மக்கா
சவூதி அரேபியாவிலுள்ள ஒரு நகரம். இஸ்லாம் மதத்தின் முதன்மையான புனித நகரம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்கா (அரபி: مكّة المكرمة) அல்லது மக்கம் சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும் குறுக்கமான பள்ளத்தாக்கு ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 மீட்டர் 910 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் மெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[1][2].
நபிகள் நாயகம் இந்நகரிலேயே பிறந்தார். புனித அல்குர்ஆன் முதலில் இந்நகரிலேயே அருளப்பட்டது (குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது)[3][4]. இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான மஸ்ஜித் அல் ஹராம் (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்கா புனித காபாவின் (Kaaba) வீடு, முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதத் தலங்கள் காணப்படுகின்றன. மக்கா, நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களால் மிக நீண்டகாலமாக ஆட்சிசெய்யப்பட்டு வந்ததுடன், அவர்கள் இங்கு சுதந்திர ஆட்சியாளர்களாக செயற்பட்டுவந்தனர். இவ் ஆட்சிமுறை 1925இல் சவுதி அரேபியாவின் உருவாக்கத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில், மக்காவின் உள்கட்டமைப்பு மிகப்பிரமாண்ட அளவில் விரிவாக்கப்பட்டு காணப்படுகின்றது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக மக்கா, அஜ்வத் கோட்டை போன்ற சில வரலாற்றுக் கட்டமைப்புகளையும், தொல்லியல் தளங்களையும் இழந்துள்ளது[5]. வருடாந்தம் ஹஜ்ஜுடைய காலங்கள் உட்பட ஏறத்தாழ 15 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவுக்கு செல்கின்றனர். இதன்விளைவாக மக்கா, முஸ்லிம் உலகின் மிகவும் பரந்தநோக்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது[6].
Remove ads
சொற்பிறப்பு மற்றும் பயன்பாடு
இந்நகரத்தின் பெயர் தமிழில் 'மக்கா' என மொழிபெயர்க்கப்படுகின்றது. இந்நகரின் முழுமையான அதிகாரப்பூர்வ பெயர் 'மக்கா அல்-முகர்ரமா' (مكة المكرمة) ஆகும். இதன் கருத்து 'மதிப்புமிக்க மக்கா' என்பதுடன், இது பொதுவாக 'புனித நகர் மக்கா' எனவும் மொழிபெயர்க்கப்படுகின்றது.
பண்டைய காலத்தில் அல்லது ஆரம்பத்தில் இந்நகரம் 'பக்கா' என அழைக்கப்பட்டது.[7][8][9] மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் குர்ஆனின் 3:96 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. அதேவேளை, மக்கா என குர்ஆனின் 48:24 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது.[10]
Remove ads
அரசாங்கம்
மக்கா மாநகர ஆட்சியால், மக்கா நிர்வகிக்கப்படுகின்றது. உள்ளூரில் 14 உறுப்பினர்கள் மக்கா மாநகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மேயர் (அல்-அமீன் என அழைக்கப்படுகின்றது) தலைமை வகிப்பதுடன், சவூதி அரேபியா அரசாங்கத்தால் மேயர் நியமிக்கப்படுகிறார். மக்கா நகரின் தப்போதைய மேயர் உஸாமா அல்-பார் ஆவார்.[11]
மக்கா மாகாணத்தின் தலைநகரம் மக்காவாகும். இது அண்டை ஜித்தாவையும் உள்ளடக்கியது. மக்கா மாகாணத்தின் ஆளுநராக இளவரசர் அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் (கி.பி.2000 முதல் 2007 வரை) அவர் மரணிக்கும் வரை செயற்பட்டார்.[12] 16 மே 2007இல் காலித் அல்பைஸல் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[13]
Remove ads
வரலாறு
ஆரம்ப வரலாறு

இஸ்லாமிய மரபு மக்காவின் ஆரம்பத்தை நபி இஸ்மாயீலின் வழித்தோன்றல்களின் பண்புகளில் காட்டுகின்றது. மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் மேற்கோளாக குர்ஆனின் சூரா 3:96ஆம் அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. கி.மு 60-30 இடைப்பட்ட காலத்தில் வாழந்த கிரேக்க வரலாற்றாசிரியரான டொய்டோரஸ் சிகுலுஸ் (Diodorus Siculus) பிப்லிஒட்சக்கா ஹிஸ்டரோரிக்கா (Bibliotheca historica) என்ற புத்தகத்தில் அரேபியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பற்றி ஒரு புனித ஆலயம் என விபரிக்கிறார். அது முஸ்லிம்களால் நோக்கப்படும் மக்காவில் உள்ள காபாவை குறிக்கின்றது. "மற்றும் அங்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது. அது மிகவும் புனிதமாகக் காணப்படுகின்றதுடன், அரேபியர்களால் மதிப்புக்குரிய இடமாகவும் போற்றப்படுகின்றது.[14] தொலமி "மக்கோரபா" என மக்கா நகரை அழைத்திருக்கலாம். எனினும் அது அடையாள சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.[15] சமரித்தன் இலக்கியத்தில் மக்கா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் நூற்றாண்டில் குரைசியர் மக்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், திறமையான வியாபாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் மாறினர். ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதயில் மூன்று பெரும் குடியேற்றங்கள் காணப்பட்டன. இவற்றின் தென்மேற்கு எல்லைகளாக செங்கடலின் கடற்கரைப்பகுதி காணப்பட்டது. செங்கடலுக்கும்,கிழக்குப் பகுதியின் மலைகளுக்கும் இடையில் ஒரு குடியிருக்கத்தக்க பிரதேசம் அமைந்திருந்தது. மக்காவை சுற்றியுள்ள பகுதி ஒரு தரிசு நிலமாகக் இருந்தபோதிலும், செல்வச்செழிப்புள்ள மூன்று குடியேற்றங்களுடன் அதிகமான தண்ணீரைக் கொண்ட புகழ்பெற்ற 'ஜம்ஜம்' கிணற்றை உடைய பகுதியாக காணப்பட்டது. பெரும் ஒட்டக வியாபாரக்கூட்டங்களின் பாதைகள் மக்கா ஊடாக அமைந்திருந்தது.
ஒட்டக வியாபாரக்கூட்டங்கள் முதலில் நபிகள் நாயகத்தின் முப்பாட்டனாரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது மக்காவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பகுதியாக காணப்பட்டது. ஏனைய கண்டங்களிலிருந்து பொருட்கள் மக்கா ஊடாகவும் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக் கணக்குகளின் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் தூரகிழக்கிலிருந்து மக்கா ஊடாக சிரியாவுக்கு வாசனைத்திரவியங்கள், தோல், மருந்து, துணி மற்றும் அடிமைகள் கொண்டுசெல்லப்பட்டதுடன் இதற்குபகரமாக பணம், ஆயுதங்கள் மற்றும் தானியங்கள் என்பன மீள மக்கா பெற்றுக்கொண்டது. இப்பொருட்கள் அரேபியா முழுதும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
தமூதிக் கல்வெட்டுக்கள்
ஜோர்தானின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில தமூதிக் கல்வெட்டுக்கள் "அப்த் மக்கத்" (இதன் தமிழ் கருத்து, மக்காவின் ஊழியன்) போன்ற தனிநபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது.[16] மேலும் சில கல்வெட்டுகளில் 'மக்கி'(மக்காவாசி) போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. எனினும் மக்கா என்ற பெயருடைய கோத்திரத்தார் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பக்தாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜவ்வாத் அலி குறிப்பிடுகின்றார்.[17]
பாரம்பரியம்
இஸ்லாமிய பாரம்பரியத்தின் கருத்தின்படி, மக்காவின் வரலாறு நபி இப்ராஹிமை பின்னோக்கிச் செல்கின்றது. இவர் கி.மு.2000 வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த மகன் இஸ்மாயில் உதவியுடன் காபாவை கட்டினார்.
முஹம்மத் நபி மற்றும் மக்காவெற்றி
முஹம்மத் நபி மற்றும் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கும் 628 இல் மக்கா நகருக்குப் புனித யாத்திரிகைக்காக நுழைய வேண்டியிருந்தது. எனினும் குறைசிகள் அவர்களைத் தடுத்தனர். பின்னர், முஸ்லிம்களும் மக்காவாசிகளும் ஹுதைபியா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதன்படி குறைசிகள் முஸ்லிம்களுடன் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அடுத்த வருடத்தில் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களை மக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் வாக்குறுதியளித்தனர். இது பத்து வருடங்களுக்கு செல்லுபடியான உடன்படிக்கையாகக் காணப்பட்டது. எனினும், இரண்டு வருடங்களில் குறைசிகள் ஒரு முஸ்லிம்கள் குழுவையும்,அவர்களது கூட்டணியையும் கொலைசெய்து ஒப்பந்தத்தை மீறினர். இதனைத்தொடர்ந்து, முஹம்மது நபியும், அவர்களது தோழர்களும் சேர்ந்த 10,000 பேர் கொண்ட பலமான படை மக்காவை நோக்கி அணிவகுத்துச்சென்றது. அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்கு மாறாக மக்கா நகர் முஹம்மது நபியிடம் சரணடைந்தது. முஹம்மது நபி, அந்நகர மக்களுக்கு சமாதானத்தையும், பொதுமன்னிப்பையும் பிரகடனப்படுத்தினார். அங்கிருந்த சிலைகள் அகற்றப்பட்டு, இறைவனை வணங்கும் இடமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இஸ்லாத்தின் புனிதஸ்தலமாகவும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனிதயாத்திரையின் மத்திய நிலையமாகவும் மக்கா பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், ஆகிப் இப்னு உஸைத் என்பவரை மக்காவின் ஆளுநராக நியமித்துவிட்டு முஹம்மது நபி மதீனாவுக்கு திரும்பினார். அவரின் ஏனையச் செயற்பாடுகள் அரேபிய தீபகற்பத்தில் ஒற்றுமைக்கு வழிவகுத்தது.
Remove ads
யாத்திரை
மக்காவுக்கான யாத்திரை உலகம் முழுதும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கவர்ந்துள்ளது. இரண்டு புனித யாத்திரைகள் காணப்படுகின்றன. அவை ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்.ஹஜ்,மக்காவிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை ஆகும். ஒவ்வொரு வயதுவந்த, உடல் ஆரோக்கியமுள்ள, உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் வசதியுள்ள ஆணும், பெண்ணும் அவரது வாழ்வில் ஒரு தடவை ஹஜ் யாத்திரை செய்வது கட்டாயமாகும். உம்ரா கட்டாயக் கடமையல்ல. ஆனால், இது குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[18] முஸ்லிம்களால் அடிக்கடி உம்ரா யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
Remove ads
புவியமைப்பு
மக்கா கடல் மட்டத்திலிருந்து 277 மீட்டரில் (909அடி) அமைந்துள்ளதுடன், செங்கடலிலிருந்து ஏறத்தாழ 80கிலோமீட்டர் (50 மைல்) தூரத்தில் நிலப்பகுதியில் அமைந்துள்ளது.[19]
காலநிலை
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads