படியெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் படியெடுப்பு (Cloning) என்பது மரபியல் ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள், உயிரணுக் குழுக்கள் (இழையங்கள்), உயிரினங்கள் போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறையாகும்[1]. இயற்கையில் பாக்டீரியாக்களிலும், சில பூச்சிகள், தாவரங்களில், கலவியற்ற இனப்பெருக்கம் நிகழும்போதும் இவ்வகையான இனப்பெருக்கமே நிகழ்கின்றது. உயிரித் தொழில்நுட்பத்தில் படியெடுப்பு என்பது மூன்று வெவ்வேறு நிலைகளில் செய்யப்படலாம்.
- உயிரணுக்களின் மூலக்கூறுகளில் ஒன்றான டி.என்.ஏ. படியெடுப்பு என்பது மூலக்கூற்று படியெடுப்பு (Molecular cloning) எனப்படும்.[2]
- உயிரணுக்களின் படியெடுப்பு என்பது உயிரணுப் படியெடுப்பு (cell cloning) எனப்படும் (எ.கா. குருத்தணுப் படியெடுப்பு[3]). தனிக் கலங்களாகவன்றி உயிரணுக் கூட்டங்களாக, அதாவது இழையங்களாகவும் படியெடுப்பு நிகழும் (எ.கா. சில இழைய வளர்ப்பு முறைகள்[4][5]
- படியெடுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் புதிய தனியன்களை உருவாக்குதல்.
கலவிமுறை இனப்பெருக்கத்தில் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கலவியின் போது இணைவதால் உருவாகும் தனிக்கலமே பின்னர் பிரிவடைந்து செல்வதனால் பெருக்கமடைந்து முழு உயிராக பிரசவமாகிறது. இது விலங்குகளின் பொதுவான இயற்கை கருத்தரிப்பு ஆகும். இவ்வாறான கருத்தரிப்பின் போது தாயினதும் தந்தையினதும் இணைந்த குணங்களும் தோற்றங்களும் மரபு வழியாக குழந்தைக்கு கடத்தப்படுகிறது.
படியெடுப்பு இனப்பெருக்கம் எனும் போது கலப்பின் மூலமாக உருவாகும் உயிர்க்கலம் போலல்லாமல் நேரடியாக முதலாமவரின் உயிர்க்கலமொன்றை அவரின் உடலின் ஏதேனுமோர் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து அடுத்ததோர் பெண்ணின் கருவறையினுள் கருக்கட்டச் செய்வதாகும். இதனால் கருவைச் சுமக்கும் பெண்ணின் பரம்பரை அம்சங்களில் எதுவும் வாரிசுக்கு கடத்தப்படாது.மாறாக 100 வீதமும் முதலாமவரைப் ஒத்த உயிராகவே வளரும்.[மேற்கோள் தேவை]