பீமாசங்கர் கோயில்
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீமாசங்கர் கோயில் (Bhimashankar Temple) என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், அம்பேகாவ்ன் தாலுகாவில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது.
இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
பெயர்க் காரணம்
பீமன் என்ற அரக்கனை அழக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவமால் பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.
தொன்மவியல்
கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான். இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.
அதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர். கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார். இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார். இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார். அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்கத்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
Remove ads
வரலாறு
பழங்காலந்தொட்டு மலைவாசிகளால் வழிபட்டுவந்த இக்கோயில், அவ்வப்போது பகுதிபகுதியாக கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஷ்வா காலங்களில் கோயில் முழுமை பெற்று, வைதீக முறைப்படி வழிபாடு தொடங்கிதாம். கோயிலின் சிகரங்களும் சபா மண்டபமும் 18ஆம் நூற்றாண்டில் நாநாபட்டனவீஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1733 இல் சிம்மானாஜி சுந்தாஜி பிடேநாயக் என்ற குறுநில மன்னரால் கோயில் பலவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரகுநாத பேஷ்வாவினால் கோயிலின் பின்பக்கத்தில் அகண்ட கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி கரோகி என்ற சிற்றூரை கோயிலுக்கு கொடையாக அளித்துள்ளார்.
அமைப்பு

இக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமானதுக உள்ளது. கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன. வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கப்படுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார். பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர். கோயில் வளாகத்தில் சனின் சிற்றாலயம் அமைந்துள்ளது.
Remove ads
தங்கும் வசதி
கோயிலின் அருகே ஊர் ஏதும் இல்லாததால் கோயிலுக்கு அருகில் தங்கும் வசதியும் உணவு வசதியும் இல்லை. மஞ்சாறு அல்லது பூனாவில்தான் தங்கவேண்டும்.
வெளி இணைப்புகள்
- பீமாசங்கர்
- மகாராட்டிர சுற்றுலாத்துறை இணையதளம் பரணிடப்பட்டது 2008-07-06 at the வந்தவழி இயந்திரம்
- புனே அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2009-06-04 at the வந்தவழி இயந்திரம்
வார்ப்புரு:புனே மாவட்டம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
