கரகோரம்
மங்கோலியப் பேரரசின் 13ஆம் நூற்றாண்டுத் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரகோரம் (இலக்கிய நய மொங்கோலியம்: ᠬᠠᠷᠠᠬᠣᠷᠣᠮ கர கோரும், கால்கா மொங்கோலியம்: Хархорум கர்கோரும்) என்பது ஒரு சிதிலமடைந்த நகரம் ஆகும். இது கி.பி. 1235 முதல் கி.பி. 1260 வரை மங்கோலியப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. மேலும் கி.பி. 14-15 நூற்றாண்டுகளில் வடக்கு யுவான் அரசமரபின் தலைநகரமாகவும் இருந்தது. மங்கோலியாவின் ஒவர்கான்காய் மாகாணத்தின் வடமேற்கு மூலையில் இதன் இடிபாடுகள் உள்ளன. இன்றைய நகரமான கர்கோரின் இதன் அருகில் அமைந்துள்ளது. எர்தின் சூ மடாலயமும் இதன் அருகில் தான் அமைந்துள்ளது. இவை அனைத்தும் உலக பாரம்பரியக் களமான ஓர்கோன் பள்ளத்தாக்கு கலாச்சார நிலப்பரப்பின் மேல்பகுதியின் பகுதியாக உள்ளன.






Remove ads
வரலாறு
அடித்தளம்
ஓர்கோன் பள்ளத்தாக்கு சியோங்னு, கோக்துர்க் மற்றும் உய்குர் பேரரசுகளின் மையமாக இருந்தது. கோக்துருக்கியர்களின் புகழ்பெற்ற தலைநகரமான ஒதுகன் இதன் அருகில் இருந்த கான்காய் மலைகளில் அமைந்திருந்தது. உய்குர் தலைநகரமான கரபல்கசுன் (ஓர்டு-பாலிக்), பின்னாளில் கரகோரம் எழுப்பப்பட்ட இடத்தில் (ஒர்கோன் நதி கீழ்நோக்கி செல்லும் வழியில் கரகோரத்திலிருந்து 27 கி.மீ. வடமேற்கில்) அமைந்திருந்தது. இப்பகுதி அநேகமாக மங்கோலியாவின் பழமையான விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும்.[1]
கி.பி. 1218-19ல், செங்கிஸ் கான் குவாரசமியப் பேரரசுக்கு எதிரான படையெடுப்பிற்குத் தனது துருப்புக்களை கரகோரம் என்றழைக்கப்பட்ட இடத்தில் அணிவகுத்தார்.[2] ஆனால் ஒரு நகரத்திற்கான உண்மையான அடித்தளம் வழக்கமாக கி.பி. 1220ல் தான் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. கி.பி. 1235 வரை, கரகோரம், கூடாரங்களுடன், சிறுப்பட்டணத்தை விட சற்றே பெரியதாக இருந்ததாகத் தெரிகிறது; அப்போதுதான், சின் பேரரசின் தோல்விக்குப் பின்னர், செங்கிஸ் கானின் வாரிசான ஒக்தாயி கான் இந்த இடத்தைச் சுற்றிலும் சுவர்களை எழுப்பி ஒரு நிலையான அரண்மனையைக் கட்டினார்.[3]
சின் வம்சத்தைத் தோற்கடித்த பிறகு அடுத்த வருடத்தில், கி.பி. 1235ல் ஒக்தாயி கான் துமேன் அம்கலன் ஓர்ட் (அளவற்ற அமைதியுடைய அரண்மனை, சீன மொழியில் வானான்கோங்) ஐ உருவாக்கக் கட்டளை இட்டார். இது ஒரு வருடத்தில் கட்டப்பட்டது. யுவான்ஷியில் (元史) இது டைசோங்கிற்கான (太宗) (ஒக்தாயி கான்) பிரிவில் எழுதப்பட்டுள்ளது: "ஏழாம் ஆண்டில் (கி.பி. 1236), நீல செம்மறியாட்டின் ஆண்டில் வானான்கோங் (萬安宫) கெலினில் (和林,கரகோரம்) தாபிக்கப்பட்டது." செங்கிஸ் கானின் ஒன்பது மந்திரிகளில் ஒருவரான கிதான் எலு சுதசை (கி.பி. 1190–1244) துமேன் அம்கலன் ஓர்ட்டின் உச்சி உயர்த்தும் விழாவில் பின்வரும் கவிதையைக் கூறினார்: "உச்சியானது நன்றாகப் பொருந்துமாறும் கல் அடித்தளமும் நிறுவப்பட்டது, இணையாக வைக்கப்பட்டுள்ள கம்பீரமான அரண்மனை எழுப்பப்பட்டது, இறைவன் மற்றும் அதிகாரிகளின் மணிகள் மற்றும் பறைகள் இனிமையாக ஒலிக்கப்பட்டது, அத்தமிக்கும் சூரியன் போர்க் குதிரைகளை மலை உச்சிகளில் இருந்து தன்னை நோக்கி அழைக்கிறது". கவிதையின் மங்கோலியப் பதிப்பு பின்வருமாறு உள்ளது: "ட்சோக்ட்ஸ்லோன் டவிஹ் நுரூ சுலூன் டுல்கூர், செரெக்ட்சென் சோக்ஸோஹ் சுர்லெக் அஸ்ரீக் போஸ்கோவோய், எசன் டுஷ்மெடீன் ஹோன்ஹ் ஹெங்கெரெக் அயடைஹன் ஹங்கினன் டூர்ஸஹட், எசிஹ் நரன் ஊலீன் டோல்கோய்கூஸ் டய்னீ அக்டடீக் உக்ட்னம்".[4][5]
கரகோரம் அல்லது "கர்கோரின்" என்ற பெயரானது 'கருப்பு-இருபது' என இலக்கியரீதியாக மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் 'கோரின்' என்ற வார்த்தை 'குரேம்' என்ற வார்த்தையின் திசை திருப்பாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். குரேம் என்றால் மொங்கோலியத்தில் கோட்டை என்று பொருள். பிற மொழிபெயர்ப்புகள் இதிலிருந்து வேறுபடுகின்றன.[6]
செழுமை
ஒக்தாயி மற்றும் அவரது வாரிசுகளின் கீழ், கரகோரம் உலக அரசியலுக்கு முக்கிய இடமாக மாறியது. மோங்கே கான் அரண்மனையை விரிவாக்கினார். பெரிய தூப கோயில் பூர்த்தி செய்யப்பட்டது.[3] நகர மையத்தில் கரகோரத்தின் புகழ்பெற்ற வெள்ளி மரத்தையும் அவர்கள் நியமித்தனர். இதைச் செய்த சிற்பியானவர் பாரிசின் குயில்லவுமே பவுச்சியேர் ஆவார்.[7] வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களால் செதுக்கப்பட்ட ஒரு பெரிய மரம் முற்றத்தின் நடுவில் இருந்து எழுந்தது. அரண்மனை மீது விரிந்தது. மரத்தின் கிளைகள் கட்டிடத்தில் நீட்டிக்கப்பட்டது. வெள்ளிப் பழம் அதன் அங்கங்களில் இருந்து தொங்கியது. நான்கு தங்கப் பாம்புகள் அடிமரத்தைச் சுற்றி இழைக்கப்பட்டிருந்தன. மரத்தின் உச்சியில் ஒரு எக்காள தேவதை வைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் தானியங்கலாக பேரரசரின் மகிழ்ச்சிக்காகச் செயல்பட்டன. கான் தனது விருந்தினர்களுக்காகப் பானங்களை வரவழைக்க விரும்பும்போது, இயந்திர தேவதை தனது உதடுகளுக்கு எக்காளத்தைக் கொண்டு சென்று ஒலித்தது. இதன்பின், பாம்புகளின் வாய்கள் மதுபானம் நிறைந்த ஒரு நீரூற்றை வெளியேற்றத் தொடங்கும். இது மரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பெரிய வெள்ளிக் கிண்ணத்தில் பிடிக்கப்படும்.[8]
ரூபுரக்கின் வில்லியம்
பிளமிசு, பிரான்சிஸ்கன் மதப் போதகர் மற்றும் திருத்தந்தையின் மங்கோலியர்களுக்கான தூதுவரான ரூபுரக்கின் வில்லியம் கி.பி. 1254ல் கரகோரத்தை அடைந்தார். இவர், எப்பொழுதும் சுவாரசியமானதாக இல்லை என்றாலும், மிகவும் விரிவான, நகரைப் பற்றிய குறிப்புகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதில் இவர் கரகோரத்தைப் பாரிசுக்கு அருகிலுள்ள செயிண்ட்-தெனிசு கிராமத்துடன் எதிர்மறையாக ஒப்பிட்டுள்ளார். செயிண்ட்-தெனிசு பசிலிக்காவானது கானின் அரண்மனையைப் போல் 10 மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். மறுபுறம், மிகவும் பிரம்மாண்டமான மற்றும் மத சகிப்புத்தன்மையுள்ள இடமாக இந்த நகரத்தை விவரித்துள்ளார். மோங்கே கானின் அரண்மனையின் பகுதியாக விளங்கிய வெள்ளி மரமானது காரகோரத்தின் சின்னமாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.[9] இந்நகரத்தின் நான்கு திசைகளிலும் நான்கு வாயில்கள் இருந்ததாக விவரிக்கிறார். இரண்டு பகுதிகளில் நிலையான வீடுகள் இருந்தன. ஒன்று "சரசன்களுக்கு" (முஸ்லிம்கள்) மற்றொன்று "கதாய்" (சீனா) நாட்டவருக்கு ஆகும். பன்னிரண்டு பாகால் கோயில்கள் இரண்டு மசூதிகள், ஒரு நெசுதோரிய தேவாலயம் இருந்தன.[3]
பிற்காலங்கள்
கி.பி. 1260ல் குப்லாய் கான் மங்கோலியப் பேரரசின் சிம்மாசனத்திற்கு உரிமைகோரியபோது—அவரது இளைய சகோதரர் அரிக் போகேவும் உரிமைகோரினார்—குப்லாய் தனது தலைநகரத்தை சங்டுவுக்கு மாற்றினார். பின்னர் கன்பலிக்கிற்கு (டடு, தற்கால பெய்ஜிங்) மாற்றினார். கராகோரம், சீனாவில் கி.பி. 1271ல் தோற்றுவிக்கப்பட்ட யுவான் வம்சத்தின் ஒரு இரண்டாம் தர மாகாணத்தின் நிர்வாக மையமாக மாறியது. இன்னும் மோசமாக, அரிக் போகேவுடனான டொலுய் உள்நாட்டு போர் மற்றும் பின்னர் கைடுவுடனான யுத்தம் நகரத்தை கடினமாகத் தாக்கியது. கி.பி. 1260ல், குப்லாய் நகரின் தானிய விநியோகத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கினார். கி.பி. 1277ல் கைடு கரகோரத்தைப் பிடித்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே யுவான் துருப்புக்கள் மற்றும் பாரினின் பயன் ஆகியோரால் அகற்றப்பட்டார்.[10] கி.பி. 1298-99ல் இளவரசர் உலுஸ் புகா சந்தைகள் மற்றும் தானியக் களஞ்சியங்களைச் சூறையாடினார். இருப்பினும், கி.பி. 14ம் நூற்றாண்டின் முதல் பாதி, இரண்டாவது முறையாக செழிப்பை நிரூபித்தது: கி.பி. 1299ல் நகரமானது கிழக்கே விரிவாக்கம் செய்யப்பட்டது, கி.பி. 1311ல் மற்றும் மீண்டும் கி.பி. 1342 முதல் கி.பி. 1346 வரை தூப கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன.[3]
சரிவு

கி.பி. 1368ல் யுவான் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கரகோரம் கி.பி. 1370ம் ஆண்டில் பிலிக்டு கானின் வசிப்பிடமாக ஆனது. கி.பி. 1388ம் ஆண்டில், மிங் துருப்புக்கள் நகரை ஆக்கிரமித்தன. பின்னர் தலைநகரத்தை அழித்தன. சகங் சசன் எழுதிய எர்டெனீன் டோப்சி, கி.பி. 1415ல் நடைபெற்ற ஒரு குறுல்த்தாய் இதை மறுகட்டமைக்க முடிவு செய்ததாகக் கூறுகிறது. ஆனால் அத்தகைய துணிகரத்திற்கான தொல்பொருள் சான்றுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், படு-மோங்கே தயன் கான் இதனை மீண்டும் தலைநகராக மாற்றியபோது, கரகோரம் கி.பி. 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மீண்டும் வசிப்பிடமானது. பின்வந்த ஆண்டுகளில், நகரம் ஒயிரடுகள் மற்றும் சிங்கிசிடுகள் இடையே பல முறை கை மாற்றப்பட்டது. இதன் விளைவாக நிரந்தரமாக கைவிடப்பட்டது.[3]
Remove ads
அகழ்வாராய்ச்சிகள்


எர்தின் சூ மடாலயம் கரகோரத்தின் அருகில் அமைந்துள்ளது. பல்வேறு கட்டுமான பொருட்கள் சிதைவிலிருந்து எடுக்கப்பட்டு இந்த மடாலயத்தை கட்டப் பயன்படுத்தப்பட்டன.
கரகோரத்தின் உண்மையான இடம் எது என்று நீண்டகாலமாகத் தெளிவாகத் தெரியாமல் இருந்தது. இது, எர்தின் சூவில் அமைந்துள்ளதற்கான முதல் குறிப்புகள் கி.பி. 18ம் நூற்றாண்டிலேயே அறியப்பட்டுள்ளன. ஆனால் கி.பி. 20ம் நூற்றாண்டு வரை கரபல்கசுனின் (ஒர்டு-பாலிக்) இடிபாடுகள் எனப்பட்டவை உண்மையில் கரகோரத்தினுடையது தானா? என்ற ஒரு சர்ச்சை இருந்தது. கி.பி. 1889ல், நிகோலாய் யத்ரின்ட்சேவ் என்பவரால் இந்தத் தளம் முன்னாள் மங்கோலியத் தலைநகரமாக அடையாளம் காணப்பட்டது. இவர் ஒர்கோன் எழுத்துமுறையின் உதாரணங்களையும் அதே ஆராய்ச்சியின் போது கண்டுபிடித்தார். யத்ரின்ட்சேவின் முடிவுகளை வில்லெம் ரத்லோப் உறுதிப்படுத்தினார்.

கி. பி. 1933 - 34ல் திமித்ரி புகினிச்சின் கீழ் முதல் அகழ்வுகள் செய்யப்பட்டன. கி.பி. 1948-49ல் அவரது சோவியத்-மங்கோலிய அகழ்வாய்வுக்குப் பிறகு, செர்கீ கிசேல்யோவ் ஓகோடியின் அரண்மனையின் எஞ்சியுள்ளதைக் கண்டுபிடித்ததாக முடிவு செய்தார். எனினும், இந்த முடிவு சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 2000-04ல் செர்மன்-மங்கோலிய அகழ்வானது, இது ஓகோடியின் அரண்மனைக்குப் பதிலாக பெரிய தூப கோயிலுக்குச் சொந்தமாக இருப்பதாகக் கண்டுபிடித்தது.[11]
அகழ்வின் கண்டுபிடிப்புகள் நடைபாதை சாலைகள், சில செங்கல் மற்றும் பல களிமண் கட்டிடங்கள், தரை வெப்ப அமைப்புகள், படுக்கை அடுப்புகள், செம்பு, தங்கம், வெள்ளி, இரும்பு (இரும்புச் சக்கர மையங்கள் உள்ளிட்டவை), கண்ணாடி, நகைகள், எலும்புகள், மற்றும் பிர்ச் பட்டை, சீனா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து பீங்கான் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றின் செயலாக்கத்திற்கான சான்றுகள் உள்ளிட்டவையாகும். நான்கு சூளைகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டன.[12][13]
Remove ads
நவீன காலம்

கி.பி. 2004ம் ஆண்டில், பிரதம மந்திரி திசகியாகீன் எல்பெக்தோர்சு பண்டைய தலைநகரான கரகோரம் இருந்த இடத்தில் ஒரு புதிய நகரம் உருவாக்கும் ஒரு திட்டத்திற்கு ஒரு தொழிற்பண்பட்டவர்களின் பணிக் குழுவை நியமித்தார். அவரைப் பொறுத்தவரை, புதிய கரகோரம் முன்மாதிரி நகரமாக, மங்கோலியாவின் தலைநகராக மாறும் விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் இவர் இராஜினாமா செய்து, பிரதம மந்திரியாக மியீகோம்பைன் எங்போல்த் பதவியை ஏற்ற பிறகு, இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
உசாத்துணை
குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads