மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
இந்தியாவின், தமிழகத்தில், மதுரை நகரில் உள்ள, 'உலகப் பிரசித்திப் பெற்ற சிவாலயம்' / From Wikipedia, the free encyclopedia
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 9.919444°N 78.119444°E / 9.919444; 78.119444 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவாலவாய்[1], சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் |
பெயர்: | மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் |
ஆங்கிலம்: | Madurai Meenakshi Sundareswarar Temple |
அமைவிடம் | |
ஊர்: | மதுரை |
மாவட்டம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேசுவரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கநாதர், சொக்கேசர், ஆலவாய்நாதர் அல்லது ஆலவாய் அண்ணல், சாத்தப்பர்) |
தாயார்: | மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, கற்பகவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரி, சுந்தரேசுவரி, சுந்தரவல்லி, சொக்கி, சொக்கநாயகி, சோமவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி (மதுராராணி), மாணிக்கவல்லி, மும்முலைத்திருவழுதி மகள்) |
தல விருட்சம்: | கடம்ப மரம் |
தீர்த்தம்: | பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி |
ஆகமம்: | காரண ஆகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரைத் திருவிழா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 27 |
வரலாறு | |
தொன்மை: | 2000 முதல் 3000 வருடங்கள் |
வலைதளம்: | http://www.maduraimeenakshi.org |
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது.[2] இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.[2] அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைக்கின்றனர்.[2] இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.[2] இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.[2] இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.[2]