சொற்கள் அல்லது சைகைகள் போன்றவற்றை பயன்படுத்தி தொடர்புகொள்வதற்கான திறன், From Wikipedia, the free encyclopedia
மொழி (language) என்பது ஓர் முறையான அமைப்பைக் கொண்ட இணைப்புக் கருவியாகும். இது இலக்கணம், இலக்கியம் மற்றும் சொல்வளங்களையும் உள்ளடக்கியது. இது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்கியது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்து பண்டைய கிரேக்கத்தில் சாக்ரடீஸ் , பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக ரூசோ போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.
மனித மொழி உற்பத்தித்திறன், இடப்பெயர்ச்சி ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று கொண்டு, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.[1]
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது.[2]
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். ஆடலாலோ பாடலாலோ உணர்த்தப்படும் மொழி பேச்சொலி (Phonology) வகைக்குள் அடங்குகின்றது.
மொழியியல் ஆய்வின் மூலமாக , '"மொழி'" என்பது இரண்டு அடிப்படை அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது:
எ.கா: பிரஞ்சு மொழி
மற்றுமொரு விளக்கமானது மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது. இது வாய்மொழி அல்லது குறியீட்டு ஒலிப்புகளை பரிமாறிக்கொள்ள மனிதர்களுக்கு உதவுகிறது. இந்த வரையறை, மொழியின் சமூக செயல்பாடுகள் மற்றும் மனிதர்கள் தங்களை வெளிப்படுத்தவும், பொருட்களை கையாளவும் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. இலக்கணத்தின் செயல்பாட்டுக் கோட்பாடுகள் இலக்கண அமைப்புகளையும் அவற்றின் தொடர்புகளையும் புரிந்து கொண்டு அதனை இணக்கத்துடன் பயன்படுத்த உதவுகின்றன.[3]
மொழி எப்போது உருவானது என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைக்கின்றது.இருந்தாலும் உலகில் தோன்றிய முதல் மொழி என்பதற்கு பல ஆதாரங்களை கிரேக்க மொழி கொண்டுள்ளது. அவரவர்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து இவை மாறுபடுகின்றன. எனவே உறுதியான முடிவு தெரியவில்லை. மேலும் பலருடைய ஆராய்ச்சி முடிவுகளும் மொழியின் வடிவத்தை இறுதி செய்ய முடியவில்லை.அது குழப்பமாதாகவே உள்ளது. மேலும் மொழி என்பது தங்களுடைய முன்னோர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வகையான கோட்பாடுகள் தொடர்ச்சி சார்ந்த கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தவகையான கோட்பாடுகள் மொழி என்பது மனிதர்களுக்கு மட்டுமான ஒன்று என கூறுகிறது. மேலும் உயிருள்ளபிற விலங்குகளுக்கு இத்தகைய ஒன்று இல்லை என்பதாக கூறுகின்றனர்.[4]
மொழி பற்றிய முறையான ஆராய்ச்சி என்பது இந்தியாவின் பாணினி என்பதிலிருந்து தொடங்கியது. மேலும் அவற்றில் கி.மு 5-இல் 3,959 சமசுகிருத இலக்கண வரையறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கி.மு 1900 இலேயே சுமேரிய எழுத்தாளர்கள் சுமேரிய மற்றும் அக்கேடியன் எழுத்துகளுக்கு இடையேயான இலக்கண வேறுபாடுகளைக் கூறியுள்ளனர்.
உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ - ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை. தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன.
பேச்சு என்பது எல்லா கலாச்சாரங்களிலும் மொழிக்கான இயல்புநிலையிலேயே இருந்து வந்துள்ளது.பேச்சு என்பது உதடு, நாக்கு மற்றும் குரல்வளைகளின் பிற கூறுகளை கட்டுப்படுத்தும் திறன்களைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய உடல்கூறுகள் இயல்பாகவே ஒலி ஒலிக்கும் திறன்களை கொண்டுள்ளது.[5] மனித மொழிக்கான மரபணு தளங்களின் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.மேலும் FOXP2 என்ற மரபணு ஒலியை எழுப்ப பயன்படுவதாக கூறப்படுகிறது.[6]
மூளை அனைத்து மொழியியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படுகிறது.அது மொழியியல் அறிவாற்றல் மற்றும் பேச்சுக்களின் இயக்கவியல் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. மொழியின் அடிப்படை நரம்பியல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகக் குறைவாக உள்ளது, இருப்பினும் நவீன பட நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதில் கணிசமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம். மொழியின் நரம்பியல் அம்சங்களைப் படிப்பதனை நரம்பியல் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.[7]
நரம்பியல் விஞ்ஞானம் என்பதில் எவ்வாறு மூளையானது பேச்சு மற்றும் மொழியில் இடையூறு அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த நரம்பியல் அறிவியலாளர்கள், மூளையில் உள்ள இரண்டு பகுதிகள் மொழி செயலாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். முதன்மையான பகுதி வர்னிக்கேவின் (Wernicke's area) பகுதியாகும். இதில் மொழி புரிந்துகொள்ளல் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பேசுகையில் அதன் ஒலிப்பு முறை, வாக்கியத்தை மேற்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி ப்ரோகாவின் (Broca's area) பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏற்படும் காயங்களால் தாங்கள் நினைப்பதை கூற இயலாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.[8]
மொழியானது அடையாளத் தொடர்பாடல் முறையாக விவரிக்கப்படும் போது, அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை அறிகுறிகள், அர்த்தங்கள் மற்றும் அர்த்தங்களையும் அறிகுறிகளையும் இணைக்கும் குறியீடுகள். இந்த அறிகுறிகள் என்பவை ஒலிகள், சைகைகள், எழுத்துக்கள், அடையாளங்கள் என்பவற்றின் தொகுப்பாக இருக்கின்றன. அவை மொழியைப் பயன்படுத்தும் முறையில் தங்கியிருக்கும். அதாவது மொழியானது எழுதுவதற்கு, பேசுவதற்கு, குறியிடுவதற்கு என வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தப்படும்போது, வெவ்வேறு அறிகுறிகளின் தொகுப்பாக இருப்பதுடன் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை உருவாக்கும். ஒரு தொடர்பாடலில், அறிகுறிகளானவை வழங்குபவரிடமிருந்து ஒரு குறியீடாகக் கடத்தப்படும்போது, அதனைப் பெறுபவர் அந்தக் குறியீட்டைச் சீர்படுத்தி அர்த்தத்தை புரிந்து கொள்வார்.[9]
மொழி | தாய்மொழி பேசுபவர்கள் (millions)[10] |
---|---|
மாண்டரின் | 848 |
எசுப்பானியம் | 329 [11] |
ஆங்கிலம் | 328 |
போர்த்துகீசியம் | 250 |
அரேபியம் | 221 |
இந்தி | 182 |
வங்காளம் | 181 |
உருசிய மொழி | 144 |
சப்பானிய மொழி | 122 |
தமிழ் | 75 |
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட விவாத நெறிமுறையாகவே அங்கு நிலவிய மொழிகள் விளங்கின. மேலும் அவர்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அவைகள் விளங்கின. மொழிகள் உச்சரிப்பில், சொல்லகராதி மற்றும் இலக்கணத்தில் மட்டும் வேறுபட்டு இருப்பன அல்ல. மேலும் அவைகள் அந்தந்த இடங்களின் கலாச்சாரத்தின் மூலமாகவும் வித்தியாசப்படுகின்றன. மேலும் மனிதர்கள் தங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் தங்களுடைய மொழியினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அது எவ்வாறு மற்றவர்களின் கல்லாச்சாரத்திலிருந்து வேறுபட்டுள்ளது என்பதனை எடுத்துக்கூறுகிறது. ஒரே கலாச்சாரத்தினைப் பின்பற்றுபவர்கள் கூட மொழியினை பயன்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றனர். அவர்கள் அதனை உச்சரிப்பதிலும், சைகை காண்பிப்பதிலும் வேறுபடுகின்றனர்.
மொழியியலாளர்கள் ஒரு மொழியினை பல வழிகளில் பயன்படுத்தும் முறையினை வகைப்பாடு என்று கூறுகிறார்கள். இதனை வட்டார மொழி என்றும் கூறப்படுகிறது. மொழியியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட மொழிகளை அது பயன்படுத்தப்படும் முறைகளைப் பொறுத்து அதற்கு தொடர்புடைய கலாச்சாரப் பின்னணி கொண்டவர்களே அதனை புரிந்துகொள்ள இயலும் எனவும் கூறுகின்றனர்.
ஏனெனில் மொழிக்கான கட்டமைப்புகள் அதனைப் பயன்படுத்தும் மக்களின் மூலமாகவே சென்றடைகின்றன. மேலும் ஒருவர் பயன்படுத்தும் அந்த குறியீடுகளும் அவ்வாறே பிற மக்களை சென்று சேர்கின்றன. மேலும் அவர்களுக்கு அது இரண்டாவது மொழியாக இருப்பின் அதன் உச்சரிப்பில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவையெல்லாம் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒருவருடைய பிறந்த இடம், அவர்களின் பொருளாதார பின்னணி ஆகியவையும் இதில் பங்காற்றுகின்றன.இவைகள் அனத்தும் மொழியியலின் வகைகளாக அல்லாது இருந்த போதிலும் பங்கு வகிக்கின்றன.
வட இந்திய மொழிகள் பல இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இன்று உள்ள பெரும்பாலான வட மொழிகள் சமசுகிருதத்தில் இருந்து தோன்றியனவே.
இந்தியாவில் உள்ள முக்கிய மொழி குடும்பங்களின் ஒன்று திராவிட மொழிக் குடும்பம், இதில் மூத்த மொழி தமிழ்.மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவையாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.