இராஜ்நாராயண பாசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜ்நாராயண பாசு (Rajnarayan Basu) (1826-1899) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் வங்காள மறுமலர்ச்சியின் அறிவுஜீவி ஆவார். இவர் வங்காளத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள போரலில் பிறந்தார். அந்தக் காலத்தில் வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள பிரதான நிறுவனங்களான ஹரே பள்ளியிலும் மற்றும் இந்துக் கல்லூரியிலும் படித்தார். மனதளவில் ஒரு கடவுள் கொள்கையைக் கொண்ட, இராஜ்நாராயண பாசு தனது இருபது வயதில் பிரம்ம சமாஜத்திற்கு மாறினார். [1] ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு ரிசி அல்லது முனிவர் என்ற கெளரவ பட்டம் வழங்கப்பட்டது. ஒரு எழுத்தாளராக, இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காள மொழியில் அறியப்பட்ட சிறந்த உரைநடை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். ஒரு பிரம்ம இதழான "தத்வபோதினி பத்திரிக்கை" என்ற இதழில் அடிக்கடி எழுதினார். [2] இவர் பிரம்மத்தை பாதுகாத்ததன் காரணமாக, இவருக்கு "இந்திய தேசியவாதத்தின் தாத்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது [3] [4]
Remove ads
பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை
இராஜ்நாராயண பாசு 1826 செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள போரல் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நந்த கிசோர் பாசு இராசாராம் மோகன் ராயின் சீடராக இருந்தார். பின்னர் அவரது செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். குழந்தை பருவத்திலிருந்தே ஒரு பிரகாசமான மாணவரான, இராஜ்நாராயணன் கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டு ஹரே பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். இவர் தனது 14 வயது வரை அங்கு படித்தார். மேலும் இவரது புத்திசாலித்தனத்தினால் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார்.
Remove ads
திருமணம்
இவர் 1843இல் பிரசன்னமயி மித்ரா என்பவரை மணந்தார். பின்னர் இவரது மரணத்திற்குப் பிறகு அபயச்சரன் தத்தா என்பவரின் மகள் நிசுதாரினி தத்தா என்பவரை 1847 இல் மணந்தார்.
தொழில்
இராஜ்நாராயண பாசு அக்காலத்தின் முக்கிய கவிஞரான மைக்கேல் மதுசூதன் தத்தின் போட்டியாளராகவும், வங்காள மொழியில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார். மேற்கத்திய கூறுகளை வங்காள இலக்கியத்தில் அறிமுகப்படுத்துவதற்கு இருவரும் பொறுப்பாளிகளாக இருந்தனர். [1] ஆசியாவின் முதல் நோபல் பரிசு வென்ற]] இரவீந்திரநாத் தாகூருக்கு இவர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். மேலும் தேவேந்திரநாத் தாகூரின் வேண்டுகோள் மற்றும் ஒத்துழைப்பின் பேரில் உபநிடதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மூன்று ஆண்டுகள் செலவிட்டார். இளம் வங்காளக்குழுவின் உறுப்பினராக, இராஜ்நாராயண பாசு அடிமட்ட மட்டத்தில் "தேசத்தைக் கட்டியெழுப்புவதில்" நம்பிக்கை கொண்டிருந்தார். தனது பங்கைச் செய்ய, ஆங்கிலத் துறையின் இரண்டாவது ஆசிரியராக ஈஸ்வர வித்யாசாகரின் சமஸ்கிருதக் கல்லூரியில் கற்பித்தபின், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கல்வி கற்பிற்பதற்காக மிட்னாபூர் சென்றார். இவர் மிட்னாபூர் மாவட்ட பள்ளியின் தலைமை ஆசிரியராக (பின்னர் மிட்னாபூர் கல்லூரிப் பள்ளி என்று அழைக்கப்பட்டது ) பணியாற்றினார். இது மிட்னாபூர் கல்லூரியின் முன்னோடியாகவும் இருந்தது.
மிட்னாபூரில் பணி வாழ்க்கை
1851 பிப்ரவரி 21 ஆம் தேதி இவர் பள்ளியில் சேர்ந்தார். அந்த காலத்தில் பள்ளி அதன் பெருமையை இழந்து ஒரு மோசமான நிலையில் இருந்தது. பள்ளியை மீண்டும் நல்ல முறையில் கொண்டுவருவதே இராஜ்நாராயணனின் முதல் குறிக்கோளாக இருந்தது. இவர் சிறந்த ஆசிரியராகவும் கல்வியாளருமாகவும் இருந்த இவர் சில அற்புதமான நடவடிக்கைகளை எடுத்தனர்:
- இவர் உடல் ரீதியான தண்டனையை ஒழித்ததோடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நட்புச் சூழ்நிலையை அறிமுகப்படுத்தினார்.
- "மனப்பாடத்தில் ஈடுபடுவது மற்றும் காகிதத்தில் பிரதி எடுப்பது" என்ற நடைமுறையின் மீது இவருக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரின் தொடர்பு மூலம் கற்பித்தல் விதியை இவர் எப்போதும் பின்பற்றினார். நகைச்சுவையுடன் கூடிய இவரது கற்பித்தல் பணி, வகுப்பில் மிகவும் மந்தமான மாணவர்களின் இதயத்தை கூட மெல்ல ஈர்த்தன. இவர் கலந்துரையாடல் முறைக்கு முக்கியத்துவம் அளித்தார். இதனால் மாணவரின் அடிப்படைகள் வலுவாகின்றன.
- மாணவர்களுக்கு உடல் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிற்கும் இடம் தேவை என்பதை இவர் புரிந்துகொண்டார். இதனால் மன மற்றும் உடல் சக்தி சரியாக வெளிப்படும் என்பதால் இவர் பள்ளி வளாகத்தில் ஒரு டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தையும், ஒரு உடற்பயிற்சிக் கூட்டத்தையும் அமைத்தார்.
- "தனித்துவமாக உருவாக்கும் கல்வி"யில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று இவர் விரும்பினார், எனவே மாணவர்களின் தார்மீக வளர்ச்சியைக் கவனிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் அவர்கள் உண்மையான அர்த்தமுள்ள மனிதனாக இருக்க முடியும்.
- சாய்வமைப்பு இல்லாமல் இருக்கும் இருக்ககைகளில் உட்கார்ந்திருக்கும் மாணவர்களின் கவனம் படிக்கும் போது குறைகிறது என்பதால், இவர் முதல் முறையாக பின்பக்க-ஆதரவுடன் இருக்கும் இருக்கைகளில் மாணவர்களை அமர வைத்தார்.
- இளம் வங்காளக் குழுவின் தீவிர தலைவராக இருந்த இவர், ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோவின் 'கல்விச் சங்க'த்தால் செலுத்தப்பட்டார். எனவே பள்ளி மட்டத்தில் விவாத சங்கங்கள் மற்றும் பரஸ்பர மேம்பாட்டுக் கழகத்தையும் அறிமுகப்படுத்தினார்.
பெண் கல்விக்காக மிட்னாபூரில் முதல் பெண்கள் பள்ளி மற்றும் கல்வியறிவற்றவர்களுக்கு கல்வி கற்பதற்கான ஒரு இரவு பள்ளியையும் நிறுவினார். மேற்கு வங்காளத்தின் மிகப் பழமையான பொது நூலகமாக விளங்கும் ரிசி ராஜ்நாராயண பாசு நினைவு நூலகம் என்று இப்போதும் பயன்பாட்டில் உள்ள ஒரு பொது நூலகத்தை நிறுவினார். வங்காள இலக்கியச் சங்கக் கூட்டங்களில் வங்காள மொழியைப் பயன்படுத்த பரிந்துரைத்த முதல் நபர் இவர்தான் . [5] வங்காள மொழி இலக்கியங்களை மேம்படுத்துவதற்காக சங்கம் நிறுவப்பட்டது. ஆனால் பாசுவின் வேண்டுகோள் வரை ஆங்கிலத்தில் கூட்டங்களை நடத்தியது முரண்பாடாக இருந்தது.
ஒரு அறிஞராக, இவர் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். மேலும், இந்தியர்களிடையே தேசியவாத உணர்வுகளை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட நவகோபால் மித்ராவின் இந்து மேளாவை திறந்து வைத்தார். இவர் இந்திய சங்கத்தின் உறுப்பினராகவும், சஞ்சிவனி சபை என்ற அரசியல் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்திய இசையைக் கற்க ஊக்குவிக்கும் பள்ளிகள் எதுவும் இல்லை என்று அறிந்த இவர், [6] மிட்னாபூரில் இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். 1868 ஆம் ஆண்டில், இவர் ஓய்வு பெற்றபின் தியோகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை கழித்தார். இவரது பேரனும், புகழ்பெற்ற தத்துவஞானியும், சுதந்திரப் போராளியுமான அரவிந்தர், இராஜ்நாராயணனுக்கு தனது அஞ்சலியை ஒரு அழகான கவிதையில் பொறித்திருக்கிறார்.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads