ந. சங்கரய்யா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. சங்கரய்யா (N.Sankaraiah, 15 சூலை 1921 – 15 நவம்பர் 2023) நூற்றாண்டு கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.[2]
Remove ads
வாழ்க்கை வரலாறு
கோவில்பட்டியை சேர்ந்த நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1921 சூலை 15 அன்று பிறந்தார்.
அவரது அண்ணன் மகன் ஆர். செல்வராஜ், தமிழகத் திரைப்படத்துறையில் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.[3]
கல்லூரி வாழ்க்கை
இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
மதுரை மாணவர் சங்கம்
1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
பொதுவுடைமை இயக்கத்தில்
1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.[4]
1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.[5] இவர் 1977[6] மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். 1986ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியகுழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியகுழுவில் இருந்து வருகிறார். 1995இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.[7]
Remove ads
தகைசால் தமிழர் விருது
சென்னையில் 15 ஆகத்து 2021 அன்று நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது, முதல் முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.[8]
இறப்பு
என். சங்கரய்யா 2023 நவம்பர் 15 இல் சென்னை, அப்பலோ மருத்துவமனையில் தனது 102-ஆவது அகவையில் காலமானார்.[9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads