பகுதாது முற்றுகை (1258)
அப்பாசியப் பகுதாதுவைக் குலாகு முற்றுகையிட்டுத் தாக்கிச் சூறையாடிய நிகழ்வு / From Wikipedia, the free encyclopedia
பகுதாது முற்றுகை என்பது 1258ஆம் ஆண்டில் சனவரி 29 முதல் பெப்ரவரி 10 வரை நடைபெற்ற முற்றுகைப் போர் ஆகும். இக்குறிப்பிட்ட காலத்திற்குள் மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசுப் படைகள் மற்றும் கூட்டாளித் துருப்புகள் அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரான பகுதாதுவைச் சுற்றிவளைத்து, கைப்பற்றிச் சூறையாடின. மங்கோலியக் ககான் மோங்கேயின் தம்பியான குலாகுவின் தலைமையில் இந்த முற்றுகையை மங்கோலியர்கள் நடத்தினர். மோங்கே தனது ஆட்சியை மெசொப்பொத்தேமியா வரை விரிவுபடுத்த எண்ணினார். ஆனால் நேரடியாகக் கலீபா அல் முஸ்டசீமைப் பதவியிலிருந்து தூக்கி எறிய அவர் விரும்பவில்லை. ஈரானிலிருக்கும் மங்கோலியப் படைகளுக்கு இராணுவ உதவி வழங்குதல் மற்றும் ககானுக்குத் தொடர்ந்து அடிபணிதல் ஆகிய மங்கோலியக் கோரிக்கைகளுக்குக் கலீபா அல் முஸ்டசீம் மறுத்ததால் பகுதாதுவைத் தாக்குமாறு குலாகுவிற்கு மோங்கே அறிவுறுத்தினார்.
பகுதாது முற்றுகை (1258) | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி | |||||||
பகுதாதுவின் மதில் சுவர்களைக் குலாகுவின் இராணுவம் முற்றுகையிடுதல் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஈல்கானரசு (மங்கோலியப் பேரரசு)
| பகுதாதுவின் அப்பாசியக் கலீபகம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
படைப் பிரிவுகள் | |||||||
|
|
||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை. ஆனால் குறைவாகவே இருந்ததென நம்பப்படுகிறது. |
நிசாரி இசுமாயிலிகளின் பகுதிகளுக்கு எதிரான தாக்குதல் மூலம் குலாகு தனது போர்ப்பயணத்தைப் பாரசீகத்தில் தொடங்கினார். இசுமாயிலிகள் தங்களது வலிமையான அலமுத் கோட்டையை இழந்தனர். பிறகு பகுதாதுவை நோக்கி குலாகு அணிவகுப்பைத் தொடங்கினார். அப்பாசியர்களிடம் மோங்கே வைத்த கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளுமாறு அல் முஸ்டசீமிடம் குலாகு கோரினார். மங்கோலியப் படையெடுப்புக்கு எதிராக அப்பாசியர்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய போதும், பகுதாது படையெடுத்து வருபவர்களிடம் விழாது என அல் முஸ்டசீம் நம்பினார். சரணடைய மறுத்தார். இறுதியில் குலாகு நகரத்தை முற்றுகையிட்டார். நகரமானது 12 நாட்களுக்குப் பிறகு சரணடைந்தது.[8]
அடுத்த வாரத்தில் மங்கோலியர்கள் பகுதாதுவைச் சூறையாடினர். பல்வேறு அட்டூழியங்களைச் செய்தனர். நூலகப் புத்தகங்களின் அழிப்பு மற்றும் அப்பாசியர்களின் பெரிய நூலகங்களின் மீது ஏற்பட்ட அழிவு ஆகியவை எந்த அளவுக்கு ஏற்பட்டது என்பதில் வரலாற்றாளர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. மங்கோலியர்கள் அல் முஸ்டசீமைக் கொன்றனர். நகரத்தின் குடிமக்கள் பலரைக் கொன்றனர். இதன் காரணமாக அங்கு மக்கள் தொகைக் குறைவு ஏற்பட்டது. இசுலாமியப் பொற்காலத்தின் முடிவைக் குறிப்பதாக இந்த முற்றுகை அமைந்தது எனக் கருதப்படுகிறது. அக்காலத்தில் கலீபாக்கள் தங்களது ஆட்சியைச் சிந்து மாகாணம் முதல் ஐபீரிய மூவலந்தீவு வரை விரிவுபடுத்தி இருந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் கலாச்சாரச் சாதனைகள் செய்யப்பட்டிருந்தன.[9]