மண்டோசோர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்டோசோர் அல்லது மண்டசௌர் (Mandsaur) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் போபாலிருந்து வடமேற்கே 254 கி மீ தொலைவில் உள்ளது. இந்நகரத்திற்கு அருகே கிபி 6ஆம் நூற்றாண்டு காலத்திய யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள் உள்ளது.
மால்வா மற்றும் மேவார் நிலப்பரப்புகளுக்கிடையே அமைந்த மண்டோசோர் நகரம் தொல்லியல் மற்றும் வரலாற்று மரபுரிமைச் சொத்துகளைக் கொண்டது. சிவனா ஆற்றின் கரையில் உள்ள மண்டோசோர் நகர பசுபதிநாதர் கோயிலும் புகழ் பெற்றது.[1] இந்நகரத்தில் இந்தி மற்றும் இராஜஸ்தானி மொழிகள் கலந்த மால்வா மொழி பேசப்படுகிறது.
கரும்பலகையில் எழுதுவதற்கான சிலேட்டுக்கல் (எழுதுகோல்) இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதியில் அபின் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Remove ads
பெயர்த் தோற்றம்
மால்வா பகுதியில் அமைந்த இந்நகரை முற்காலத்தில் தசபுரா என அழைக்கப்பட்டது. மண்டோசோர் நகரம், இராவணின் மனைவி மண்டோதரியின் பிறந்த ஊராக நம்பப்படுகிறது. இந்நகரத்தின் பழைய பகுதிகளில் இன்றளவும் இராவணனை வழிபடுகின்றனர். இந்நகரத்தின் பெண்னை மணந்தவர் என்பதால், இந்நகரத்தின் பழைய பகுதியான கான்புரா பகுதியில் 35 அடி உயர இராவணனின் உருவச்சிலை வழிபாடு நடைபெறுகிறது.
வரலாறு
மகாபாரதக் காலம்
மகாபாரத காவியத்தின் சபா பருவத்தின், அத்தியாயம் 31-இல், நகுலனின் மேற்றிசைப் போர்ப்பயணத்தின் போது மால்வா உள்ளிட்ட ஐந்து இனக்குழுவினர்களை வென்றதாக கூறப்பட்டுள்ளது.[2]
தசபுரத்தின் ஔலிகர்கள்
கல்வெட்டு குறிப்புகளின் படி, மண்டோசோர் எனப்படும் தசபுரத்தை ஔலிகர்கள் என்ற ஒரே பெயரை உடைய இரண்டு அரச வம்சங்கள் ஆண்டதாக தெரிகிறது. இவ்வம்ச மன்னர்களில் பாண்டுவர்மன் என்பவன் முதலாம் குமாரகுப்தன் காலத்தைச் சேர்ந்தவன்.
இந்நகர பட்டு நெசவுத் தொழிலாளர்கள் கட்டிய சூரியக் கோயிலை மண்டோசோர் மன்னர் பாண்டுவர்மன் கி பி 493-இல் சீரமைத்து கொடுத்துள்ளார்.
1983-இல் கண்டுபிடித்த யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுக் குறிப்பின் மூலம் ஔலிகர் வம்ச மன்னர்கள் மந்தோசௌர் உள்ளிட்ட மால்வா பகுதிகளை ஆண்டதாக குறிப்பிடுகிறது. இந்த ஔலிகர் வம்ச மன்னர்களில் புகழ் பெற்றவன் யசோதர்மன் ஆவார். யசோதர்மனும், குப்தப் பேரரசர் நரசிம்மகுப்தரும் இணைந்து, கி பி 528-இல் வடமேற்கு இந்தியாவை தாக்கிய ஹெப்தலைட்டுகள் என்ற வெள்ளை ஹூண மன்னர் மிகிரகுலனை வெற்றி கொண்டமைக்காக கி பி 532-இல் மந்தோசௌர் நகரத்தில் ஒரு வெற்றித் தூண் நிறுவப்பட்டது.[3][4]
யசோதர்மன் ஆட்சியில்


மண்டோசோர் நகரத்திலிருந்து 4 கி மீ தொலைவில் உள்ள சோந்தனி எனும் கிராமத்தில், இரண்டு ஒற்றைப்பாளத் தூண்கள் மன்னர் யசோதர்மனால் கி பி 528-இல் நிறுவப்பட்டது. இவ்வெற்றித் தூண்கள், வெள்ளை ஹூணர்களின் மன்னர் மிகிரகுலனை கொண்டதன் நினைவாக நிறுவப்பட்டது.[5][6] ஒவ்வொரு வெற்றித் தூணும் 40 அடி உயரமும், 3.5 அடி சுற்றளவும், 200 டன் எடையும் கொண்டது.[5][7] இவ்வெற்றித் தூண்களில் சமசுகிருதம் மற்றும் வட இந்திய பிராமி எழுத்தில் குறிப்புகள் உள்ளது.[8][9] நாகப்பா மற்றும் தாசப்பா எனும் இரண்டு தென்னிந்திய சிற்பிகள் இவ்வெற்றித் தூண்களை வடிவமைத்துள்ளனர். இத்தூண்களை பிரித்த்தானிய அதிகாரி சுல்வின் என்பவர் 1875-இல் கண்டுபிடித்தார்.
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர் இரண்டாம் மகேந்திரபாலர் தனது ஆட்சிப் பரப்பை மண்டோசோர் வரை விரிவுபடுத்தியிருந்தார்.[10]
சுதேச சமஸ்தானம்
இந்திய விடுதலை முன்வரை மண்டோசோர் பகுதி, 19-ஆம் நூற்றாண்டு முதல் குவாலியர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது.
Remove ads
மக்கள் தொகையியல்
மண்டோசோர் நகரத்தின் 2011 -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,41,667 ஆகும். அதில் ஆண்கள் 72,488; பெண்கள் 69,179 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 954 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் 107,478 (85.71 %) ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,267 ஆக உள்ளனர்.
இந்நகரத்தில் இந்துக்கள் 95,816 (67.63%); இசுலாமியர்கள் 35,531 (25.08 %); சமணர்கள் 9,119 (6.44%); சீக்கியர்கள் 500 (0.35%) ; கிறித்தவர்கள் 411 (0.29 %); மற்றவர்கள் 293 (0.20%) ஆக உள்ளனர்.[11]
இந்நகரத்தில் இந்தி மற்றும் இராஜஸ்தானி மால்வா மொழி மொழிகள் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads