எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
எடப்பாடி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும். 1951ம் ஆண்டிலிருந்து இது சட்டமன்ற தொகுதியாக உள்ளது. 1957 & 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்றத் தொகுதியாக இருக்கவில்லை.
இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தப்படியாக கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள், கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினரும் உள்ளனர்.[1] இத்தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 757 பேர், பெண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 597 பேர், மூன்றாம் பாலினத்தினர் 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 4 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் மற்றும் ஒருமுறை தோல்வியை தழுவினார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி க. பழனிசாமி 6வது முறையாகவும், திமுக சார்பில் த. சம்பத் குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா, அமமுக சார்பில் பூக்கடை என். சேகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
விவசாயமும் நெசவுத் தொழிலும்தான் இந்த பகுதியின் பிரதானமான தொழில்களாக இருக்கிறது. காவிரி ஆறு ஓடக்கூடிய எடப்பாடி பகுதியில் சுற்றிலும் ஏரிகளும், குளங்களும் உள்ளன. குறிப்பாக அரிய வகை பாறைகள் உள்ளன. காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள எடப்பாடி தொகுதியில் நெசவும், விவசாயமும் பிரதான தொழில்கள். கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி மற்றும் சுடிதார் உடைகள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.[2]