மூச்சுவிடல்
From Wikipedia, the free encyclopedia
மூச்சுவிடல் (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும்.[1] மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போன்றவை மூச்சியக்கத்தினூடாக "குளுக்கோசு" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு ஒட்சிசன் தேவை. இவ்வாறு உடற் கலங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.
வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு அல்லது நுண்ணறைகளுக்கு (alveoli) எடுத்துச் செல்லுதல் உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் காற்றுச் சிற்றறைகளிலிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் நீராவி வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் சாரீரப்பதன் 100%ஆக இருக்கும்.
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொக்சைட்டை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி குருதிச் சுற்றோட்டம் ஆகும். நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் குருதி மயிர்த்துளைக் குழாய்களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் தானூடு பரவல் மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில்/நுண்ணறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, மூச்சுத் தொகுதியூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.