த. இராமராவ் (நிர்வாகி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சாவூர் இராம ராவ் (Tanjore Rama Rao) (1831 - 1895 சூன் 5) இவர் ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் 1887 முதல் 1892 வரை திருவிதாங்கூர் திவானாக பணியாற்றினார். வீ.நாகம் அய்யா, தனது 1906 திருவிதாங்கூர் மாநில கையேட்டில் இவரை "சமீபத்திய காலங்களில் மிகவும் பிரபலமான திவான்" என்று அழைக்கிறார். இராம ராவ் ராஜா சர் த. மாதவ ராவ் மற்றும் திவான் பகதூர் ஆர்.ரகுநாத ராவ் ஆகியோரின் உறவினர் ஆவார். இவர்கள் மூவரும் குண்டோபந்த் என்பவரின் பேரன்கள். இராம ராவின் தாய் சோனம்மா பாய் குண்டோபந்தின் மகள் ஆவார். திவான் பகதூர் ஆர். இரகுநாத ராவின் தந்தை இராய் ராய ராய் வெங்கட் ராவ் மற்றும் சர் த. மாதவ ராவின் தந்தை இரங்கா ராவ் குண்டோபந்தின் மகன்கள் ஆவர்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
இராம ராவ் 1831 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஒரு தஞ்சாவூர் மராத்தி தேசஸ்த் பிராமண குடும்பத்தில் முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்த சகாராம் ராவுக்கு பிறந்தார். இவரது முன்னோர்கள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் கும்பகோணத்தில் (தஞ்சை இராச்சியம்) இருந்து திருவிதாங்கூர் இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தனர். இராம ராவ் தனது பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள ராஜாவின் இலவச பள்ளியிலும், நாகர்கோயிலில் எல்.எம்.எஸ் பள்ளியிலும் பயின்றார். கல்வியை முடிந்ததும், ராமராவ் திருவிதாங்கூர் அரசு சேவையில் நுழைந்து எழுத்தராக பணியில் சேர்ந்தார். இவருக்கு பதவி உயர்வு கிடைக்காதபோது, எழுத்தர் பணியை விட்டு வெளியேறி, கோலிகோட்டில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக ஒரு பணியை ஏற்றுக்கொண்டார். 1857 ஆம் ஆண்டில், கல்குளத்தின் வட்டாட்சியராக இராமராவ் நியமிக்கப்பட்டார். பின்னர், தலைமை நீதிமன்றத்தில் முதல் துணை வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றார். இவர் 1862 இல் கொல்லம் பிரிவின் துணை தலைமைக் கணக்காளர் ஆனார்.
Remove ads
பணிகள்
இராம ராவ் திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டபோது 1862 முதல் 1878 வரை கொல்லம் பிரிவிலும் பின்னர்,1878 முதல் 1887 வரை கோட்டயம் பிரிவிலும் துணை தலைமைக் கணக்காளராகவும், பணியாற்றினார். இவரது பரிந்துரைகளின் அடிப்படையில் [1], மகாராஜா மூலம் திருநாள் 1888 மார்ச் 30 அன்று ஒரு சட்டமன்றக் குழுவை அமைக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார் [2] [3] . சட்டமன்றக் குழு முதன்முறையாக 1888 ஆகத்து 23 அன்று திவானின் அறைகளில் கூடியது. [4] மேலும் திருவிதாங்கூர் இராச்சியம் இந்திய மாநிலங்களில் சட்டமன்றக் குழுவைக் கொண்ட முதல் நாடாக ஆனது [5] மற்றும் அத்தகைய நிறுவனத்தின் மதிப்பை அங்கீகரித்தது. [6]
அரசுப் பணியின் ஆரம்ப நாட்களிலிருந்தே இராமராவ் தனது நேர்மைக்காக அறியப்பட்டார். அப்போதைய சென்னையின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு திருவிதாங்கூருக்கு வந்தபோது இவரது தனிப்பட்ட இல்லத்தில் அழைத்து கௌரவித்தார். [7]
1891 ஆம் ஆண்டில் இராமராவ் இந்தியப் பேரரசின் தோழராக அறிவிக்கப்பட்டார். [8] [9]
Remove ads
பிற்கால வாழ்க்கை
இராம ராவ் அறப்பணிகளையும் மேற்கொண்டார். 1894 திசம்பர் 4 ஆம் தேதி இன்றைய கொல்லத்திற்கு அருகிலுள்ள நெடுங்கோலத்தில் கிராமப்புற சமூகத்தின் ஏழை மற்றும் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சேவை செய்வதற்காக இவர் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு மருத்துவமனையை கட்டினார். அதை நிர்வகிக்க இலண்டன் தொண்டு நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டார். புகழ்பெற்ற எவரெஸ்ட் மலையேறுபவரும், அறுவை சிகிச்சை நிபுணரும், ஓவியரும் மற்றும் மருத்துவருமான ஹோவர்ட் சோமர்வெல் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்தார். [10] கடந்த 123 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை ஒரு பெரிய ஸ்தாபனமாக வளர்ந்துள்ளது. தற்போது கேரள அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையால் நடத்தப்படுகிறது. அவர்கள் இதற்கு "இராம ராவ் நினைவு வட்ட மருத்துவமனை" என்று மறுபெயரிட்டுள்ளனர் [11]
குடும்பம்
இராம ராவின் மகள், சௌந்தர பாய், இராஜா சர் த. மாதவ ராவின் மகன் த. ஆனந்த ராவ் என்பவரை மணந்தார். இவர் 1909 முதல் 1912 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாக இருந்தார். [12]
இறப்பு
இராம ராவ் 1895 சூன் 8, அன்று திருவனந்தபுரத்தில் இறந்தார். மேலும் "ஹில்-வியூ" என்ற இவரது இல்லத்தின் பரந்த மைதானத்தில் தகனம் செய்யப்பட்டார்.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads