மு. இராகவையங்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 26 – 1960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார்.
Remove ads
பிறப்பு
இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26-ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார்.[1] இவர் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.
அவைக்களப் புலவர்
மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.[2]
தமிழாசிரியர்
பாண்டித்துரைத் தேவரால் 1901-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2] அப்பணியை 1912-ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.
1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]
1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார்.[2] 1951-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.
இதழாசிரியர்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார்.[2] இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3]
Remove ads
தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர்
செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.[2]
பதிப்பாசிரியர்
அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
வ.எண் | ஆண்டு | நூல் |
01 | 1910 | திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் |
02 | நரிவிருத்தம் அரும்பத உரையுடன் | |
03 | சிதம்பரப் பாட்டியல் உரையுடன் | |
04 | திருக்கலம்பகம் உரையுடன் | |
05 | விக்கிரம சோழனுலா | |
06 | சந்திரா லோகம் | |
07 | கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை | |
08 | 1936 | பெருந்தொகை |
09 | 1936 | திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ் |
10 | 1949 | அரிச்சந்திர வெண்பா |
11 | 1951 | கம்பராமாயணம் – பால காண்டம் |
12 | 1953 | திரிசிராமலை அந்தாதி |
13 | 1958 | கம்பராமாயணம் - சுந்தர காண்டம் |
Remove ads
நூல்கள்
மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:
வ. எண் | ஆண்டு | நூலின் பெயர் | பொருள் |
01 | 1905 | வேளிர் வரலாறு | வரலாறு |
02 | 1912 | தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி | திறனாய்வு |
03 | 1915 | சேரன் செங்குட்டுவன் | வரலாறு |
04 | 1924 | தமிழரும் ஆந்திரரும் | ஆராய்ச்சி |
05 | 1926 | ஆழ்வார்கள் காலநிலை | வரலாறு |
06 | 1929 | சாசனத் தமிழ்க்கவி சரிதம் | வரலாறு |
07 | 1938 | ஆராய்ச்சித் தொகுதி | இலக்கிய ஆராய்ச்சி |
08 | 1939 | திருவிடவெந்தை எம்பெருமான் | திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம் |
09 | 1947 | சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) | இலக்கிய ஆராய்ச்சி |
10 | 1948 | செந்தமிழ் வளர்த்த தேவர்கள் | வரலாறு |
11 | 1950 | Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes | |
12 | 1950 | இலக்கியக் கட்டுரைகள் | இலக்கிய ஆராய்ச்சி |
13 | 1951 | சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) | இலக்கிய ஆராய்ச்சி |
14 | 1958 | வினைதிரிபு விளக்கம் | இலக்கணம் |
15 | 1959 | கட்டுரை மணிகள் | இலக்கிய ஆராய்ச்சி |
16 | 1969 | தெய்வப் புலவர் கம்பர் | வரலாறு |
17 | இலக்கிய சாசன வழக்காறுகள் | வரலாறு | |
18 | நூற்பொருட் குறிப்பகராதி | ||
19 | நிகண்டகராதி |
Remove ads
சொற்பொழிவாளர்
மு. இராகவையங்கார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சில நூல்களாகவும் வெளிவந்தன. அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகள் சில:
வ. எண் | ஆண்டு | தலைப்பு | இடம் | தலைமை |
01 | 1929 | சாசனத் தமிழ்க்கவி சரிதம் | சென்னைப் பல்கலைக் கழகம் | உ. வே. சாமிநாதையர் |
02 | 1950 | காந்தளூர்ச் சாலை | திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் | சர். சி. வி. இராமன் |
03 | 1950 | சேரத் தமிழ் இலக்கியங்கள் | திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் | கோபால மேனன் |
04 | 1959 | தெய்வப் புலமை | சென்னை மாநிலக் கல்லூரி | தெ. பொ. மீனாட்சிசுந்தரம் |
05 | கம்பனின் தெய்வப் புலமை | காரைக்குடி கம்பன் கழகம் | சா. கணேசன் |
Remove ads
மறைவு
மு. இராகவையங்கார் தன்னுடைய 18-ஆம் அகவை முதல் 82-ஆம் அகவை வரை தமிழ்த் தொண்டாற்றி 1960 பிப்ரவரி 2 ஆம் நாள் மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.
சான்றடைவு
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads