பயிர்
From Wikipedia, the free encyclopedia
வேளாண்மைத் துறையில், பயிர் என்பது, உணவு, கால்நடைத் தீவனம் ஆகியவற்றைத் தரும் தாவரத்தைக் குறிக்கும். குறிப்பாக, இது வாழ்வதற்காகவோ அல்லது ஈட்ட (இலாப) நோக்கத்துக்காகவோ பேரளவில் பயிரிடப்படும் தாவரத்தையே குறிக்கும். சிலவேளைகளில் இது வளர்ப்பு விலங்கான கால்நடையையும் பூஞ்சை, நுண்ணுயிரிகளையும் குறிப்பதற்காகப் பயன்படுதலும் உண்டு.[1] நெல், கோதுமை, சோளம் போன்றவை உணவுக்காக பயிரிடப்படும் தாவரங்கள் ஆகும். பருத்திப் பயிர் ஆடைத் தொழிலுக்கு மூலப் பொருளான பஞ்சை விளைவிக்கப் பயிரிடப்படுகின்றது. மக்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை போன்ற பயிர்களும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய கவர்ச்சிகரமான வருமானத்துக்காகப் பயிரிடப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பயிர்கள் நிலத்திலோ நீரிலோ வேளாண்மை செய்யப்படுகின்றன. பயிர் (crop) காளானையும் பாசிவகையையும் உள்ளடக்கும்படி விரிவாக்கப்பட்ட சொல்லாகும். மிகப் பொதுவாக பயிர் மாந்தருடன் பயின்றுவரும் வளர்ப்பினங்கள் அனைத்தையும் குறிப்பதாகும்.
பெரும்பாலான பயிர்கள் மாந்தர் உணவாகவோ கால்நடையின் தீவனமாகவோ அறுவடை செய்யப்படுகின்றன. இதே நோக்கங்களுக்காக சில பயிர்கள் காட்டில் இருந்து செறிவாகத் திரட்டப்படலும் உண்டு. (எ.கா. கின்செங்.)
முதன்மை வாய்ந்த உணவல்லாத பயிர்களாக தோட்ட வளர்ப்புப் பயிர்களும் பூவளர்ப்புப் பயிர்களும் தொழிலகஞ் சார்ந்த பயிர்களும் அமைகின்றன. தோட்ட வளர்ப்புப் பயிர்களில் பழமரங்களும் அடங்கும். பூவளர்ப்புப் பயிர்களில் அழகுப் படுகைத் தாவரங்கள், வீட்டுத் தாவரங்கள், பூந்தோட்ட, குட வளர்ப்புத் தாவரங்கள், பூத்தொடுக்கும் இலைத் தாவரங்கள் ஆகியன அடங்கும். தொழிலகஞ் சார்ந்த பயிர்கள் உடைக்காகவும் நாரிழைக்காகவும் உயிர் எரிபொருளுக்காகவும் மூலிகைக்காகவும் பயிரிடப்படுகின்றன.