உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1] இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.[2][3] இது உலகின் பழமையான சிவன் கோயில் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]
Remove ads
அமைவிடம்
- மதுரை - மண்டபம் சாலையில் இராமநாதபுரத்திலிருந்து மேற்கே 10 கி.மீ.
- பரமக்குடியிலிருந்து கிழக்கே 32 கி.மீ.
சிறப்பு
இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிடும் அளவுக்குப் பெருமை வாய்ந்த திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.
இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.
இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாற்றப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு./[சான்று தேவை]
Remove ads
கோயில் அமைப்பு
இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலபைரவர் துணைக்கோயில்களும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட அரசகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளன. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபுவழி அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[5]
பூசைகள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] சித்திரை, மார்கழி மாதம் 8ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு நீராட்டுகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் சித்திரைத் தேரோட்டம் நடைபெறுகிறது. காரணாகம முறைப்படி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தக் கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபடுவதற்காகத் திறந்திருக்கும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads