பெஞ்சமின் பிராங்கிளின்
ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin); (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளரும் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.
Poor Richard's Almanack என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளைச் செய்து இடி தாங்கியையும், இரட்டைக் குவியக்கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.[1] அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க விடுதலைப் பேரறிக்கையை இயற்றிக் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.[2]
Remove ads
இளமை
பிராங்கிளின், 1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.[3] மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாகப் பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தயாரித்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்கிளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.[4] பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்
Remove ads
எழுத்தும் அச்சுத்தொழிலும்
பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அவருடைய அந்தப் பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் விடுதலைப் பேரறிக்கையை எழுதும் ஆற்றலை அவருக்குத் தந்தது. அவருக்கு வாசிப்பில் இருந்த ஆர்வம் காரணமாகவே, அவரது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனைப் புத்தகங்களையும் படித்துத் தீர்த்து இன்பம் கொள்வார். அவர் நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் கைவசப்பட்டது.[5] பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறிப் பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.[6]
Remove ads
இதழியலாளர்
1720 ஆம் ஆண்டு, பிராங்கிளின் பென்சில்வேனியா கெசட் (Pennsylvania Gazette) என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து புவர் ரிச்சர்ட்ஸ் அல்மனாக் (Poor Richard's Almanack) என்ற இதழைத் தொடங்கினார்.[5] மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ்தான் அவருக்குச் செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.[7]
கண்டுபிடிப்பாளர்
அறிவியல்
பிராங்கிளின் அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. அவர் குறைவான எரிமத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பைக் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்குச் செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். அவருடைய கருத்து ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டாலும், அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாகப் புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.
பிராங்கிளின் மின்சாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு மின்னலில் கூட மின்னிலையாற்றல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.[8][9] கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது; அதேபோல், மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைப் பட்டம் ஆய்வின் மூலம் நிறுவினார்.[10][11] மின்னல், இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.[12] முதியவர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் ஒரே கண்ணாடியான இரட்டைக் குவியக்கண்ணாடி பிராங்கினின் கண்டுபிடிப்பாகும்.[1] தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை.[13] மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம்.[14]
Remove ads
பிற துறைகள்
அறிவியல் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்த பிராங்கிளின், காகிதப் பணத்தின் இன்றியமையாமையை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார்.[15][16] சந்தா முறையில் நூல்களை வாங்கிப் படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தார்.[17] பிலடெல்பியாவின் அஞ்சல் துறையின் பல மாற்றங்களைச் செய்து தற்கால அஞ்சல் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார்.[18][19]
1730-ஆம் ஆண்டு, நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புதத் திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார்.[20][21] அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது.[22][23] இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. பிராங்கிளின், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார்.
Remove ads
அரசியல்
பிராங்கிளின் ஓர் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அரசு அவரைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியத.[24] அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் எனப் பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார்.[25] அவர் தன் அரசியலறிவைப் பயன்படுத்தி, இங்கிலாந்தின் குடியேற்றவாத ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு விடுதலை கிடைக்க பிரான்சின் உதவியைப் பெற்றார்.[26] அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த பிரான்சும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது; அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பைப் பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.[27]
Remove ads
சிறப்பு
அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகு முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் படமும் மற்றொன்றில் பெஞ்சமின் பிராங்கிளினின் படமும் இடம்பெற்றிருந்தது.
மறைவு
பிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏறத்தாழ இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.[28][29]
பொன்மொழி
இன்றும் பல பேச்சாளர்கள் பெஞ்சமின் பிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
“ | இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள் | ” |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads