இரட்டைமணி மாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரட்டைமணி மாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. மணிகளைக் கோர்ப்பது போல் வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளால் அல்லது வெண்பா, விருத்தப்பா என்னும் பாவகைகளால் அமையும் இந்த இலக்கியவகை அந்தாதியாகவும் அமைந்திருக்கும்[1]. மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டிருப்பது இதன் இலக்கணம்.

Remove ads

வரலாறு

தமிழ் மொழியில் முதல் இரட்டைமணி மாலை காரைக்கால் அம்மையார் பாடியது. அடுத்துத் தோன்றியவை கபிலதேவ நாயனார் பாடிய இரண்டு நூல்கள். இவற்றிற்குப் பின்னர் இந்த இரட்டைமணிமாலை தோன்றியது. [2]

எடுத்துக்காட்டு

கீழே தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலையில் இருந்து முதல் மூன்று பாடல்கள் எடுத்துக் காட்டுக்காகத் தரப்பட்டுள்ளன[3]. முதல் பாடல் நேரிசை வெண்பாவில் அமைய இரண்டாம் பாடல் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளது. மூன்றாம் பாடல் மீண்டும் நேரிசை வெண்பாவில் உள்ளது. இவ்வாறு இருபது பாடல்களும் மாறிமாறி அமையும்.

முதற்பாடல் "மான்" என்ற சொல்லில் முடிய இரண்டாம் பாடல் "மாகம்" என்று தொடங்குகிறது. இரண்டாம் பாடல் அங்கவர்க்கே என முடிய அடுத்த பாடல் அங்கம் எனத் தொடங்கிகிறது. இவ்வாறே இருபது பாடல்களும் அந்தாதியாக அமைகின்றன.


நேரிசை வெண்பா

சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்
கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்
ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய
வைய மொருங்கீன்ற மான்.


கட்டளைக் கலித்துறை

மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்
பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே
ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த
ஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே.


நேரிசை வெண்பா

அங்கம் பகுந்தளித்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்
சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனை
வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு
உந்திப்பா ரேழு மொருங்கு.
Remove ads

இரட்டைமணி மாலைகள் சில

  • பழனி இரட்டைமணிமாலை
  • களக்காட்டுச் சத்யவாசகர் இரட்டைமணிமாலை
  • திரு இரட்டைமணிமாலை
  • தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
  • சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
  • சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை
  • திருநாரையூர்ப் பிள்ளையார் இரட்டைமணிமாலை
  • கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை
  • சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
  • கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணி மாலை
  • நாகைத்திருவிரட்டை மணிமாலை
  • வண்ணைத் திருமகள் இரட்டைமணிமாலை
  • விரகந்தி விநாயகர் இரட்டைமணிமாலை
  • பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை

இருபது பாடல்களால் வரும். கட்டளைக் கலித்துறை, வெண்பா எனும் இருபாவகைகளும் தொடர்ந்து அந்தாதித்தொடையில் வருவது. இரட்டைக்கிளவி, இரட்டைத்தொடை என்னும் இலக்கணயாப்புக் கலைச்சொற்களோடு ஒப்புமை உடையது.

இதன் சொல்லோ,சொற்பகுதியோ இரட்டிப்பது இல்லை. இருவகைப்பாக்கள் இணைந்து வரும் தன்மையே இரட்டைமணி மாலையில் காணப்படுகிறது. பக்தி தொடர்பாகப் பெரும்பாலும் இது காணப்படுவதால் =திரு+ என்னும் அடைமொழி சேர்த்துத் திருவிரட்டைமணிமாலை எனப்படுகிறது.

காரைக்காலம்மையார் கண்டது

இரட்டைமணி மாலை என்னும் இலக்கிய வகையில் முதல் நூலைப்பாடியவர் காரைக்காலம்மையார் ஆவார். இவர் கி.பி 4 ஆல்லது 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு இரட்டைமணி மாலை பாடியதாகச் சான்று இல்லை.

அம்மையாரின் திருவிரட்டைமணிமாலை

முதலில் கட்டளைக் கலித்துறையும் அடுத்து நேரிசை வெண்பாவும் எனத் தொடர்ந்து வகைக்குப் பத்து பாடல்களாக மொத்தம் இருபது பாக்களைக் கொண்டு அந்தாதித்தொடையால் ஆக்கப்பட்டுள்ளது.

பவளமும் முத்தும்போல

இரட்டைமணிமாலையென்பது பவளமும் முத்துமாகிய இருவேறு மணிகள் மிடைந்தமாலை போல வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அந்தாதியாக அமையவும், உறும் முதலும் மண்டலிக்கவும் இருபது செய்யுட்களாற் பாடப்பெறும் பிரபந்தம்+ - குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு–பக்கம் 125 எனத் தமிழ்த்தாத்தா உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்.

வைரமும் மரகதமும்போல

வெண்பா என்பது வைரமணியை ஒத்தது என்றும் கட்டளைக் கலித்துறை மரகதமணியை ஒத்தது என்றும் கொண்டு, வைரமும் மரகதமும் விரவத்தொடுத்தமாலை போல வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் விரவத்தொடுக்கப் பட்டதாகலின், இந்த இலக்கிய வகை இரட்டைமணிமாலை என்னும் பெயர் பெற்று வழங்குகிறது என்று முனைவர் ந. வீ. செயராமன் குறிப்பிடுகின்றார். (சிற்றிலக்கியத் திறனாய்வு பக். 116) வெவ்வேறு உவமைகளை வெவ்வேறு ஆசிரியர்கள் வெண்பாவுக்கும் கட்டளைக் கலித்துறைக்கும் வழங்கியுள்ளார்கள், வடமொழி கலந்த தமிழை மணிப்பவள நடை என்றதைப்போல.

Remove ads

இலக்கண ஆய்வு

தொல்காப்பியத்தில் தோற்றம்

பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த சிற்றிலக்கியங்கட்கெல்லாம் விதை தொல்காப்பியத்தில் காணலாம். அவர்கூறும் எண்வகை வனப்புக்களுள் ஓன்று விருந்து என்பது "விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" (தொல் .செய்.நூ 231) எனும் கூற்றால் அறியலாம். அதற்கு உரையாசியர்களான இளம்பூரணர், பேராசிரியர் போன்றோர் உரைத்துள்ள விளக்கத்தால் உணரலாம்.

இலக்கியம் கண்டு இலக்கணம் வகுத்த தொல்காப்பியமே எதிர்கால இலக்கியம் உருவாவதற்கும் விளை நிலமாய் இருக்கிறது. விளைந்திட்ட பயிர்வகைகட்கு இலக்கணம் கூறி வரையறை செய்வன பிற்காலப் பாட்டியல் நூல்கள். வரையறைக்கும் மேலும் காலத்தேவைக்கும் கற்பனைக்கு மேற்ப, இலக்கிய வகைகள் புதிதாக எழுகின்றன.

பாட்டியல்நூல்கள்

சிற்றிலக்கியங்கள் தொண்ணுற்றாறு எனக் கூறப்பட்டாலும், உண்மையில் அவை முந்நூற்று நாற்பத்தைந்து. பெயர் வேறுபாடு கருதி நீக்கினும், இந்த இலக்கிய வகைகள் முந்நூற்று முப்பத்தொன்று. இவை பிற்சேர்க்கையில் அகரவரிசையில் குறிப்பிட்டுள்ளன. என ”சிற்றிலக்கியத் திறனாய்வு” நூலாசிரியர் குறிக்கின்றார் (பக்கம் 45; 163)

இரட்டைமணி மாலையின் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல்களாவன: பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல், நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், ஈலக்கண விளக்கப்பாட்டியல், பிரபந்தமரபியல், பிரபந்ததீபம், பிரபந்ததீபிகை, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம்.

Remove ads

குறிப்புகள்

இரட்டைமணி மாலைகள்

முதல் இரட்டைமணி மாலை காரைக்காலம்மையார் செய்தது. சுமார் இருபத்தைந்து இரட்டை மணிமாலை நூல்கள் என்றிருப்பனவாக அறிய வருகின்றன. (பிரபந்ததீபம் நூ.8 இன் உரை.) கிடைத்த காரைக்காலம்மையார் திருவிரட்டைமணிமாலை கட்டளைக்கலித்துறை வெண்பாக்கள் என்ற முறையைக் கொண்டுள்ளது. மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை (கபில தேவர்), சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை (கபில தேவர்) திருநாறையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலை (நம்பியாண்டார்நம்பி) மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை (குமரகுருபரர் ஈயற்றியன) –வெண்பாவை முதலாகவும் கட்டளைக் கலித்துறையை அடுத்தும் கொண்டுள்ளன. சுவாமி நாதம் இரட்டைமணி மாலையைக் கூறாமல் இரட்டைமணிக்கோவையைப்பற்றியே கூறுகிறது. வெண்பாப்பாட்டியலில் ஆசிரிய விருத்தமும் வெண்பாவும் சேர்ந்த இருபது பாக்களெனக் கூறப்பட்டுள்ளது.

Remove ads

துணைநூற்பட்டியல்

1.தொல்காப்பியம்–கழகப்பதிப்பு 1998. 2.திருவிரட்டைமணிமாலை . காசிமடத்துப்பதிப்பு.1963 3.பெரியபுராணம்– காசிமடத்துப்பதிப்பு. 1963 4.குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு. காசிமடத்துப்பதிப்பு. 01.06.1961 5.மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை 11 இம் திருமுறை. காசிமடத்துப்பதிப்பு. 6.சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை. 11இம் திருமுறை மேற்படி பதிப்பகம் 7.திருநாறையூர். விநாயகர் திருவிரட்டைமணிமாலை. 11இம் திருமுறை மேற்படி பதிப்பகம். 8.மதுரைமீனாட்சியம்மை விநாயகர் திருவிரட்டைமணிமாலை - குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு–காசிமடத்துப்பதிப்பு. 01.06.1961. 9.தில்லைச் சிவகாமியம்மைத் திருவிரட்டைமணிமாலைமேற்படி திரட்டு. மேற்படி பதிப்பு . 01.06.1961. 10.பன்னிரு பாட்டியல். கழகப்பதிப்பு - 1970. 11.வெண்பாப்பாட்டியல்கழகப்பதிப்பு - 1969. 12.நவநீதப்பாட்டியல். ஊ.வே.சா.பதிப்பு . 1961 13.சிதம்பரப்பாட்டியல். தஞ்சைசரசுவதிமகால்பதிப்பு. 2002. 14.ஈலக்கணவிளக்கப்பாட்டியல் தஞ்சைசரசுவதிமகால்பதிப்பு - 1974. 15.பிரபந்தமரபியல் பிற்சேர்க்கை– 2 தஞ்சைசரசுவதிமகால்பதிப்பு. 16.பிரபந்தத் தீபம் –தமிழ்ப்பதிப்பு - சென்னை – 96. 14.06.80. 17.பிரபந்தத் தீபிபை –தஞ்சைசரசுவதிமகால்பதிப்பு - பிற்சேர்க்கை 3 18.தொன்னூல்–தமிழ்வழிகளம்–சென்னை – 1978. 19.சாமிநாதம்– ஆ.ப. கழகம்– 1975. 20.சிற்றிலக்கியத் திறனாய்வு–ஈலக்கியப்பதிப்பகம், சென்னை – 18. 1980.

Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads