தோலாவிரா
From Wikipedia, the free encyclopedia
தோலாவிரா (Dholavira, குசராத்தி: ધોળાવીરા) என்பது, இந்தியாவின் மேற்கில் குசராத் மாநிலத்தில், கச் மாவட்டத்தில் உள்ள பாச்சோ தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது புஜ் நகரத்திலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. இத் தொல்லியல் களத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் தெற்குப் புறமாக அமைந்துள்ள தற்கால ஊரின் பெயரால் இக்களத்துக்குப் பெயர் ஏற்பட்டது. உள்ளூரில் இதற்கு கொட்டாடா டிம்பா என்ற பெயரும் உண்டு.
தோலாவிரா | |
---|---|
அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 23°53′10″N 70°13′30″E |
பண்பாடு | சிந்துவெளி நாகரிகம் |
நாடு | இந்தியா |
பகுதி | கட்ச் மாவட்டம், குசராத் |
பரப்பளவு | 1 km2 (0.39 sq mi) |
தோலா விரா கிராமம் கட்ச் பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், வளம் மிக்க மற்றும் கலாசார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர்.
தோலாவிரா நகரத்திற்கு அருகில் இரு பக்கங்களிலிலும் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் மான்சர் மற்றும் மான்கர் என இரண்டு ஆறுகள் பாய்ந்துள்ளது. இவ்வாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, ஆற்று நீரை தோலாவிரா நகரத்திற்கு திருப்பி, கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டிகள் கட்டமைத்து தங்களது நீர்த் தேவைகளை சமாளித்துள்ளனர். சுனாமி ஆழிப்பேரலை, தோலா விரா நகரம் அழியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கருதுகின்றனர்.[1]
இத் தொல்லியல் களம், சிந்துவெளி நாகரிகத்துக்கு உரிய அரப்பா பண்பாட்டின் அழிபாடுகளைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய ஐந்து ஹரப்பா தொல்லியல் களங்களுள் ஒன்றான தோலாவிரா,[2]நாகரிகத்துக்கு உரியதாக இந்தியாவில் அமைந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் களம்.
இதன் காலத்தில் இருந்த மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகவும் இது விளங்கியது.[3] கட்ச் பாலைவனக் கட்ச் பாலைவனக் காட்டுயிர்க் காப்பகத்துள் அடங்கிய, காதிர் பெட் தீவில் இருக்கும் இக் களத்தின் மொத்தப் பரப்பளவு 100 எக்டேர் (250 ஏக்கர்).[4] கிமு 2650ல் இருந்தே குடியேற்றத்தைக் கொண்டிருந்த இவ்விடம் கிமு 2100 அளவில் நலிவடையத் தொடங்கிற்று. குறுகிய காலம் கைவிடப்பட்டிருந்த இந்நகரம் மீண்டும் கிமு 1450 வரை இயங்கியது.[5]
1967-8 காலத்தில் ஜே. பி. ஜோசி என்பவர், எட்டு முக்கியமான அரப்பன் தொல்லியல் களங்களுள் ஐந்தாவது பெரிய இக்களத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆய்வகத்தின் கருத்துப்படி "தோலாவிரா சிந்துவெளி நாகரிகத்தின் ஆளுமைக்குப் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது".[6]