நிலையான பதட்டங்களைக் கொண்டு வந்தது. பிலிப்பீன்சுவின் தெற்கு தீவுகளில் இருந்து வந்த மோரோ கடற்கொள்ளையர்களால் சபாவுக்குள் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்கள், 1965 இல் சிங்கப்பூர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது[58][59] மற்றும் இன மோதல்கள் போன்ற பல பிரச்சினைகளுடன் சேர்த்து சரவாக் பொதுவுடைமைவாத கிளர்ச்சி மற்றும் இரண்டாவது மலாயா நெருக்கடி நிலை ஆகியவையாக இது அதிகரித்தது. இனப் பிரச்சினையானது 1969 இல் மே இனக் கலவரங்களில் உச்ச நிலையை அடைந்தது.[60] கலவரங்களுக்குப் பிறகு பிரதமர் அப்துல் ரசாக் உசேனால் பொருளாதாரத்தில் பூமிபுத்திரர்களின் பங்கை அதிகரிக்க முயற்சித்த ஒரு சர்ச்சைக்குரிய புதிய பொருளாதாரக் கொள்கையானது தொடங்கப்பட்டது.[61] பிரதமர் மகாதீர் முகமதுவின் கீழ் 1980 களில் துரித பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலின் காலகட்டமானது தொடங்கியது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டதிலிருந்து உற்பத்தி மற்றும் தொழில்துறையை அடிப்படையாகக் கொண்டதாக பொருளாதாரமானது மாற்றமடைந்தது. பெற்றோனாசு கோபுரங்கள், வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, பல்லூடகப் பெருவழி மற்றும் ஒரு புதிய கூட்டாட்சி நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயா போன்ற ஏராளமான பெரும் கட்டமைப்புத் திட்டங்களானவை முடிக்கப்பட்டன.[32]
1990 களின் பிற்பகுதியில் ஆசிய நிதி நெருக்கடியானது இந்நாட்டைப் பாதித்தது. இந்நாட்டின் பண, பங்குச் சந்தை மற்றும் வீட்டு மனை சந்தைகள் கிட்டத்தட்ட வீழ்ச்சியடையும் நிலைக்குக் காரணமானது. எனினும், அவை பின்னர் மீண்டன.[62] ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் என்பது ஒரு முக்கியமான உலகளாவிய ஊழல் முறைகேடு ஆகும். 2015 இல் அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் இதில் சிக்க வைக்கப்பட்டார்.[63] சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆளும் அரசியல் கட்சியில் முதல் மாற்றமான 2018 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அம்மாற்றத்திற்கு இந்த முறைகேடு பங்களித்தது.[64] 2020 களில் கோவிட்-19 பெருந்தொற்றால் உருவான சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுடன் ஒத்ததாக ஓர் அரசியல் பிரச்சினையால் இந்நாடு உறுதியாகப் பிடிக்கப்பட்டது.[65] இதைத் தொடர்ந்து முன்னதாக நடத்தப்பட்ட ஒரு பொதுத் தேர்தலானது நவம்பர் 2022 இல் நடைபெற்றது. நாட்டின் வரலாற்றில் முதல் தொங்கு நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் காரணமானது.[66] 24 நவம்பர் 2022 அன்று அன்வர் இப்ராகீம் மலேசியாவின் 10 ஆவது பிரதமராகப் பதவியேற்றார். ஒரு பெரும் கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கினார்.[67]
Remove ads
அரசாங்கமும், அரசியலும்

மலேசியா ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சியாகும். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரே கூட்டாட்சி நாடு இதுவாகும்.[68] இந்நாட்டின் அரசாங்க அமைப்பானது வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற அமைப்பை நெருக்கமான மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இங்கு பிரித்தானிய ஆட்சியின் ஒரு மரபாக இது உள்ளது.[69] அரசின் தலைவர் மன்னர் ஆவார். இவரது அலுவல் பூர்வமான பட்டம் யாங் டி பெர்துவா அகோங் என்பதாகும். மன்னரானவர் ஒரு ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கு மலேசிய முடியாட்சிகளின் ஒன்பது மரபுவழி ஆட்சியாளர்களிலிருந்து அந்த ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பட்டத்து ஆளுநர்களைக் கொண்ட பிற நான்கு மாநிலங்கள் இத்தேர்வில் பங்கேற்பது இல்லை. அலுவல்பூர்வமற்ற ஒப்பந்தத்தின் படி இப்பதவியானது இந்த ஒன்பது பேருக்கு மத்தியில் சுழற்சி முறையில் கொடுக்கப்படுகிறது.[69] 31 சனவரி 2024 இலிருந்து ஜொகூரின் இப்ராகிம் இசுகந்தர் இப்பட்டத்தைக் கொண்டுள்ளார். 1994 இல் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டதிலிருந்து மன்னரின் பங்கானது பெருமளவுக்கு பெயரளவிலேயே உள்ளது. அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது, நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற பங்குகளை இவர் ஆற்றுகிறார்.[70]
சட்டமியற்றும் அதிகாரமானது கூட்டாட்சி மற்றும் மாநில அவைகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. ஈரவைகளையுடைய கூட்டாட்சி நாடாளுமன்றமானது பிரதிநிதிகளின் அவை எனும் கீழவை, மற்றும் செனட் எனும் மேலவை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[71] 222 உறுப்பினர்களை உடைய கீழவைக்கு ஒற்றை உறுப்பினர் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக ஐந்தாண்டு கால பதவிக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அனைத்து 70 மேலவை உறுப்பினர்களும் மூன்றாண்டு பதவிக் காலத்தை உடையவர்களாக உள்ளனர். இதில் 26 பேர் 13 மாநில அவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 44 பேர் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர்.[45] நாடாளுமன்றமானது பல கட்சி அமைப்பைப் பின்பற்றுகிறது. அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர் என்ற அமைப்பின் மூலமாக அரசாங்கமானது தேர்ந்தெடுக்கப்படுகிறது.[45][72] நாடாளுமன்றத் தேர்தல்களானவை குறைந்தது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நடத்தப்படுகிறது. 2018 க்கு முன்னாள் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும், பெரும்பாலான மாநிலங்களில் மாநில சட்ட அவைக்கான தேர்தலிலும் வாக்களிக்க முடியும் என்று இருந்தது. வாக்களிப்பது என்பது கட்டாயம் கிடையாது.[73] சூலை 2019 இல் வாக்களிக்கும் வயதை 18 ஆண்டுகளாகக் குறைக்கும் ஒரு சட்ட மசோதாவானது அலுவல் பூர்வமாக இயற்றப்பட்டது.[74]
Remove ads
ஆட்சி பிரிவுகள்
![]() |
மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.
13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 மாநிலங்கள், அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப் படுகின்றன. ஒன்பது ஆட்சியாளர்களின் மன்றத்தில் இருந்து ஒரு மாமன்னர் தேர்ந்து எடுக்கப் படுகிறார். ஐந்தாண்டுகளுக்கு மாமன்னராகச் சேவையாற்றுகிறார்.[45] ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டமன்றம் எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன.
கிழக்கு மலேசியா மாநிலங்கள்
கிழக்கு மலேசியாவில் உள்ள மாநிலங்கள் (சபா மற்றும் சரவாக்); தமக்கு எனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன.[75] ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முக்கிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.[76]
எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசிய நாடாளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலம் ஒன்றின் வேண்டுகோளின் பேரில் அந்த மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும், மலேசிய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அந்த மாநிலங்களே கவனித்துக் கொள்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப் படுகின்றன.[77]
Remove ads
புவியியல்

மலேசியா 3,30,803 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.[12]
சிங்கப்பூருடன் ஒரு குறுகிய தரைப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் [78] பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது.[79]
நில எல்லைகள் பெரும்பாலும் பெர்லிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.[12] சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது[80].
ஆசிய நிலப் பகுதியிலும் மலாய் தீவுக் கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது.[81] ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள தஞ்சோங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது.[82] சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.[83]
Remove ads
பொருளியல்
மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.[84][85] பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது.
ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக் கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.[45] 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3-வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.[86]
Remove ads
மக்கள் தொகையியல்
2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும். இது உலகளவில் 43-ஆவது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 % விழுக்காடும், மலாய் இனம் அல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர்.[12] மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இனப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள்.
மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநிலப் பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்.
பூமிபுத்திராக்கள்
சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்[12]. மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும்.
மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும்; இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர்[12]. இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் [87]. இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் [88]
மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற முடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை [89]. கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது.
Remove ads
சமயம்

மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் [90] இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 63.5% பேர் இசுலாம் சமயத்தையும் 18.7% பேர் புத்த சமயத்தையும் 9.1% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.1% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் [91] 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் [91].
சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் [90]. 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் [91].
முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் [92].
Remove ads
மொழி
மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969-இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது [93] . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது.
பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது [94][95]. பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் [96][97].
மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன [98] இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன.[99] கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் [100]. மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் மலேசியத் தமிழர் என்று அறியப் படுகின்றனர்.
பண்பாடு


மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக் காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.[101]
1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது.[102] மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது.[103] இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.[102]
மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன.[104] இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.[105]
மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும்.
Remove ads
விளையாட்டு
மலேசியாவில் பரவலாக விளையாடப் படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, சுவர்ப்பந்து, தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன .[106] இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948-ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.[107]
மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997-இல் பதிவு செய்யப்பட்டது.[108] பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சுவர்ப்பந்து விளையாட்டில் முதல் போட்டி 1939-இல் நடத்தப்பட்டது. சுவர்ப்பந்து பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது.[109] மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது.[110]
ஆகத்து 2010-இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது.[111] கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன.[112] மலேசியாவில் பார்முலா 1 தடம்– சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. 45 கிலோமீட்டர்கள் (27.96 mi) தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது.[113]

1953-இல் உருவான மலாயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954-இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964-இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. தொடங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.
1972-ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை (57) அனுப்பி உள்ளது.[114] மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.[115] பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது.
1998-இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன.[116] தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் தோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன.
Remove ads
ஊடகம்
மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன.[117] இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.[118] நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர்.[119]
மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப் படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர்.[120] மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.[119]
ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது.[121] அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது.[118] 2007-இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன;[122]
இதனை எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது.[123] சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும்.[119] அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது.[124]
உள்கட்டமைப்பு

மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.[125] 4.7 மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.[126][127]
மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.[106] 95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது. குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன.
விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன.[128] தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.[126]
மலேசியாவில் 98,721 கிலோமீட்டர்கள் (61,342 mi) தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் 1,821 கிலோமீட்டர்கள் (1,132 mi) தொலைவு விரைவுச் சாலைகளாகும்.[12] நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 கிலோமீட்டர்கள் (497 mi) தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன.[129]
மலேசியாவில் 38 நன்கு பேணப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன.
தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; 1,849 கிலோமீட்டர்கள் (1,149 mi) தொலைவிற்கு சேவை அளிக்கின்றன.[12] கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.[130] ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[125]
வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது.[131] நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது.[132] இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது.[131] 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[132] எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது.[133] மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.[134]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads