உயிரணு மென்சவ்வு
From Wikipedia, the free encyclopedia
உயிரணு மென்சவ்வு அல்லது கலமென்சவ்வு (cell membrane) அல்லது முதலுருமென்சவ்வு (plasma membrane) எனப்படும் உயிரியச்சவ்வானது அனைத்து உயிரணுக்களின் முதலுருவை, அதன் புறவெளியிலிருந்துப் பிரிக்கின்றது[1]. இது தேர்ந்து ஊடுபுகவிடும் தன்மையைக் கொண்டது. அதாவது உயிரணு மென்சவ்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட அயனிகளும், கரிம மூலக்கூறுகளும் ஊடுருவத்தக்கதாக உள்ள பகுதி-ஊடுருவும் மென்சவ்வாக (semipermeable membrane) உள்ளதால் உயிரணுக்களின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிருந்து உள்ளேயும் பொருட்கள் ஊடுருவிச் செல்வதைக் கட்டுப்படுத்துகின்றது[2]. அடிப்படையாக, உயிரணுக்களை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உயிரணு மென்சவ்வு பாதுகாக்கிறது. இது கொழுமிய ஈரடுக்கில் புரதங்கள் பொதிந்ததாக தனது கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உயிரணு மென்சவ்வுகள் உயிரணு ஒட்டிணைவு (cell adhesion), அயனி கடத்துமை (ionic conductivity), உயிரணு சமிக்ஞை (cell signaling) முதலிய உயிரணுச் செயல்முறைகளிலும், கலச்சுவர், கலப் புறவெளி பல்பகுதியக் கிளைக்கோப்புரதம் (Glycocalyx), உயிரணுக்களுக்கிடையிலான கலச்சட்டகம்/ குழியவன்கூடு (Cytoskeleton) முதலிய பல்வேறு உயிரணு புறவெளி வடிவங்கள் இணையும் மேற்பரப்பாகவும் செயல்படுகிறது. உயிரணு மென்சவ்வுகளைச் செயற்கையான முறையில் மீள்தொகுப்புச் செய்ய முடியும்[3][4][5].