மத்தியப் பிரதேசம்
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்தியப் பிரதேசம் என்பது மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை இம்மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்கள் ஆகும். இந்தி மொழி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும்.

Remove ads
புவியியல்
இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்ததால் இம்மாநிலம் மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்றது. மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. 2000ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் இம்மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதால் இச்சிறப்பை இழந்தது. மத்திய பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகியவை. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கிறது. நர்மதை நதி மத்திய பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது.
Remove ads
வரலாறு
பண்டைய வரலாறு

பொ.ஊ.மு. 6ஆம் நூற்றாண்டில் பண்டைய உஜ்ஜைன் பெரு நகரம், மால்வா எனப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக விளங்கியது. அவந்தி நாட்டின் வடக்கில் சேதி நாடு இருந்தது. சந்திரகுப்த மௌரியர் ஆட்சிக் காலத்தில் மகதப் பேரரசின் கீழ் மத்திய பிரதேசம் சென்றது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டில் சகர்களும், குசானர்களும், உள்ளூர் ஆட்சியாளர்களும் மத்திய பிரதேசத்தை ஆண்டனர்.
பொ.ஊ. 1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை, வடக்கு தக்காணத்தின் சாதவாகனப் பேரரசு மற்றும் சகர் குல மேற்கு சத்ரபதிகள் மத்தியப் பிரதேசத்தை கைப்பற்றி ஆளும் போரில் ஈடுபட்டனர்.
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் சாதவாகனர் குல மன்னர் கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர், மத்திய பிரதேசத்தின் மால்வா மற்றும் தற்கால குசராத்து பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த சகர்களை வெற்றி கொண்டார்.[6]
பொ.ஊ. 4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசு காலத்தில் மத்திய பிரதேசம் குப்தர்கள் ஆட்சியின் கீழ் சென்றது.
பொ.ஊ. 5ஆம் நூற்றாண்டு முடிய தக்காணத்தின் வடக்கில், குப்தப் பேரரசின் அருகில் அமைந்த வாகாடகப் பேரரசு வங்காள விரிகுடா முதல் அரபுக் கடல் வரை பரந்திருந்தது. மத்திய பிரதேசமும் வாகாடகப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது.
மத்திய கால வரலாறு

தானேசுவரம் நகரத்தை தலைநகராகக் கொண்ட ஹர்ஷவர்தனர், தான் 647இல் இறக்கும் முன்னர், மத்திய பிரதேசத்தை உள்ளடக்கிய வட இந்தியா முழுவதையும் ஹர்சப் பேரரசில் கொண்டு வந்தார். பொ.ஊ. 8 முதல் 10 நூற்றாண்டு முடிய, மத்தியப் பிரதேசத்தின் மால்வா எனும் அவந்தி பகுதிகளைக் கைப்பற்றி, தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடர்கள் ஆண்டனர்.[7] மத்திய காலத்தில் இராஜபுதனத்தின் இராசபுத்திர குலத்தின் பரமாரப் பேரரசு மத்திய இந்தியாவின் அவந்தி பகுதியிலும், புந்தேல்கண்ட் பகுதியில் சந்தேலர்களும் கைப்பற்றி ஆண்டனர்.
சந்தேலர்கள், கஜுராஹோ கோயில்களை கட்டினர். விந்திய மலைத் தொடரில் உள்ள கோண்டுவானா இராச்சியமும், மகாகோசல இராச்சியமும் உருவெடுத்தது.
பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் வடக்கு மத்திய பிரதேசம் தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது.
நவீன வரலாறு
அக்பர் (1556–1605) ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் முகலாயப் பேரரசில் வீழ்ந்தது.
1707இல் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசை, மராத்தியர்களும், இராசபுத்திரர்களும் கடுமையாக தாக்கி நலிவுறச் செய்தனர். பொ.ஊ. 1720–1760 இடைப்பட்ட காலத்தில், மராத்தியர்கள் மத்தியப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்கள் எனப்படும் மராத்தியப் படைத் தலைவர்கள் கைப்பற்றி பிரித்துக் கொண்டு ஆண்டனர்.
1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர், மராத்தியப் பேரரசின் விரிவாக்கம் நின்று விட்டது. மத்தியப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா அரசின் நேரடி ஆட்சியின் வந்தது. 1853இல் மத்திய பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி, மற்றும் மகாரஷ்டிராவின் கிழக்குப் பகுதிகள், மற்றும் சத்தீஸ்கர்|சத்தீஸ்கரின்]] பெரும் பகுதிகளை கொண்டிருந்த நாக்பூர் சுதேச சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தனர்.
Remove ads
இந்திய விடுதலைக்குப் பின்னர்
இந்தியப் பிரிவினைக்கு பிறகு 1950இல் நாக்பூரை தலைநகராகக் கொண்ட மத்திய இந்தியா முகமையின் பகுதிகள், புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா என்ற பேரர் சமஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கொண்டு மத்திய பாரதம், விந்தியப் பிரதேசம் உருவானது.
பின்னர் 1956இல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
நவம்பர் 2000ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளைக் கொண்டு, சத்தீஸ்கர் எனும் புதிய மாநிலம் துவக்கப்பட்டது.
மாவட்டங்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தை நிர்வாக வசதிக்காக போபால் கோட்டம், சம்பல் கோட்டம், குவாலியர் கோட்டம், இந்தூர் கோட்டம், ஜபல்பூர் கோட்டம், நர்மதாபுரம் கோட்டம், ரேவா கோட்டம், சாகர் கோட்டம், ஷாடோல் கோட்டம் மற்றும் உச்சையினி கோட்டம் எனப் பத்து கோட்டங்களில் பின் வரும் 52 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.
போபால் கோட்டம்
சம்பல் கோட்டம்
குவாலியர் கோட்டம்
இந்தூர் கோட்டம்
ஜபல்பூர் கோட்டம்
நர்மதாபுரம் கோட்டம்
ரேவா கோட்டம்
சாகர் கோட்டம்
ஷாடோல் கோட்டம்
உச்சையினி கோட்டம்
Remove ads
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்திய பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 72,626,809 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 72.37% மக்களும், நகரப்புறங்களில் 27.63% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.35% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 37,612,306 ஆண்களும் மற்றும் 35,014,503 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 931 பெண்கள் வீதம் உள்ளனர். 308,252 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 236 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 69.32% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.73% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.24% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,809,395 ஆக உள்ளது.[8] இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 46,19,068 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 66,007,121 (90.89%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 4,774,695 (6.57%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 213,282 (0.29%) ஆகவும் சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 151,412 (0.21%) ஆகவும் சமண சமய மக்கள் தொகை 567,028 (0.78%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 216,052 (0.30%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 599,594 (0.83%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 97,625 (0.13%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் பழங்குடி மக்களால் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
Remove ads
போக்குவரத்து
சாலைகள்
மத்தியப் பிரதேச மாநிலம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள் மாநிலத்தின் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தரைவழியாக இணைக்கிறது.
வானூர்தி நிலையம்
அகில்யாபாய் பன்னாட்டு விமான நிலையம் நாட்டின் மற்றும் பன்னாட்டு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. ஜபல்பூர், குவாலியர், கஜுரஹோ, ரட்லம், உஜ்ஜைன், சட்னா மற்றும் ரேவாவில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் இந்தியாவின் பிற நகரங்களை இணைக்கிறது.
தொடருந்து
போபால் தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது.[9]
Remove ads
எரிசக்தி
தனியார், இந்திய அரசு மற்றும் மத்திய பிரதேச அரசுகள், அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 16678.67 மெகாவாட் (செப்டம்பர் 2015) மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கொண்டுள்ளது.
Remove ads
அரசியல்
இம்மாநிலம் 230 சட்டமன்றத் தொகுதிகளும், இருபத்து ஒன்பது நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளும் கொண்டது.
பொருளாதாரம்
இம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013-2014-ஆம் ஆண்டில் ₹ 4,509 பில்லியனாக இருந்தது. 2013-2014-ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய் ஆண்டிற்கு ஐஅ$ 871.45 அமெரிக்க டாலராக இருந்தது.[11] இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் துறையே சார்ந்துள்ளது. இங்கு கோதுமை, சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், கரும்பு, நெல், நவதானியங்கள், பருத்தி, ஆமணக்கு, கடுகு, சோளம் பயிரிடப்படுகிறது. மேலும் காடுகளில் கிடைக்கும் மூலிகைச் செடி கொடிகள், பீடி இலைகள், எண்ணெய் வித்துக்கள், தேக்கு மர விதைகள் மற்றும் மரக்கட்டைகள் பழங்குடி மக்களின் மற்றும் கிராமியப் பொருளாதாரத்திற்கு வழு சேர்க்கிறது.
இம்மாநிலம் ஐந்து சிறப்பு பொருளாதா மண்டலங்களைக் கொண்டுள்ளது. அதில் இந்தூர் மற்றும் குவாலியரில் செயல்படும் மூன்று தகவல் தொழில் நுட்ப நிலையங்களும், ஜபல்பூரில் ஒரு கனிம வள தொழில் நுட்ப நிறுவனமும் மற்றும் ஒரு வேளாண்மை சார்ந்த தொழில் நுட்ப நிறுவனமும் அடங்கும். இந்தூர் மாநிலத்தின் மிகப்பெரிய வணிகச் சந்தையாக உள்ளது.
செம்பு மற்றும் வைர உற்பத்தியில் நாட்டில் முதன்மை மாநிலமாக உள்ளது. நிலக்கரி, மீத்தேன் எரிவாயு, மங்கனீசு, தோலமைட் போன்ற கனிம வளங்கள் கொண்ட மாநிலம்.
இம்மாநிலத்தின் ஜபல்பூர் மற்றும் கட்னி மாவட்டங்களில் ஆறு இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
உலகப் பாரம்பரியக் களங்களான சாஞ்சி, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் மற்றும் கஜுராஹோ இம்மாநிலத்தில் அமைந்துள்ளது. 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் மற்றும் ஓங்காரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. ஓர்ச்சா[12] குனோ வனவிலங்கு சரணாலயம் மற்றும் கன்ஹா தேசியப் பூங்கா பார்க்க வேண்டியவைகளாகும்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads