இலங்கைத் தமிழர்
இலங்கை தமிழர் / From Wikipedia, the free encyclopedia
இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் (Sri Lankan Tamils) என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத்தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவளித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய பரம்பரைத் தமிழரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் பொருட்டே வம்சாவளித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(3,000,000 (அண்.)) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இலங்கை 2,270,924 (11.21%) (2012)[1] | |
கனடா | ~300,000 (2007)[2] |
ஐக்கிய இராச்சியம் | ~120,000 (2007)[3] |
இந்தியா | ~100,000 (2005)[4] |
செருமனி | ~60,000 (2008)[5] |
பிரான்சு | ~50,000 (2008)[6] |
ஆத்திரேலியா | ~50,000 (2007) |
சுவிட்சர்லாந்து | ~50,000 (2008)[7] |
மலேசியா | ~24,436 (1970)[8] |
நெதர்லாந்து | ~20,000 (2008)[9] |
நோர்வே | ~10,000 (2000)[10] |
டென்மார்க் | ~9,000 (2003)[11] |
மொழி(கள்) | |
தமிழ் மொழி | |
சமயங்கள் | |
பெரும்பான்மையானோர் சைவ சமயம், மேலும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மை | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இந்தியத் தமிழர் · சிங்களவர் · வேடுவர் · போர்த்துக்கல் பரங்கியர் · |
பொதுப் பொருளில் இலங்கையில் குடியுரிமையுடைய, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே இலங்கைத் தமிழர் ஆதல் வேண்டும் எனினும், இலங்கையைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முசுலிம்கள் மொழிவழியே தம்மை அடையாளம் காண்பதில்லை. அவர்களை இலங்கை முசுலிம்கள் என வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் தமிழ் பேசும் முசுலிம்களும், முன்னர் குறிப்பிட்ட அண்மையில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட மலையகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர் என்னும் வகைப்பாட்டினுள் அடங்குவது இல்லை. பிரதேசம், சாதி, சமயம் முதலியன உள்ளிட்ட பல்வேறு கூறுளில், இலங்கைத் தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மொழியாலும், வேறு பல கூறுகளின் அடிப்படையிலும் ஒரே குழுவாக இலங்கையின் பிற இனத்தவரிடம் இருந்து தனித்துவமாகக் காணப்படுகின்றனர்.
1948ல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காலத்தில் இருந்து, தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே சிக்கல் இருந்து வருகிறது. அரசியல் உரிமைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் 1983க்குப் பின்னர் உள்நாட்டுப் போராக மாறியதால், இலங்கைத் தமிழர் பலர் இலங்கையை விட்டு வெளியேறி, இந்தியா அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ இலங்கைத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாழ்கின்றனர். 800,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்வதாகச் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர உள்நாட்டுப் போரில் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தும் உள்ளனர்.[12] 2009 ஆம் ஆண்டின் இறுதிகட்டப் போர் இலங்கைத் தமிழரின் பாரிய உயிரிழப்புகளுக்கும் உடமை இழப்புகளுக்கும் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துப் போரை நிறுத்திய போதிலும், இலங்கைத் தமிழரின் அடிப்படைச் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன.