சுந்தர காண்டம்

From Wikipedia, the free encyclopedia

சுந்தர காண்டம்
Remove ads

சுந்தர காண்டம் (Sundara Kanda) என்பது வால்மீகி இராமாயணத்தின் புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்குகிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் சுந்தர காண்டம், தகவல்கள் ...
Remove ads

வரலாறு

சுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றார்.

இலங்கைக்கு அனுமான் பறந்து செல்லும்போது இந்திரனால் அனுப்பப்பட்ட மைநாகம் என்னும் மலை அனுமனை கடலில் இருந்து மேலெழுந்து வழிமறித்தது. மலையை அரக்கன் என்றெண்ணி அனுமான் எட்டி உதைக்க, மைனாகம் தான் அரக்கன் இல்லை என்றும் இந்திரனால் அனுமனுக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டவன் என்று கூறி தன்மேல் சற்றுநேரம் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டது. அனுமான் மைநாகத்திற்கு நன்றி கூறி, எடுத்த காரியம் முடியும் வரையில் ஓய்வு எடுக்கமுடியாது என்று கூறி மலையைக் கடந்து சென்றார்.

பின்பு, சுரசை என்ற அரக்கி திடீர் என அனுமன் முன்பு தோன்றி, இந்த வழியில் யார் சென்றாலும் தன்னுள்ளே தான் செல்ல வேண்டும் என்று கூறி அனுமனைத் தடுத்தாள். அனுமான் தன் சக்தியைப் பயன்படுத்தி தன் உருவதைப் பெரிதாக்கிக் கொண்டே போனார். சுரசையும் தன் வாயை அனுமனின் உருவத்திற்கு ஏற்றார்போல் பெருக்கி வந்தது. திடீரென அனுமான் தன் உருவத்தை கட்டைவிரல் அளவிற்கு சட்டென குறைத்துக்கொண்டு சுரசையின் பெரிய வாயின் உள்ளே சென்று, தன் பெரிய வாயை சுரசை மூடுவதற்குள் வெளியே வந்து, 'இந்த வழியே யார் வந்தாலும் உன் வாய்க்குள் செல்ல வென்றும் என்று சொன்னாய். வெளியே வரக்கூடாது என்று நீ சொல்லவில்லை. உன் சொல்படி உன் வாய்க்குள் சென்றுவிட்டேன். இனிமேல் என்னைத் தடுக்க வேண்டாம்.' என்று சொல்லி சுரசையைக் கடந்து சென்றார்.

இதற்கு அடுத்தது, சிம்ஹிகா என்ற அரக்கி தனக்கு இருந்த ஒரு வரத்தைப் பயன்படுத்தி கடலில் விழுந்த அனுமனின் நிழலைப் பிடித்து அனுமனை இழுத்து அனுமனை விழுங்கினாள். அநுமன் சிம்ஹிகாவின் வயிற்றைக் கிழித்து அவளை வதம்செய்து வெளியே வந்து இலங்கையை அடைந்தார்.

இலங்கை நகரின் வாயிலில் இலங்கையைக் காவல் புரியும் லங்கினி என்ற அரக்கி அனுமனைத் தடுத்து நிறுத்தி எட்டி உதைத்தாள். அனுமனும் மீண்டும் எட்டி உடைக்க, லங்கினி அனுமனிடம், என்று தன்னை ஒரு வானரம் எட்டி உதைக்கிறதோ அன்று இலங்கையின் அழிவு ஆரம்பம் என்று பிரம்மா கூறியதைச் சொன்னாள். அணுமன் தன் உருவத்தை கட்டைவிரல் அளவிற்கு குறுக்கிக்கொண்டு இலங்கை நகருள் பிரவேசித்தார்.

இலங்கையின் அழகைக் கண்டு ஆச்சரியமும், கூடவே இராவணனின் தவறான செயல்களால் இந்த அழகு பொருந்திய இலங்கைக்கு என்ன தீங்கு நேருமோ என்று கவலையும் ஏற்பட்டது. இராவணனின் மாளிகை உட்பட அனைத்து மாளிகைகளிலும் சீதையைத் தேடினார். எங்கும் சீதையைக் காண முடியவில்லை.

அந்தப்புரத்தில் ராவணனின் மனைவியான மண்டோதரியைப் பார்த்து ராமன் சொன்ன பல நல்ல லக்ஷணங்கள் அவளிடம் இருப்பதைக் கண்டு அவள் தான் சீதையாக இருக்கக்கூடும் என்று கூட எண்ணினார் அனுமன். பின்பு, சீதையாக இருந்தால் இப்படி இராவணனின் அந்தப்புரத்தில் சுகபோகங்களை நிச்சயமாக அனுபவிக்க மாட்டாள். இது இராவணனின் மனைவியாக இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்.

கடைசியாக அசோகவனம் என்னும் அழகிய தோட்டத்தில் சீதையை அனுமன் கண்டார். இராமர் சொன்ன அடையாளங்கள் சரியாகப் பொருந்தியது. அது மட்டுமில்லாமல் அவள் முகத்தில் இருந்த சோகம், உதடுகள் முணுமுணுத்துக்கொண்டு இருந்த இராமனாமம் இவற்றைக்கண்டு அது சீதை என்று அனுமன் உறுதி செய்தார்.

அப்போது இராவணன் வந்து சீதையிடம் தன்னை மணந்துகொள்ளும்படி பலவாறு கெஞ்சியும், மிரட்டியும், இராமனை தூஷித்தும் பார்த்தான். சீதையோ இராவணனை துச்சமெனக்கருதி இராமனிடம் சரணடையச் சொல்லி புத்தி கூறினாள். இராமனைத் தவிர வேறு ஒருவரை எண்ணிப் பார்ப்பதில்லை என்றும் உறுதியாகக் கூறினாள். இராவணன் இன்னும் இரண்டு மாத காலம் சீதைக்கு அவகாசம் கொடுத்து, சீதையைக் காவல் காத்த அரக்கிகளிடம் சீதையின் மனதை மாற்றும் பணியைக் கொடுத்து சென்றார். சீதையின் மன உறுதியைக் கண்டு அனுமன் சிலாகித்தார்.

அரக்கிகள் சீதையை மிரட்ட, திரிசடை என்ற ஒரு நல்ல அரக்கி மட்டும் சீதைக்கு ஆறுதல் கூறினாள். இருந்தாலும் சீதை மற்ற அரக்கியர் யாரும் கவனிக்காத நேரமாகப் பார்த்து சுறுக்கிட்டு தன் உயிர்விட எத்தணிதாள். அப்போது அனுமன் அதைத் தடுக்க சாதுரியமாக ராமனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். 'அரக்கரின் கோட்டைக்குள் யார் ராமனின் புகழைச் சொல்வது!' என்று ஆச்சரியதுடன் சீதை தேட, அனுமன் மெதுவாக ராமனின் பேரைச் சொல்லிக்கொண்டே சீதைமுன் வந்தார்.

இராமரின் தூதன் தான் என்று சீதையிடம் விளக்கினார் அனுமான். ராமன் எவ்வாறு சுக்ரீவனை நண்பனாக்கி, அவர்க்கு வானர இராச்சியத்தைப் பெற்றுத் தந்தார் என்றும் எவ்வாறு சுக்ரீவன் அனுப்பிய படைகள் நான்கு திசைகளிலும் சீதையைத் தேடி வருவதையும் கூறி, கடைசியாக தான் ராமன் அனுப்பிய தூதனே என்று சான்று காட்டும் விதமாக, இராமர் கொடுத்த கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்தார். சீதையும் அனுமன் மீது முழு நம்பிக்கை ஏற்பட, தனது நெற்றிச் சூடாமணி நகையை அனுமாரிடம் அடையாளமாகக் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.[4]

இராவணனை நேரில் சந்தித்து அவனுக்கு புத்தி  கூற முடிவு செய்தார் அனுமன். அசோகவனத்தில் உள்ள மரங்களை அனுமன் சேதம் செய்ய, காவல் செய்து கொண்டிருந்த ராக்ஷஸர்கள் அநுமானைக் கொல்ல வந்தனர். அவர்களை அனுமனே வதம் செய்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி, பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர்.[5]

இராவணன் மகனான இந்திரஜித் அனுமனை ப்ரம்மாஸ்திரத்தைக் கொண்டு கட்டி இராவணன் முன்பு அழைத்துச் சென்றான். ப்ரம்மாஸ்திரத்தை முறிக்கும் சக்தி அனுமனுக்கு இருந்தாலும், பிரம்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் ப்ரம்மாஸ்திர தளையிலிருந்து விடுபடவில்லை. இராவணனிடம் அனுமன் நல்புத்தி கூறினாலும், இராவணன் அதை ஏற்காமல் அனுமன் வாலுக்கு தீ வைய்க்க உத்தரவு இட்டார்.  அனுமன் வாலில் இருந்த நெருப்பு மொத்த இலங்கையையும் எரிக்க, அசோகவனம் மட்டும் எந்த சேதமும் ஆகாமல் இருந்தது. மீண்டும் சீதாதேவியை தரிசனம் செய்து அவரிடம் ஆசி பெற்று கடல் கடந்தார்.

பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.

அதன் பின் கடல் வழியாக இலங்கைச் செல்ல நீலன் மற்றும் நளன் தலைமையில் வானரர்கள் கடற்பாலம் கட்டினர்.

Remove ads

சுந்தர காண்டப் பாராயணம்

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads