கெயில் (இந்தியா) நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெயில் (இந்தியா) நிறுவனம் (GAIL (India) Limited, முபச: 532155 , தேபச: GAIL , இ.ப.ச: GAID) புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயற்கை எரிவளியை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். இதன் முதன்மையான ஆறு பிரிவுகளாவன: இயற்கை எரிவளியையும் நீர்மநிலை பெட்ரோலிய வளி (LPG)யையும் எடுத்துச் செல்லும் சேவைகள், இயற்கை எரிவளி வணிகம், பெட்ரோகெமிக்கல்ஸ், எல்பிஜியும் நீர்ம ஐதரோகார்பன்களும், கெயில்டெல் மற்றவை.[2]
1984ஆம் ஆண்டில் ஆகத்து மாதம் இயற்கை எரிவளி கட்டுமான மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த நிறுவனம் காஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா என அறியப்பட்டது. பின்னர் இதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு கெயில் (GAIL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.
Remove ads
இயக்கம்
கெயில் 11,000 கி.மீ. தொலைவிற்கு எரிவளியை எடுத்துச் செல்ல குழாய் தொடரை நிர்மாணித்துள்ளது. மேலும் 1,900 கி.மீ. தொலைவிற்கு நீர்மநிலை பெட்ரோலிய வாயுவை எடுத்துச் செல்லும் குழாய்த்தொடரையும் கட்டமைத்துள்ளது. உலகிலேயே மிக நீளமான எல்பிஜி குழாய்த்தொடராக ஜாம்நகர்- லோனி குழாய்த்தொடர் விளங்குகிறது. இந்தியாவின் எரிவளி எடுத்துச் செல்லல் மற்றும் சந்தைப்படுத்துதலில் 70% பங்கை வகிக்கிறது.
துணை நிறுவனங்கள்
கெயில்டெல்
கெயில் இந்தியா நிறுவனத்தின் தொலைத்தொடர்புக்கான துணை நிறுவனமாக கெயில்டெல் நிறுவப்பட்டுள்ளது. முதன்மையாக கெயில் நிறுவனத்தின் உள்கட்ட தொலைத்தொடர்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இத்துணை நிறுவனம் தனது சேவைகளை வெளி நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இந்தியா முழுமையிலும் 13,000 கி.மீ தொலைவிற்கு ஒளியிழை கம்பி வடங்களை கட்டமைத்து இயக்கி பராமரித்து வருகிறது. இந்த ஒளியிழை வடங்கள் எரிவளி குழாய்த்தொடர்களை அடுத்து அமைக்கப்பட்டிருப்பதால் இதன் நம்பிக்கைத்தன்மை கூடுதலாக உள்ளது.
கெயில் காஸ் லிட்
கெயில் இந்தியாவின் மற்றொரு துணை நிறுவனமான கெயில் காஸ் லிமிடெட் 2008ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. தானுந்துகளுக்கு இயற்கை எரிவளியையும் தானுந்து எல்பிஜியையும் அறிமுகப்படுத்தவும் பரவல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக இத்துணை நிறுவனம் உருவாக்கப்பட்டது. வீட்டுப் பயனுக்கும் குழாய்கள் மூலம் வழங்கலை ஊக்குவிக்கவும் இது துணை புரிகிறது.
மற்றவை
கெயில் இந்தியா நிறுவனம் நகரங்களில் எரிவளி பரவலுக்காக ஒன்பது கூட்டு முயற்சி நிறுவனங்களை நிறுவியுள்ளது.
Remove ads
விபத்து
சூன் 26, 2014இல் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நகரம் சிற்றூரில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு ஏற்றிச் செல்லும் குழாயில் ஏற்பட்டக் கசிவினால் தீப் பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் தீக்காயமடைந்தனர். 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயின.[3][4]
இவற்றையும் பார்க்கவும்
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads